நானும் நீ!




இத்தனை வருடங்களில்
எத்தனை முறை இதே தேதியை
கிழித்தேனென தெரியவில்லை;
பனிரெண்டு எண்களுக்குள்ளான
நெடுந்தூர ஓட்டக்களத்தில்
ஆரம்பித்த இடம் தெரியாமல்
ஆரம் போல சுற்றிக்கொண்டிருக்கும்
கடிகார முட்களோடு முட்டி மோதி
கோடிக்கணக்கான நாழிகைகளை
என்னுள் விழுங்கிருக்கிறேன்;
இரவும் பகலும் கடந்த
ஒவ்வொரு பொழுதுகளிலும்
ஏதோவொரு கனவுகளோடு
எதையெதையோ தொடர்பு படுத்தி
என்னையே தொலைத்திருக்கிறேன்;
வரையறையற்ற காலமெனும்
நிர்ணயிக்க முடியாத மாயைக்குள்
நிரந்தரமில்லாத இவ்வாழ்க்கைக்காக
யாராகவோ தான் உருமாறி கிடக்கிறேன்;
இவையெல்லாம் நிச்சயம் நானல்ல
முடிவிலியான காலம்
இன்று நானாக இருக்கிறது;
நேற்றோ நாளையோ
நீங்களாக கூட இருக்கலாம்!

- இரா.ச. இமலாதித்தன்