புலித்தமிழா!

மாவீரர் தின வாழ்த்துகள்...!






உயிராயுதமாய்
வில்லோடு அம்பாய்
வீறுக்கொண்டுச் சென்று
வீரத்தை விதைத்து
சோழர் கொடியை
திக்கட்டும் பறக்கசெய்த
வெற்றிப்படையின் வேந்தனே!
ஓயாத அலைகளாய்
நம்தமிழ் புகழ்விதை தூவி
கரும்புலியாய் களத்திற்கு சென்றாய்
காலனிடம் கலந்துவிட்டாய்
எத்தனை காலம்கடந்தும் - என்
தமிழினம் காத்த கடவுளாய்
உன்னை நான் கண்டிருப்பேன்!

கடற்புலியாய் கடலுக்குள்ளே
கப்பலையே கவிழ்த்துவந்து
கயவனையும் கலங்கடித்தாய்.
மச்சவதாரமே உனக்கென்றும் மரணமில்லை
அதை மறக்க எனக்கும் மனமில்லை!
வான் புலியாய் வான்தேடி வட்டமிட்டு
போராளி இயக்கங்களின் பேரொளியாய்
முன்னோடி தமிழனென
வானோடி வலம்வந்து 

வான்புகழை வெளிக் கொணர்ந்தாய்!

போராட்டம் என்பதே
பொதுவான விசயமென்று போனபின்னே
எல்லா தோல்விகளையும்
தவிர்த்துவிட முடிவதில்லை...
ஏற்பட்ட தோல்விகளால்
ஒருபோதும் ஓரினம்கொண்ட லட்சியம்
தவிடுபொடி ஆகிவிட போவதுமில்லை!

ஈழத்தில் புதைக்கப்பட்ட உடல்கள்
மண்ணோடு மடிந்துவிட
வெறும் எலும்பும் சதையுமான
வெற்றுடலில்லையே...
குருதியால் மண்ணில் குளித்து
நரம்புகளால் வேராகி
எலும்புகளால் கிளையாக
விருட்சமாய் நிச்சயம் வெளிவரும்
சுததந்திர ஈழத்தின்
விடுதலை காற்றை சுவாசிக்க!

நெஞ்சில் விதைக்கப்பட்ட விதைகள்
முளைக்க தொடங்கும்போது
பல விதிகள் இங்கே
மாற்றி எழுதப்படும் - அன்று
தமிழனின் தலைவிதியும் முற்றாய்
திருத்தி எழுதப்படும்!

நிழலும் வெளிச்சமாகும்போது
இருளைக்கூட தேடித்தான்
பார்க்க நேரிடும்...
எங்கள் வாழ்வும் நிஜமாய்
மாறும்வேலையில்
நிர்கதியான நிலைமாறி
நிம்மதியாய் நித்திரை கொள்வோம்!
பகைவென்று
சுதந்திரகாற்றை சுவாசிக்க
சிறைவென்று சீற்றத்தோடு
பழிதீர்த்து நமக்கான வழிகாண
சபதமேற்போம் இந்நாளில்!

உன்னை மறக்கநினைக்கும்
மரத்துப்போன மனங்களை
உளுத்துப்போன வார்த்தைகளால்
என்னால் மன்றாட பிடிக்கவில்லை...
நீ கண்ட கனவு வீணாகபோகாது
நிச்சயமொரு நாள் ஈழம் மலராமல் போகாது
நிம்மதியாய் நீ உறங்கு
சுதந்திர ஈழத்தில் தமிழ் தேசியகீதத்தோடு
உன்னுறக்கம் நான் களைவேன்
அதுவரை உன் ஆன்மா ஈழத்திலே
சுழன்று கிடக்கட்டும் மாவீரா!

- இரா.ச.இமலாதித்தன்

திமிர் நிலம்!



ஏக்கத்தோடு வானம் பார்த்து
காத்துக்கிடந்தாலும்
நெஞ்சம் நிமிர்த்தி
திமிராய் அண்ணார்ந்து
பார்த்துக்கொண்டிருக்கிறது
எங்களது நிலமும்
எங்களை போலவே!

- இரா.ச.இமலாதித்தன்

யார் நீ?



வண்ணங்கள் நிரப்பிய பாத்திரத்தில்
தூரிகையை நனைத்தெடுத்து
குரலில் உன் உருவம் வரைந்தேன்...
வண்ணங்களில் என்ன நிறமென்று
வரையறுக்க முடியாத புத்தம்புது வடிவமாய்
என்மன காகிதத்தில் பிரதிபலித்தாய்...
இப்போதாவது சொல் நீ
காட்சிப்பிழையா...? கானல்நீரா...?

- இரா.ச.இமலாதித்தன்

காதல் மந்திரம்!




காந்தர்வம் உன் பெயரில் உள்ளதடி
ராது ஒலிக்கிறதே என்காதில் நித்தமடி
இதைத்தான் இரவில் என் கனவிலும்
உச்சரித்தேன் நானும் உன்மேல் பித்தனடி!

