கனவெல்லாம் நீ!



நீ கழுத்தை சாய்த்துதான்
நடப்பாய் என்பதை கூட
இன்னொருவன் சொல்லித்தான்
நினைவிலேற்றி கொள்ளமுடிந்தது;
உன் வளைந்த கூந்தலை கூட
யாரோ அடையாளம் சொல்லிய பின்பே
அடையாளப்படுத்தி கொள்ள முடிந்தது;.
இப்படியே இன்னும் என்னென்ன
தெரிந்து கொள்ளபோகிறேனென்று
சரியாக தெரியவில்லை;
ஆனால் எதையுமே
உன்னிடம் சொல்லமுடியவில்லை யென்ற
ஏமாற்றத்தோடே
ஒவ்வொரு இரவையும் கழிக்கிறேன்;
விடியல் தினமும் எனக்காகவே காத்திருக்கிறது
நான் தான் இன்னமும் விழிக்கவில்லை
கனவெல்லாம் நீ!

- இரா.ச.இமலாதித்தன்

விலகும் இறுக்கம்!


இறுகி கொண்டிருக்கிறது நூல்
விலகி கொள்ளாத ஆரம்
இறுதி பிடியை எதிர்பார்த்து
சின்னஞ்சிறு வட்டமிடுகிறது;
சுற்று மட்டுமே நீள்கிறது
தளர்வில் இளகிக்கொள்ள
சுயமாகவே ஆயத்தமாகிறது;
முடிவில் அறுத்தெறிய படலாம்
இலகுவாக விலகுவது
எப்போதும் இயல்பு தானே!

- இரா.ச.இமலாதித்தன்