காக்கைச் சிரிப்பினிலே!






பள்ளம் படுகுழி யெங்கும்
கருஞ்சிறுகற்களால் தாரூற்றி பூசப்பட்டு
சாலையெங்கும் பளபளப்பாய்
படர்ந்து கிடக்கிறது!
நகரமெங்கிலும் சாலையோரம்
பரபரப்புக்கு பஞ்சமில்லாமல்
பதற்றத்தோடு பரிதவித்து
காவல்துறை காத்துக்கொண்டிருக்கிறது!


முக்கியச்சாலையின் முச்சந்தியில்
முகமுடல் முழுவதுமாய்
மூடி மறைக்கப்பட்டுள்ள
கருவுருவ சிலையின் மீது
அமரமுயலும் காக்கையொன்று
கல்லெறிந்து விரட்டப்படுகிறது!


அரைமணி நேரம் கடந்தபின்னே
ஆர்பரிப்பும் அமைதியாய் ஓய்ந்து
தலைவரின் புடைசூழ வந்த கூட்டமெல்லாம்
கண்ணுக்கெட்டும் தூரம்வரை
காணமல் போயிருந்தது!
மீண்டுமந்த காக்கை காற்றிலேறி
அச்சிலையின் மேலமர்ந்து
தலைவர் சென்ற வழியை நோக்கி
ஏளனமாய் சிரித்துக்கொண்டே
திறப்புவிழா கண்ட சிலையின் தலைமீது
எச்சத்தை விட்டபின்னே
சுதந்திரமாய் பறந்து போனது!


 - இரா.ச.இமலாதித்தன் 




_

சதுரங்கம்!



எட்டு எட்டாய் தொட்டு நிற்கும்
ஒவ்வொரு கட்டமெங்கும்
மீண்டுமொரு பொற்காலம்
அழிவுறும் காலமன்றோ...
போர்க்களம் தினம் சென்றும்
பக்கத்தில் பரி இரண்டு இருந்தும்
பறிதவிக்க விட்டதென்ன...
கடை இருபுறம் கரியிரண்டு இருந்தும்
கண்கலங்க வைத்ததென்ன...
நாலிரு படையினர் இருந்தென்ன
ராணியின்றி தோற்று நிற்கிறேன்
கூனிக்குறுகி தனித்து நிற்கிறேன்
இத்தனை நடந்த பின்னும்
நானின்று வெட்டப்படுகிறேன்
யாருமில்லா ராஜ்யத்தின்
அரசனென்ற அவப்பெயரால்!

 - இரா.ச.இமலாதித்தன் 

திணைக்காதல்!





நாற்றுநட்ட கழனியெங்கும்
வரப்புப்பாதை வழியுனூடே
வரையறையின்றி வகைவகையாய்
பலகதைகள் பேசி...
பள்ளிச்சென்ற பல நாட்களில்
படிக்காமல் ஊர்சுற்றி
கைகோர்த்து திரிந்தோமே
அப்போதே பசுமையாய் நம்மிடையே
விளைந்தது மருதக் காதலோ...?

கடல் அலையாய் பொங்கி விழும்
ஆற்றுப்படுகை அடிவாரத்தில்
மீன்பிடித்த மகிழ்ந்த போதும்...
காகிதம் கிழித்து கப்பல் விட்டு
சேறுபடிந்த சிற்றுடையோடு
நாமிருவரும் நீச்சல் பழகி
நித்தம் மூழ்கிக்கிடந்த
அந்நாட்களிலேயே நம்மை
நனைத்தது நெய்தல் காதலோ...?

மழைக்கால நேரங்களில்
மலைக்கோயில் பாறையில்
மாலைப்பொழுதெல்லாம்
நாமிருவரும் சறுக்கி விளையாடி
இறுதியில் கோவில் நடைசாத்தும்
மணியோசையில் ஓடோடி
கீழே சிதறிக்கிடக்கும்
குங்கும திருநீரெடுத்து
உன் நெற்றியில் என்னை
திலகமிடச் சொன்னாயே
அப்போதே நம்முள்
படிமமானது குறிஞ்சிக் காதலோ...?

விடுமுறை நாட்களில்
ஊருக்கு வெளியே
ஒதுங்கி நிற்கும் காட்டுக்குள்
விறகு சேகரிக்க பத்து பேராக
பட்டாளமாய் சென்றாலும்...
எனக்கு மட்டும் சிறுகாயங்கள்
ஏற்படும் தருணங்களிளெல்லாம்
உன் கண்கள் கலங்கியதும்...
என்னை முறைத்த
உன் அண்ணனுக்கு புரிந்த
எனக்கு புரியாமல் போனபோதே
வளர்ந்தது முல்லைக் காதலோ...?