- இரா.ச.இமலாதித்தன்

சுவடுகள்!















பள்ளியில் படிக்கும்போதே
பட்டதாரி ஆகியிருந்ததாய்
காலங்களின் தழும்புகளாக
நான் காயப்படுத்திய சுவடுகள்
தென்பட்டு கொண்டிருக்கிறது
ஊரோர ஆலமரத்தில்! 

 - இரா.ச.இமலாதித்தன்

தன்னம்பிக்கை!




















வறண்டு போன மண்ணுக்குள்ளும்
இறந்து போகும் நாட்கள் எண்ணும்
ஒற்றை உயிரை வளர்த்தெடுக்க
வறண்ட நிலத்திற்க்குள்ளும்
வானில் விழிவைத்து
வேரின் வழித் தோண்டி
இதழ்கள் கரம் நீட்டி
புது வாழ்வை எதிர்நோக்கி
இருண்டு போனதொரு 
செடியின் பயணமும்
இனிதே தொடக்கமாகிறது 
தன்னம்பிக்கையுடன்!
                                          
 - இரா.ச.இமலாதித்தன் 

வழித்தடங்கள்!













 




தரிசு நிலங்களுக்கிடையில்
அவன் கடந்து செல்கின்ற
பல்வேறு திசையெங்கும் பரவி கிடக்கும்
ஒற்றை வழி பாதைகளின் 
தேய்ந்து போன கால் தடங்களெல்லாம் 
தன் மூதாதையர் விட்டுச்சென்ற வழியென்று
அவனுக்கு தெரிந்திருக்கலாம் - ஆனால்
அவனது காலணிக்குத்தான்
உணரும் பக்குவம் இல்லை
அவர்கள் பட்டுணர்ந்த வலியை...!

- இரா.ச.இமலாதித்தன் 

_

நீயொரு பகுத்தறிவாதியா?













 
கடவுளில்லையென்றாய்
புதிய பாதை இதுதானென்றாய்
பின்னொருநாள் மதம் பிடிக்காதென்றாய்
சாதியத்தை எதிர்த்தாய்
சடங்குகளை குறைச்சொன்னாய்
இந்து மதத்தை மட்டும் உமிழ்ந்து பேசி
கரவொலி வாங்கினாய்!

கண்டதையெல்லாம் பேசித்தீர்த்தாய்
காணாததையும் கண்டேனென்றாய்   
தானொரு பகுத்தறிவாதியென்றாய்
மதமும்,கடவுளும் பொய்யென்று
மேடைகளில் பரப்புரை பலசெய்தாய்!
 
பிரிவினையில்லாத மதமே இங்கில்லை
என்பதை அறிய மறுத்து அறிவிலியாய்...
வேறெந்த மதங்களையும் எதிர்க்க
திராணியில்லாத வாய்ச்சொல் வீரனாய்... 
தான்சார்ந்த இந்து மதத்தை மட்டுமே குறைக்கூறி
கூச்சலிட்டு குதூகலம் அடையும் 
குறுகிய புத்தியையும் வளர்த்துக்கொண்டாய்!

உன்னருகில் கடந்து போகும் தாசியை
பத்தினியென்று கண்மூடி கிடந்தாய்
உன்னை ஈன்றெடுத்தவள் புறக்கணித்ததால்
தன் தாயின் கற்பின் மீதே களங்கம் பேசி
மேடைகளில் தாசியென்று முழங்கினாய்!

சிலை வழிபாட்டை எதிர்த்தவனுக்கே
காக்கைகள் எச்சமிட
தெருவுக்கொரு சிலை வைத்து
அந்த தலைவனையே கடவுளாக்கிய
போலி பகுத்தறிவியாதிகளின்
இதுபோன்ற மூடச் செயல்களைக்கண்டு
புல்லரித்து புளங்காகிதம்
அடைகிறேன்!

பகுத்தறிவாதியென்ற போர்வையில்
உம் அறியாமையை நினைத்து
குழம்பி நிற்கிறேன் நான்... 

இப்போதாவது சொல்
உண்மையில் நீயொரு பகுத்தறிவாதியா...?



            - இரா.ச.இமலாதித்தன்

_

அன்பே சிவம்!



