பராபரனே!



கண்ணீர்த்துளி போன்ற
இராவண தீவுக்குள்
ஓயாத அலைகளாய்
உயிராயுதம் ஏந்தும்
மாவீரர்களை உருவாக்கி
கரும்புலி துணையால்
வரும்பகை அழித்த
பரம்பொருளான பராபரனே;
ஆறுமுகன் போல
ஆறெழுத்தில் வீறுகொண்டு
தமிழினத்தின்
தலையெழுத்தை மாற்றிய
தலைவனவன் பிரபாகரனே!

- இரா.ச.இமலாதித்தன்

தமிழ் தேசிய தலைவா, 60ம் அகவை வாழ்த்துகள்!

‎தமிழ் தேசிய தலைவன்‬!



"பி"ழையில்லா
"ர"ம்பொருள் போல
கோட்"பா"டு கொண்ட
போர்க்"க"ளங்களால்
சுதந்தி"ர" தமிழ்நாட்டிற்கான
முருகனானா"ன்"
என் பிரபாகரன்!

- இரா.ச.இமலாதித்தன்

முதல்வர்!



அன்னார்ந்து ஹெலிகாப்டருக்கும்
சட்டென குனிந்து காரின் டயருக்கும்
வணங்கிய கைகளிரண்டும்
ஒரேயடியாய் ஓய்ந்து கிடக்க;
பதவி மட்டும் என் பெயராக பிரதிபலிக்க
இனி வேடம் தரிக்கின்றேன்!

சின்னஞ்சிறு சிரிப்பையும்
ஊதி பெரிதாக்கி
”உற்சாகமான ஓ.பி.எஸ்.!”யென
ஊடகங்கள் ஊர்முழுக்க
சொல்லிவிடுமென்பதால்
பொதுவெளியில்
புன்னகைக்கு ஓய்வளிக்கின்றேன்!

மழிக்கப்படாத நரைத்த தாடியில்
அரசியல் ஏதுமில்லை;
ஆளுமைமிக்க பதவியிலும்
சுயமாய் ஆட்சி செலுத்த முடியாமல்
சுவரில் தொங்கவிடப்படுவதாய்
ஓர் உணர்வு!

என்னருகில் மக்களின் முதல்வரான
அம்மாவின் படம் இருக்கின்றது
இது பிரம்மையல்ல
இப்போதாவது நம்புங்கள்
உண்மையாகவே
நான் தமிழ்நாட்டின் முதலமைச்சர் தான்!

- இரா.ச.இமலாதித்தன்

காதலின் பெயரால்!
















காதல் மனங்கொண்ட
அவளும் நானும்
மணம் கொண்டிருந்தால்
இந்நேரம்
அவனது பெயரின் இரண்டாம் பாதி
ஆதித்தனாகத்தான் இருந்திருக்கும்
இப்போதும்
பெரிய வித்தியாசமொன்றுமில்லை
ஆருத்ரனும் அழகான பெயர் தான்!

- இரா.ச.இமலாதித்தன்

நான் கடவுள்!


உடலுயிர்
இதிலெது நீயென
கேள்விகள் ஆயிரம்;
இதுதான் நானென
பதில்களில் ஆணவம்...
கடந்து வந்த பாதையெங்கும்
நிரம்பிய நினைவுகளில்
பிரமிக்க வேறேதுமில்லை;
காலமெல்லாம்
சரி தவறென்ற வாதங்களிலும்
சான்றுகளுக்கான தேடல்களிலும்
தொலைந்து போகிறது மனம்...
இலக்கில்லா வாழ்க்கையில்
வரையறுக்கப்பட்ட மரணமும்
அதன் பின்னாலான சரணமும்
உன்னையே பிரதிபலிக்க;
நீயும் நானும் வேறில்லையென
உணர வைக்கிறாய் திரு முருகா!

- இரா.ச.இமலாதித்தன்