காடும் மலையும் சுற்றித் திரிந்தும்
காற்று மழையிலும் கூடி இருந்தும்
உன்னை முழுவதுமாய் அறியத்தெரியாத
காதல் மழையில் நனையத்தவறிய
அறிவிலியாய் அலைந்ததையும்
உணர்கிறேன் நானின்று ...
இதுபோல் வெறுமையில் வெந்து தணியும்
குழப்பநிலைதான் பாலைக் காதலோ...?

புரிதலும் புரிதல் நிமித்தமாய்
பெயரில்லா ஆறாம் திணையால்
நாமிருவரும் அன்பால் இணைந்து
திணைக்காதலுக்கு தீர்வு காண
இன்னும் எத்தனை நாட்கள்
நான் காத்திருக்க வேண்டுமோ...?

- இரா.ச.இமலாதித்தன்

இனிய இரவு!




திறந்த வானமாய்
மூடிய போர்வைக்குள்ளே
பொத்தல் விழுந்த
சின்னஞ்சிறு ஒளிகீற்றுகளாய்
நட்சத்திர கூட்டங்களும்...
பெரு வட்டமிட்ட ஒளிப்பந்தாய்
நான் போகிற போக்கெல்லாம்
என் பின்னாலே சுற்றி திரிந்த
ஒற்றை நிலவையும்...
ஓரிரு நட்சத்திரங்கள் நகர்வது
ஏனென்று புரியாமல்
அசைவுகளால் ஆராய்ச்சி செய்து
விமானமென்று கண்டறிந்ததையும்...
மல்லார்ந்து படுத்துறங்க
கண்ணசரும் நேரம்வரை
மின்மினி பூச்சிகளையும்
ரசித்து கிடந்த
முன்னிரவு நேரங்களையும்...

இன்று
குளிரூட்டப்பட்ட அறையின்
மெத்தைமடியில் படுத்திருந்தும்
உறக்கம் கெட்டுக் கிடக்கின்ற
நடுநிசி இரவுக்குள்ளே
பின்னோக்கி மீண்டெழ செய்கிறது
கட்டாந்தரையில் பாய்விரித்து
வெட்டவெளியில் படுத்துறங்கிய
இனிய இரவுகளை!

- இரா.ச.இமலாதித்தன்

தணியாத நிகழ்வுகள்!



  
தாழிடப்பட்ட அறையின்
தனிமையில் அமர்ந்திருக்கும்
முன்னிரவு பொழுதுகளில்
ஏதோ ஒரு உள்ளுணர்வு
என்னுள் படர்ந்து சென்று
பரிணமித்து கொள்கிறது;
சுமந்துவரும் நினைவை
சிதைவுற செய்யும் முயற்சியில்
தீவிரமாய் இறங்கியும்
தோற்றுப்போகிறது மனது;
இழப்புகள் ஏதுமின்றி
குழப்பமாய் குறுகி கிடந்தும்
பிரிவுகளால் மட்டுமே
கண்ணீர் துளிகள் சிந்தாமல்
கலங்கி நிற்கிறது கண்கள்;
பணம் தேடிய பயணத்தின்
நெடுந்தொலைவிலான பாதையில்
உறவு தொலைத்த வாழ்க்கையை
உணர்ந்து திரும்பும் இவ்வேளையில்
ஆதரவற்று தனித்து நிற்கிறது
தணியாத நிகழ்வுகள்!


- இரா.ச.இமலாதித்தன் 

_

வேலையில்லா காலங்கள்!





குடும்பச்சுமை ஏதுமில்லா
குதூகல கும்மிகளுக்கு நடுவே
வீட்டிற்க்குள் குறுக்கே வந்த
கடன்சுமையை சுமக்க முடியாமல்
தவித்திருந்த என் தந்தையின் தோளுக்கு
துணை சேர்க்கும் கிளையாய்
என் மனதில் ஆழமாய்
ஆலம்விழுதுகள் துளிர்விட ஆரம்பித்தது
வேலைக்கு சென்றிடவேண்டுமென்று!
 
ஊருவிட்டு ஊருவந்து
ஞாயிறு தினசரிகளை பக்கம்பக்கமாய்
கட்டம்கட்டிய விளம்பரங்களை
வேலைத்தேடி தவித்தபோது...
வேலையேதுமில்லாமல்
விளையாட்டாய் சுற்றி திரிந்து
வீணாக பலபொழுதை கழித்து
வீராப்பாய் சட்டை தூக்கி
வீதியெங்கும் அலைந்த
அந்நாட்களில் நான் அறிவேனா
ஒவ்வொரு அலுவலகமாய் படியேறி
இப்படி அலைகழிக்க படுவேனென!
 