தலையில் தேங்காய் உடைப்பதையும்
பச்சிளம் குழந்தையை நெஞ்சினில் மிதிப்பதையும்
பார்த்து பக்தி பரவசமடையும் பாவப்பட்ட மனிதா- நீ
ஆண்டவனை திருப்தி படுத்துகிறேனென்று - போலி
ஆன்மீகத்தில் அடிமைப்பட்டு கிடக்கின்றாய்!
வாயிலிருந்து லிங்கம் எடுத்தவனையெல்லாம்
சிவனோடு ஒப்பிட்டு பழகிவிட்டாய்
மாயம் செய்யும் மந்திரவாதியெல்லாம்
ஞானம் தெளிந்த ஆன்மீகவாதியாய்
வேடம் போடும் நாட்டுக்குள்ளே - அவனை
வீணாய் நம்பி மதிகெட்டு நிற்கின்றாய்!
காவி உடுத்தியவனெல்லாம் உனக்கு
கடவுளாக தெரிந்து தொலைக்கிறானோ
உனக்குள்ளேயே எல்லாமும் இருப்பதை மறந்து
எவனோவொருவனின் காலை வருடுகிறாய்
மூளை உள்ளவன் தானே நீ
மூடநம்பிக்கையில் ஏன் முடங்கிக் கிடக்கிறாய்?
கடவுளென்று ஒன்றே இல்லையென்று
சொல்லி திரியும் கூட்டமும் கூட
இல்லாத இறைவன் இங்கே இருந்தால்
நல்லதென்றே சொல்கிறோமென்று
உரைக்கும் காலமிங்கே கனிந்து கொண்டிருக்க - நீ
கண்கட்டு வித்தைகளுக்கெல்லாம் விலைபோனால்
ஏமாற்றப்படுவதுதான் உனக்கான விதிப்பலன்!
பசியென்று கையேந்திவரும் வயோதிக கிழவனுக்கும்
உன்னைத்தேடிவரும் தகுதியுள்ள ஓர் இளைஞனுக்கும்
உதவி செய்ய மறுக்கும் மனவூனமுள்ள நீ
கோவிலின் உண்டியலில் கோடிக்கணக்கில் பணமும்
எடைக்கு எடை தங்கமும் தந்தென்ன லாபம்?
இறைவனை தேடி அலையும் உன் நெஞ்சுக்குள்
அன்பென்ற ஈரம் வறண்டு போய்விட்டதே - நீ
கோவில் குளங்கள் எங்கெங்கு சுற்றினாலும்
அன்பே சிவனென்று அறியாத வரை
போலி ஆசாமிகளால் முடக்கப்படுவாய்
பலவீனமான பக்தனாய்!

- இரா.ச.இமலாதித்தன்

பெண்ணொருத்தி!

(நான் ஆணாதிக்கவாதியென்ற மனப்பான்மையில் இருந்தாலும் வேலுநாச்சியார் போன்ற வீரமிக்க பெண்களையும் நினைவுபடுத்திக்கொண்டு இந்த மகளிர் தினத்தில் என்னுடைய ஒரு வாழ்த்தையும் பதிவு செய்கிறேன்.)

இனிய மகளிர் தின வாழ்த்துகள்!





ஆண்மகனாய் அவதாரமெடுக்க
தன்னுயிரை ஈந்து பிறப்பெடுக்கச் செய்து
எனக்கோர் புத்துயிர் கொடுத்தாள்
தாயாய் ஒருத்தி!
பள்ளிச்சென்ற பால்ய வயதில்
அடித்தும் அரவணைத்தும்
பாடம் புகட்டி வளர்தெடுத்தாள்
ஆசிரியையாய் ஒருத்தி!
கல்லூரி காலங்களில் கதைகள் பல பேசி
வகுப்புக்கு உள்ளும் வெளியும்
நட்போடு உடனிருந்தாள்
தோழியாய் ஒருத்தி!
வெளியூர் வந்து வேலைசெய்து
பிழைப்பை நடத்திய காலங்களிலும்
உடன்பணி புரிந்து என்னை ஆக்கிரமித்தாள்
காதலியாய் ஒருத்தி!
திருமணத்தால் கரம்பிடித்து
என் வாழ்க்கைக்குள் உட்புகுந்து

புதுப்பயணத்தை தொடக்கிவைத்தாள்
மனைவியாய் ஒருத்தி!
தந்தையென பதவிஉயர்வு கொடுத்து
என்னை பெருமித படுத்தி
பேரானந்தத்தையும் கொடுத்தாள்
மகளாய் ஒருத்தி!

- இரா.ச.இமலாதித்தன் 

சமூகவியல்!

 


01.
ஆங்கில பள்ளியை 

தேடி அலைந்தான் 
தன் மகள் தமிழ்செல்வி பாடம் கற்க!


02.

குடியிருக்க வீடில்லை
கூலித்தொழிலாளியாய்
கொத்தனார்!



03.

தீப்பெட்டி தொழிற்சாலையில்
சிறுவன் கண் கசக்க
மத்தாப்பூ சிரிக்கிறது!

04.


செதுக்கியவன் தொழிலாளி
திருடியவன் முதலாளி
சிலையாய் கடவுள்!



 - இரா.ச.இமலாதித்தன்

_

காதலால்!


 

01.

உன் இமைகளின் 
கதவை திற
எனக்கான 

காதல் குடியேறலாம்!


02.

கொடுத்தும் வாங்கியும்
கடன்பட்டே நிற்கிறேன்
உன்னிடம் என் காதல்!

