காதல் கொஞ்சம்!



--001--

நாற்பது மைல்தூர பேருந்து பயணத்தின்
அன்றைய தருணங்களெல்லாம்
நான்கே நொடிகளில்
கடந்திருப்பதாய் உணர்ந்திருந்தும்
இப்போதைய நான்கு மைல்தூர பயணங்கள்
ஒரு நாளையே விழுங்கிக்கொண்டிருக்கிறது
அருகில் அவளில்லை!

--002--

ஒவ்வொரு பேருந்து பயணங்களிலும்
ஏதோவொரு இருக்கைக்கருகில்
எழுதப்பட்டிருந்த காதலர் பெயர்கள்
சட்டென்று பிம்பமாய் வெளிப்பட்டு
உருமாறி இடம்பெயர்ந்திருந்தது
என்பெயரோடு உன்பெயராய்!
 

--003--

கடவுளிடம் விண்ணப்பித்திருந்தேன்
வருங்கால மனைவி யாரென்று;
பதில் வந்தது நட்சத்திரங்களாய்...
வியந்துபோனேன்;
என் கடவுச்சொல் அவளது பெயரென்பதால்!

- இரா.ச.இமலாதித்தன்

என்னைத்தேடிய நான்!



நொடிகளை கொன்ற நிமிடங்களெல்லாம்
சட்டென்று கடந்து போகும் நாழிகைக்குள்
தொலைத்த வருடங்களை தேடிக்கொண்டிருந்தது;
நாட்களோடு மாதமாய் உருமாறிப்போன
வருடங்களும் இலக்கேதுமில்லாமல்
எங்கயோ விரைந்து கொண்டிருந்தது;
நீண்ட உறக்கத்திற்கு நடுவே கனவுகளாக
உயிர் ரகசியமும் தோன்றி மறைகிறது;
பிறப்புக்கும் இறப்புக்கும் இடையிலிந்த
சின்னஞ்சிறு பயணத்தின் சுவடுகள் யாவும்
ஏதோவொரு வரலாறாக்கப்படுவதற்காகவே
உறக்கத்திலேயே கருவாக உட்புகுந்து
உடலாக உயிரோடும் உறவாடிக்கொண்டிருந்தது;
விழிப்புகளுக்கு அப்பால் நேர்ந்ததையுணர
விழிகளுக்குள்ளே காத்திருந்த ஏக்கத்தோடு
அழியும் உடலை அறிவு ஆயத்தபடுத்தியது;
முடிவிலியாய் நீண்டுக்கொண்டிருக்கும்
அழிவில்லா ஒன்றை எதுவென யூகிக்க முடியாமல்
பயணமும் தொடர்ந்துகொண்டேயிருக்கிறது
இந்த உடலுக்குள் நான் யாரென்ற தேடல்களோடு!

- இரா.ச.இமலாதித்தன்


இந்த கிறுக்கல்கள் வல்லமை மின்னிதழிலும் பிரசுரமாகியுள்ளது.

கலாய்த்தல் திணை!



--001--

நீ மட்டும்தான்
அழகென்று சொன்னதும்
சிரித்தாள்;
நானும் பதிலாய் சிரித்தேன்
சொன்னது பொய் என்பதால்!

--002--

நட்பா? காதலா?
எது பெரியது என்றாள்;
காதலியின் நட்பென்றேன்...
கட்டியணைத்தாள்;
கழண்டு கொண்டேன்
நண்பனாகவே!

--003--

தேவதை நீ யென்றதும்
பறக்க ஆயத்தமானாள்
வரம் கொடுப்பது மட்டுமே
தேவதைக்கு அழகென்றேன்;
என் பணம் தப்பித்தது!

--004--

அடிக்கடி உன் நினைவிலேயே
அலுவல்களை மறந்துவிட்டதாய்
அவளிடம் சொன்னேன்...
ம்ம்ம் என்றாள்;
உன்னையும் ஒருநாள் என்றேன்
புரியவில்லை அவளுக்கு!

--005--

நம் முதல் சந்திப்பு
நினைவிருக்கிறதா என்றாள்;
உன் தோழியோடு
உன்னை சந்தித்ததாய் சொன்னேன்..
ஆச்சரியத்தோடு
அந்த அளவுக்கு பிடிக்குமா என்றாள்;
தோழியை பிடிக்குமென்றேன்!

- இரா.ச.இமலாதித்தன்



இது யார் மனதையும் காயப்படுத்துவதற்காக அல்ல; கலாய்ப்பதற்காக மட்டுமே!