வனத்தின் ரணம்!






கசக்கியெறியப்பட்ட காகிதமொன்று
என்னை சுற்றி வட்டமிட்டு கொண்டிருக்கிறது
தூதுசொல்ல வந்திருக்கலாம் என்றொரு யூகம்
உளவு பார்க்கிறதாக ஒரு மாயை
அப்படிருக்க வாய்ப்பில்லை;
இது கற்பனையாக இருக்கவும் வாய்ப்புண்டு
ஒருவேளை ஏதோவொன்றை
எனக்குள் சொல்ல வந்திருக்கலாம்;
அதனுள் பலகதைகள் புதைந்தும் கிடக்கலாம்
இப்படி ஏதேதோ என்னை சூழ
சரியான கோணத்தில் எதையுமே உணராமல்
இந்த நொடிக்கான பதிலை
கடந்தகாலங்களிலேயே தேடிக்கொண்டே
ஓர் அழிவின் அழுகுரலை கேட்க தயங்குகிற
மனதின் சூழ்ச்சியை அறியாமலேயே
ஆழமாய் ஓர் ஆய்வு செய்துகொண்டிருக்கிறேன்
மரங்களின் அழிவை தடுப்பது எப்படியென்று !


- இரா.ச.இமலாதித்தன்