03.


கானல் நீராகியது

பிரிவின் கண்ணீர்
 

காட்சிப்பிழையாய்
உன் வருகை! 


04.


உன் இருவிழி பார்க்கும் போது
முற்றிலும் துறக்க முடிவு செய்த
இந்த முனிவனின் தவம்
கனவாகி போனது!
05.

ஆயிரக்கணக்கான ஆசைகளை
உனக்காக சேமிக்கிறேன்
ஒவ்வொரு கவிதைகளிலும்!

06.


நாட்காட்டியில் ஒவ்வொரு தேதி 

கிழிக்கும்போதும்  
உன்னை சந்தித்த நாளே 

வந்து மறைகிறது
உன்காதலைப் போலவே!

07.

என் முகம் பார்க்கையில்
உன் முத்தத்தின் சுவடுகளை
ஞாபப்படுதுகிறது கண்ணாடி!


-இரா.
ச.இமலாதித்தன்

ஆன்மிகத்தொழில்!






தனக்கென புதுப்பெயரை தன்வசப்படுத்தி
பெயரின் முன்னும் பின்னும்
படித்து வாங்கிய பட்டம்போல - தனக்குதானே
அடைமொழியிட்டு அரசியல்வாதியாய்
ஆகிபோனான் ஆன்மிகவாதியென்று!
முகம் சிரம் முழுதும் முடியை வளர்த்து
தன்னைத்தானே முனிவனென்று
திரிந்திடும் கும்பல் அதிகமாகி போனப்பின்னே
ஆச்சாரமாய் ஆசிரமம் தொடங்கி
விபச்சாரம் நடத்தினான் விபூதி திலகமிட்டு!
சொற்பொழிவை உலகெங்கும் நடத்தி
செல்வ செழிப்பாய் வாழ்க்கை நகர்த்தி
காவி உடையை களங்கப்படுத்தும்
காம இச்சை தீராதவனெல்லாம்
தீர்க்கத்தர்சியனான் பக்தனால்!


தானே இறைவனென்று சுயபுகழ் தேடி
அருளைக்கொடுத்து பிரம்மனானவன்
பின்னொருநாள் சங்கடப்படப்போவது தெரியாமலேயே
படுக்கையை பகிர்ந்தான் நடிகைகளோடு
பிரம்மச்சாரியென்ற பகல்வேசமிட்டு!
கடவுள் பெயரால் செல்வம் சேர்க்கும்
கயவர்க்கூட்டம் நிரம்பிவழியும் நெரிசலிடையே
கண்டவனெல்லாம் கடவுளைக் கண்டேனென்று
தம்பட்டம் அடித்து பணம்கொழிக்கின்ற
வியாபார மையமானது ஆன்மிகத்தொழில்!

- இரா.ச.இமலாதித்தன்


காக்கைச் சிரிப்பினிலே!






பள்ளம் படுகுழி யெங்கும்
கருஞ்சிறுகற்களால் தாரூற்றி பூசப்பட்டு
சாலையெங்கும் பளபளப்பாய்
படர்ந்து கிடக்கிறது!
நகரமெங்கிலும் சாலையோரம்
பரபரப்புக்கு பஞ்சமில்லாமல்
பதற்றத்தோடு பரிதவித்து
காவல்துறை காத்துக்கொண்டிருக்கிறது!


முக்கியச்சாலையின் முச்சந்தியில்
முகமுடல் முழுவதுமாய்
மூடி மறைக்கப்பட்டுள்ள
கருவுருவ சிலையின் மீது
அமரமுயலும் காக்கையொன்று
கல்லெறிந்து விரட்டப்படுகிறது!


அரைமணி நேரம் கடந்தபின்னே
ஆர்பரிப்பும் அமைதியாய் ஓய்ந்து
தலைவரின் புடைசூழ வந்த கூட்டமெல்லாம்
கண்ணுக்கெட்டும் தூரம்வரை
காணமல் போயிருந்தது!
மீண்டுமந்த காக்கை காற்றிலேறி
அச்சிலையின் மேலமர்ந்து
தலைவர் சென்ற வழியை நோக்கி
ஏளனமாய் சிரித்துக்கொண்டே
திறப்புவிழா கண்ட சிலையின் தலைமீது
எச்சத்தை விட்டபின்னே
சுதந்திரமாய் பறந்து போனது!


 - இரா.ச.இமலாதித்தன் 




_

சதுரங்கம்!