எப்படியோ ஒருவழியாய்
போதுமென்ற மனநிறைவோடு
இன்றைய வாழ்க்கை தந்த
இந்தவேலையும் முட்டிமோதி
கிடைத்த போது...
பார்ப்பவன் யாராகினும்
படிப்பெல்லாம் முடிஞ்சுடுச்சே
வேலைக்கு போகலையா? யென்று
நையாண்டி செய்தாலும்
நாசுக்காய் சிரித்து மழுப்பி
நழுவிச்சென்ற அந்நாட்களில்
நான் அறிவேனா
இவ்வாழ்க்கையும் என்னைவிட்டு
விலகிச்சென்றதை!


- இரா.ச.இமலாதித்தன் 


_

அதுவொரு நிலாக்காலம்!



முத்தம் ஒன்றை வாங்கிடவேண்டி
தவம் கிடக்கும் கன்னம் போலவே
நித்தம் என்னை சுற்றி
மூன்றைந்து நாட்களுக்குள்
முகம் மறைக்கும் முழு நிலவும்
முற்ற கடலில் மிதந்து வந்து
உலவுகின்ற அந்திவேளை
இறந்தகாலம் நிகழ்காலம் எதிர்காலம்
எதுவாயினும் அதுவொரு நிலாக்காலமே!

- இரா.ச.இமலாதித்தன்

நீயும் காதலும்!

 

01.

உன்னை காணாத
ஒவ்வொரு வினாடியும்
வீணாய் போகிறதே யென்று
வருத்தத்துடன்
உரையாடிக்கொண்டிருக்கிறது
கடிகார முட்கள்!

----o0o----


02.

காதல் தவறில்லை
என்றுரைத்த
என் நண்பனிடம்
கோபப்பட்டத்தை
தவறென்று உணர்கிறேன்
இன்று
உன்னை கண்டபின்னால்!

----o0o----



03.

காதல் மறுப்பை 
பெருமிதமாய் பேசித்திரியும்
பெரியோர்கள் அறிவார்களா
பிறப்பின் அடித்தளமே
காதலென்று...!

----o0o----



04.

நான் பேருந்து படியினில்
தொற்றிக்கொண்டு
பயணம் செய்து வரும்
காலைநேர சாலையெங்கும்
உன் மீதான காதலும்
என்னோடு தொற்றிக்கொண்டு
பயணிக்கிறது
பேருந்தை விட்டு
நீ கீழறங்கி
சென்ற பின்பும்!

----o0o----



05.

காதல் இல்லையென்று
சுற்றித்திரிந்த
நாட்களையெல்லாம்
காட்சிப் பொருளாய்
நெஞ்சுக்குள் தேக்கி வைத்திருக்கிறேன்
உன்னிடம் காண்பிப்பதற்காய்!

----o0o----



   - இரா.ச.இமலாதித்தன்






இந்த கிறுக்கல்கள் தமிழமுதம் இணையதளத்திலும் வெளிவந்துள்ளது.


_

சொல்லாத காதல்!



வறண்டு கிடக்கின்ற
பாலைவனத்து வெளியினூடே
காய்ந்து நிற்கும்
ஒற்றைமர கிளையின் மீது 
சுடுமணல் காற்றிலேறி
பற்றிக்கொண்ட பறவை போல
ஒட்டிக்கொண்டது
உன்மீதான
எனக்கான காதல்...!










உன் பெயரை
உதடு உச்சரித்து
உரைக்கும் முன்பே
காலங்கெட்டு போச்சுதென்று
கதை பேசும் கூட்டம் நடுவே 

கூனிக்குறுகி நின்று
என்னைப் பார்த்து
ஏளனமாய் சிரிக்கிறது
நான் சொல்லத்தவறிய

காதல்...!





- இரா.ச.இமலாதித்தன் 




இந்த கிறுக்கல்கள் தமிழமுதம் இணையதளத்திலும் வெளிவந்துள்ளது.



_

சினிமா!




காசுக்காக அழுது நடித்து
திரை அரங்கம் உள்வந்து
சில நிமிடம் கையசைத்து
காரில் பறந்தான்
நடிகன்...!
 

 காசு கொடுத்து
அழுதுவிட்டு
திரையரங்கம் வெளிவந்து
நடை பயணமானான்
ரசிகன்...!

- இரா.ச.இமலாதித்தன்


இந்த கிறுக்கல்கள் தமிழமுதம் இணையதளத்திலும் வெளிவந்துள்ளது.