எட்டு எட்டாய் தொட்டு நிற்கும்
ஒவ்வொரு கட்டமெங்கும்
மீண்டுமொரு பொற்காலம்
அழிவுறும் காலமன்றோ...
போர்க்களம் தினம் சென்றும்
பக்கத்தில் பரி இரண்டு இருந்தும்
பறிதவிக்க விட்டதென்ன...
கடை இருபுறம் கரியிரண்டு இருந்தும்
கண்கலங்க வைத்ததென்ன...
நாலிரு படையினர் இருந்தென்ன
ராணியின்றி தோற்று நிற்கிறேன்
கூனிக்குறுகி தனித்து நிற்கிறேன்
இத்தனை நடந்த பின்னும்
நானின்று வெட்டப்படுகிறேன்
யாருமில்லா ராஜ்யத்தின்
அரசனென்ற அவப்பெயரால்!

 - இரா.ச.இமலாதித்தன் 

திணைக்காதல்!





நாற்றுநட்ட கழனியெங்கும்
வரப்புப்பாதை வழியுனூடே
வரையறையின்றி வகைவகையாய்
பலகதைகள் பேசி...
பள்ளிச்சென்ற பல நாட்களில்
படிக்காமல் ஊர்சுற்றி
கைகோர்த்து திரிந்தோமே
அப்போதே பசுமையாய் நம்மிடையே
விளைந்தது மருதக் காதலோ...?

கடல் அலையாய் பொங்கி விழும்
ஆற்றுப்படுகை அடிவாரத்தில்
மீன்பிடித்த மகிழ்ந்த போதும்...
காகிதம் கிழித்து கப்பல் விட்டு
சேறுபடிந்த சிற்றுடையோடு
நாமிருவரும் நீச்சல் பழகி
நித்தம் மூழ்கிக்கிடந்த
அந்நாட்களிலேயே நம்மை
நனைத்தது நெய்தல் காதலோ...?

மழைக்கால நேரங்களில்
மலைக்கோயில் பாறையில்
மாலைப்பொழுதெல்லாம்
நாமிருவரும் சறுக்கி விளையாடி
இறுதியில் கோவில் நடைசாத்தும்
மணியோசையில் ஓடோடி
கீழே சிதறிக்கிடக்கும்
குங்கும திருநீரெடுத்து
உன் நெற்றியில் என்னை
திலகமிடச் சொன்னாயே
அப்போதே நம்முள்
படிமமானது குறிஞ்சிக் காதலோ...?

விடுமுறை நாட்களில்
ஊருக்கு வெளியே
ஒதுங்கி நிற்கும் காட்டுக்குள்
விறகு சேகரிக்க பத்து பேராக
பட்டாளமாய் சென்றாலும்...
எனக்கு மட்டும் சிறுகாயங்கள்
ஏற்படும் தருணங்களிளெல்லாம்
உன் கண்கள் கலங்கியதும்...
என்னை முறைத்த
உன் அண்ணனுக்கு புரிந்த
எனக்கு புரியாமல் போனபோதே
வளர்ந்தது முல்லைக் காதலோ...?

காடும் மலையும் சுற்றித் திரிந்தும்
காற்று மழையிலும் கூடி இருந்தும்
உன்னை முழுவதுமாய் அறியத்தெரியாத
காதல் மழையில் நனையத்தவறிய
அறிவிலியாய் அலைந்ததையும்
உணர்கிறேன் நானின்று ...
இதுபோல் வெறுமையில் வெந்து தணியும்
குழப்பநிலைதான் பாலைக் காதலோ...?

புரிதலும் புரிதல் நிமித்தமாய்
பெயரில்லா ஆறாம் திணையால்
நாமிருவரும் அன்பால் இணைந்து
திணைக்காதலுக்கு தீர்வு காண
இன்னும் எத்தனை நாட்கள்
நான் காத்திருக்க வேண்டுமோ...?

- இரா.ச.இமலாதித்தன்

இனிய இரவு!




திறந்த வானமாய்
மூடிய போர்வைக்குள்ளே
பொத்தல் விழுந்த
சின்னஞ்சிறு ஒளிகீற்றுகளாய்
நட்சத்திர கூட்டங்களும்...
பெரு வட்டமிட்ட ஒளிப்பந்தாய்
நான் போகிற போக்கெல்லாம்
என் பின்னாலே சுற்றி திரிந்த
ஒற்றை நிலவையும்...
ஓரிரு நட்சத்திரங்கள் நகர்வது
ஏனென்று புரியாமல்
அசைவுகளால் ஆராய்ச்சி செய்து
விமானமென்று கண்டறிந்ததையும்...
மல்லார்ந்து படுத்துறங்க
கண்ணசரும் நேரம்வரை
மின்மினி பூச்சிகளையும்
ரசித்து கிடந்த
முன்னிரவு நேரங்களையும்...

இன்று
குளிரூட்டப்பட்ட அறையின்
மெத்தைமடியில் படுத்திருந்தும்
உறக்கம் கெட்டுக் கிடக்கின்ற
நடுநிசி இரவுக்குள்ளே
பின்னோக்கி மீண்டெழ செய்கிறது
கட்டாந்தரையில் பாய்விரித்து
வெட்டவெளியில் படுத்துறங்கிய
இனிய இரவுகளை!

- இரா.ச.இமலாதித்தன்

தணியாத நிகழ்வுகள்!



  
தாழிடப்பட்ட அறையின்
தனிமையில் அமர்ந்திருக்கும்
முன்னிரவு பொழுதுகளில்
ஏதோ ஒரு உள்ளுணர்வு
என்னுள் படர்ந்து சென்று
பரிணமித்து கொள்கிறது;
சுமந்துவரும் நினைவை
சிதைவுற செய்யும் முயற்சியில்
தீவிரமாய் இறங்கியும்
தோற்றுப்போகிறது மனது;
இழப்புகள் ஏதுமின்றி
குழப்பமாய் குறுகி கிடந்தும்
பிரிவுகளால் மட்டுமே
கண்ணீர் துளிகள் சிந்தாமல்
கலங்கி நிற்கிறது கண்கள்;
பணம் தேடிய பயணத்தின்
நெடுந்தொலைவிலான பாதையில்
உறவு தொலைத்த வாழ்க்கையை
உணர்ந்து திரும்பும் இவ்வேளையில்
ஆதரவற்று தனித்து நிற்கிறது
தணியாத நிகழ்வுகள்!


- இரா.ச.இமலாதித்தன் 

_

வேலையில்லா காலங்கள்!





குடும்பச்சுமை ஏதுமில்லா
குதூகல கும்மிகளுக்கு நடுவே
வீட்டிற்க்குள் குறுக்கே வந்த
கடன்சுமையை சுமக்க முடியாமல்
தவித்திருந்த என் தந்தையின் தோளுக்கு
துணை சேர்க்கும் கிளையாய்
என் மனதில் ஆழமாய்
ஆலம்விழுதுகள் துளிர்விட ஆரம்பித்தது
வேலைக்கு சென்றிடவேண்டுமென்று!
 
ஊருவிட்டு ஊருவந்து
ஞாயிறு தினசரிகளை பக்கம்பக்கமாய்
கட்டம்கட்டிய விளம்பரங்களை
வேலைத்தேடி தவித்தபோது...
வேலையேதுமில்லாமல்
விளையாட்டாய் சுற்றி திரிந்து
வீணாக பலபொழுதை கழித்து
வீராப்பாய் சட்டை தூக்கி
வீதியெங்கும் அலைந்த
அந்நாட்களில் நான் அறிவேனா
ஒவ்வொரு அலுவலகமாய் படியேறி
இப்படி அலைகழிக்க படுவேனென!
 
எப்படியோ ஒருவழியாய்
போதுமென்ற மனநிறைவோடு
இன்றைய வாழ்க்கை தந்த
இந்தவேலையும் முட்டிமோதி
கிடைத்த போது...
பார்ப்பவன் யாராகினும்
படிப்பெல்லாம் முடிஞ்சுடுச்சே
வேலைக்கு போகலையா? யென்று
நையாண்டி செய்தாலும்
நாசுக்காய் சிரித்து மழுப்பி
நழுவிச்சென்ற அந்நாட்களில்
நான் அறிவேனா
இவ்வாழ்க்கையும் என்னைவிட்டு
விலகிச்சென்றதை!


- இரா.ச.இமலாதித்தன் 


_

அதுவொரு நிலாக்காலம்!



முத்தம் ஒன்றை வாங்கிடவேண்டி
தவம் கிடக்கும் கன்னம் போலவே
நித்தம் என்னை சுற்றி
மூன்றைந்து நாட்களுக்குள்
முகம் மறைக்கும் முழு நிலவும்
முற்ற கடலில் மிதந்து வந்து
உலவுகின்ற அந்திவேளை
இறந்தகாலம் நிகழ்காலம் எதிர்காலம்
எதுவாயினும் அதுவொரு நிலாக்காலமே!

- இரா.ச.இமலாதித்தன்

நீயும் காதலும்!

 

01.

உன்னை காணாத
ஒவ்வொரு வினாடியும்
வீணாய் போகிறதே யென்று
வருத்தத்துடன்
உரையாடிக்கொண்டிருக்கிறது
கடிகார முட்கள்!

----o0o----


02.

காதல் தவறில்லை
என்றுரைத்த
என் நண்பனிடம்
கோபப்பட்டத்தை
தவறென்று உணர்கிறேன்
இன்று
உன்னை கண்டபின்னால்!

----o0o----



03.

காதல் மறுப்பை 
பெருமிதமாய் பேசித்திரியும்
பெரியோர்கள் அறிவார்களா
பிறப்பின் அடித்தளமே
காதலென்று...!

----o0o----



04.

நான் பேருந்து படியினில்
தொற்றிக்கொண்டு
பயணம் செய்து வரும்
காலைநேர சாலையெங்கும்
உன் மீதான காதலும்
என்னோடு தொற்றிக்கொண்டு
பயணிக்கிறது
பேருந்தை விட்டு
நீ கீழறங்கி
சென்ற பின்பும்!

----o0o----



05.

காதல் இல்லையென்று
சுற்றித்திரிந்த
நாட்களையெல்லாம்
காட்சிப் பொருளாய்
நெஞ்சுக்குள் தேக்கி வைத்திருக்கிறேன்
உன்னிடம் காண்பிப்பதற்காய்!

----o0o----



   - இரா.ச.இமலாதித்தன்






இந்த கிறுக்கல்கள் தமிழமுதம் இணையதளத்திலும் வெளிவந்துள்ளது.


_

சொல்லாத காதல்!



வறண்டு கிடக்கின்ற
பாலைவனத்து வெளியினூடே
காய்ந்து நிற்கும்
ஒற்றைமர கிளையின் மீது 
சுடுமணல் காற்றிலேறி
பற்றிக்கொண்ட பறவை போல
ஒட்டிக்கொண்டது
உன்மீதான
எனக்கான காதல்...!










உன் பெயரை
உதடு உச்சரித்து
உரைக்கும் முன்பே
காலங்கெட்டு போச்சுதென்று
கதை பேசும் கூட்டம் நடுவே 

கூனிக்குறுகி நின்று
என்னைப் பார்த்து
ஏளனமாய் சிரிக்கிறது
நான் சொல்லத்தவறிய

காதல்...!





- இரா.ச.இமலாதித்தன் 




இந்த கிறுக்கல்கள் தமிழமுதம் இணையதளத்திலும் வெளிவந்துள்ளது.



_

சினிமா!




காசுக்காக அழுது நடித்து
திரை அரங்கம் உள்வந்து
சில நிமிடம் கையசைத்து
காரில் பறந்தான்
நடிகன்...!
 

 காசு கொடுத்து
அழுதுவிட்டு
திரையரங்கம் வெளிவந்து
நடை பயணமானான்
ரசிகன்...!

- இரா.ச.இமலாதித்தன்


இந்த கிறுக்கல்கள் தமிழமுதம் இணையதளத்திலும் வெளிவந்துள்ளது.

வார்த்தை!



ஆழ் மனதில் புதையுண்ட
எண்ணங்களெல்லாம்
வார்த்தைகளாய் உருமாறி
வரிகளாய் வெளிப்பட்டு
கம்பீரமாய் சிரித்தாலும்
தவழ்ந்து வருகின்ற கைக்குழந்தை
எழுந்து நடப்பது போல்
தடுமாறி உதிர்கின்றன
உன்னிடம் வார்த்தைகளாய்!








உன்னிடம்
சொல்லிவிட்டு திரும்பிய
சொற்கள் அனைத்தும்
வென்றுவிட்ட களைப்பில்
கலைந்து கிடக்கின்றன
அர்த்தங்களற்று!


- இரா.ச.இமலாதித்தன்

உழவர் வாழ்வு! (நாட்டுபுற மெட்டு)



(இதுவும் என் முதல் முயற்சி தான்...)


சேத்துலதான் காலவச்சு சோத்துலயும் கைய வச்சோம்
பாழப்போன வயித்துலதான் அடிக்கிறாங்க விவரமா
நாங்க வாழுறதே பூமிக்கும் பாரமா

வம்புதும்பு போனதில்ல வாய்க்காசண்ட ஏதுமில்ல
தண்ணிகேட்டு கத்துறோமே நித்தம்தான்
வயலு தொண்டை போலே வறண்டதென்ன குத்தம் தான்....

ராப்பகலா கண்விழிச்சு வயவரப்புலே கிடந்தாலும்
விடிஞ்சிடாம போனதென்ன வாழக்கைதான் - நல்ல
முடிவுக்காகக் காத்திருக்கோம் வேர்க்கத் தான்....

(சேத்துலதான் காலவச்சு...)

உறக்கம்கெட்டு உழைச்சாலும் பழையசோறு தின்னாலும்
ஊருக்குள்ளே நாங்கயெல்லாம் ஏழைதான்
தெனமும் உருப்படியாக் கூலி வாங்குறதே கஷ்டம்தான்

அன்னந்தண்ணி உண்ணாம அசராம உழைக்குறோமே
ஆக்கிதின்ன அரிசிகொடுத்தா போதுமா
எங்க அடி வவுத்துலே கையை வச்சா நியாயமா

(சேத்துலதான் காலவச்சு...)

விதைநெல்லைக்கூட விலைக்கு வாங்கி விதைக்குறோம் -அந்த
வெள்ளைக்காரன் வித்ததெல்லாம் போலியாம்
அதை விதைச்சு புட்டா மண்ணெல்லாம் மலடியாம்

என்னன்னமோ நடக்குது ஒண்ணுமே புரியலையே
உழைக்கநாங்க காத்திருக்கோம் ஆசையா
கத்திகத்தி கேட்டாலும் கவலைஇங்கே தீரலையே

சேத்துலதான் காலவச்சு சோத்துலயும் கைய வச்சோம்
பாழப்போன வயித்துலதான் அடிக்கிறாங்க விவரமா
நாங்க வாழுறதே பூமிக்கும் பாரமா...

- இரா.ச.இமலாதித்தன்


காதல்ன்னு சொல்லிபுட்டா! (கானா பாட்டு)



(என் முதல் முயற்சி...கானா "மாதிரி"...)


அவள பார்த்த நாள்முதலா நானும் தான் தூங்கலையே...
தூங்கமா படுத்திருந்தா நித்தமும் தான்- என் மனசும் தாங்கலையே
என் கண்ணுக்குள்ள வந்துவந்து கனவாகி போனாளே
கணவனாக வரத்தானே வரம் வாங்கி வந்தேனே...

அவகூட பேசலாம்னு பின்தொடர்ந்து வந்தேனே
என்னை கண்டுகிட்டும் காணாம எப்பவுமே போறாளே
என்னான்னு சொல்லுவேன் அவ கண்ணாலே கொல்லுறா
அவகிட்ட என் மனச வித்துபுட்டேன் மொத்தமா
அவ இல்லாம நான் வாழ என்ன செஞ்சேன் குத்தமா...?

மனசை கடன் கொடுக்க கூட அவளுக்கு மனசும் தான் வரலையே
மல்லுகட்டி நிக்குறேனே மன்றாடி பார்க்குறேனே
என்னை காதல் செய்யவே அவளும் தேடிகூட வரலையே
அதற்கான நாளும் இங்கே கைகூடி வரலையோ...?

காதல்ன்னு சொல்லிபுட்டா கடைசி வரைக்கும் கவலைதான்
அதுவே கனவாகி போனதுன்னா நானும் கூட இல்லைதான்
பொண்ணுகிட்டே ஏமாறி பொழப்பும் தான் ஓடுதே
கண்ணேன்னு சொன்னவளும் அம்போன்னு விட்டுட்டா...

- இரா.ச.இமலாதித்தன்

முட்டாள்!




பொட்டிக்குள் பூட்டிவைத்த
வேட்டி சட்டை பளபளக்க
வெட்டித்தனமாய் மாட்டிக்கொண்டு
வீட்டுக்கு உதவாதபயலென்று
ஊர்சொல்ல கேட்ட பின்னும்
தலைவன் வந்த கூட்டத்திற்கு
பெயர்பலகை வைத்திடவே
வட்டிக்கு பணம் வாங்கி
நடுத்தெருவில் தொண்டனொருவன்!

கோட்டைக்குள் குறட்டை விட
கட்சிக்குள்ளே போட்டிப் போட்டு
சீட்டு வாங்க கட்டுக் கட்டாய்
நோட்டை கொட்டிக் கொடுத்து
ஒட்டுக்கேட்க தலைவனொருவன்!

நட்டாற்றில் தள்ளிவிட்டு
நாட்டாமை செய்வதற்கு
காட்டாற்று வெள்ளமென
மூட்டை தூக்கி நாட்கள் கடத்தும்
பாட்டாளி வர்க்கம் நானென்று
நாட்டுக்குள் முழங்கிக்கொண்டே 
 
தேர்தலுக்குள் தலைவனொருவன்!

மோட்சமடைந்த முனிவன்போல
நாட்டை காக்க அவதாரம் எடுத்ததாக
வீட்டிற்குள்ளே விளக்கமும் கொடுத்து...
பட்டினி சாவே இல்லாதொழிக்க போவதாய்
காட்டமாய் ஊடகத்தில் பேசிவிட்டு
நட்சத்திர விடுதியில் தானுண்ண
பட்டியலிட்டான் தலைவனொருவன்!

ஓட்டு போட்டு அரியணை ஏற்றிய
பாட்டாளி மக்களுக்கே
வேட்டு வைக்க துணிந்தவனை போற்றி
போட்டிப்போட்டு வாழ்த்து மடல்
பட்டித்தொட்டி எங்கும் பளபளக்க
கடவுள்போல தலைவனொருவன்!

தட்டிக் கேட்க எவனுமில்லை
எட்டு திசையும் எனக்கிங்கு நிகருமில்லை
கட்டம்கட்டி கணக்காய் காயும் நகர்த்தி
பட்டு வேட்டி சட்டையோடு புறப்பட்டான்
எட்டா புகழுடைய தலைவனொருவன்!

கட்டில் தூக்கமே கனவாய் போக
விட்டில் பூச்சியின் வாழ்க்கை போலவே
வட்டிக்கே கடனும் வாங்கி இழுபறியோடு...
தட்டுத் தடுமாறி குடும்பம் நடத்த வழியுமின்றி
பட்ட மரமாய் நடுத்தெருவில் நிற்கிறான்
ஓட்டளித்த முட்டாள் தொண்டனொருவன்!

- இரா.ச.இமலாதித்தன்

_