பூவிதழ்களின் காதல்!


















தன் சுமைகளை குறைத்து
இதழுறிஞ்சி உறவாடும்
காதலின் சூத்திரத்தை
யார் சொல்லித்தந்தது
தேனீக்களுக்கு?
யாராரோ சொன்ன
அன்பும் கடவுள் தான் போல!

---

பூக்களின் மொழிகளை
புரிந்து கொள்ளும்
தேனீக்களின் அறிவில்
ஹார்மோன்களற்ற
சின்னஞ்சிறு காதலே
கலந்திருக்கிறது;
இது அறிவியலில்லை!

---

பல்லுயிர்களின்
உயிர்மூச்சை வாரி வழங்கும்
பெருங்காடுகளை உருவாக்குகின்ற
பூக்களுக்கும்
பட்டாம்பூச்சிக்களுக்குமான
வரம்புகளற்ற காதலை,
ஒவ்வாத உறவென
எதிர்க்க யாருக்கிங்கே
துணிவிருக்கிறது?

---

பூவிதழ்களில் அவிழும்
பிரபஞ்சத் துளிகளை
சேகரித்து வைத்திருக்கிறன
தனக்கானதோர் உலகில்
தேனீக்களெல்லாம்!

---

நாளை அகதியாக்கப்படுவோமென
தெரியாமல்
யாருக்காகவோ சேர்த்து வைக்கும்
கஞ்சனின் பெருஞ்சொத்தை
நினைவுபடுத்துக்கின்றன
தேன்கூடுகள்!

- இரா.ச.இமலாதித்தன்

அவள் நினைவோடு!



பச்சையும், மஞ்சளுமாக
நாளுக்கொரு
வண்ணங்களில் பூத்திருக்கும்
மலர்களின் பெயரை
யோசித்து கொண்டிருந்தேன்;
உன் விரல்களை விட்டு
விலகிய நகங்களில்
பூசப்பட்டிருக்கும் பேரழகிற்கு
என்ன பெயர் வைப்பதென?!

-

இயல்பை தொலைத்த
இவ்வாழ்வே
என் ஊழென தெரியாது;
உன்னிரு விழிகளின்
இமைக்கா நொடிகளில்
ஒவ்வொரு முறையும்
தப்பி பிழைத்து
ஒரேயடியாய்
விழுந்து கிடக்கும்
என் தற்செயல் நிகழ்வுகளை
மீட்டுக்கொடு;
இனியாவது
நானாக இருக்க முயல்கிறேன்!

-

அடிக்கடி அழைத்து பேசாத
நெருங்கிய உறவுகளின்
விடிகாலை
அலைபேசி அழைப்புகள்
ஏற்படுத்தும் பதற்றத்திற்கு

இணையானதொரு நிலையை
உருவாக்கி கொடுக்கிறாய்;
ஒவ்வொரு முறை
நீ என்னிடம் பேசும் பொழுதும்!

-
உன்னிரு பார்வைக்கு
ஆயிரம் கவிதைகள் எழுதலாம்;.
எங்கே விடுகிறாய்?
ஒவ்வொரு முறையும்
பிறப்பெடுத்து இறக்கிறேன்;
உன்னிலிருந்து
தப்பி பிழைப்பதே
பெருந்தவமாய் இருக்கிறது;
எப்படி எழுதி முடிப்பது?

-

வண்ணத்துப்பூச்சிகளின்
மகரந்த தீண்டலில்லாத போது
மிகப்பெரும் வனத்தின்
சின்னஞ்சிறு பூக்களனைத்தும்
பிரபஞ்ச தொடர்பின்றி
வண்ணங்கள் தொலைத்து
தனித்து கிடப்பதை போன்ற
வெறுமையை உணர்கிறேன்
நீ அருகிலில்லாத நாட்களில்!

-

உன் கண் மையில் மையல் கொண்ட
என்னை தொலைத்து
எங்கெங்கோ தேட வைக்கிறாய்,
நீ இருக்கும் திசையே கிழக்கானது;
நம்மிருவருக்குமிடையில்
நீளும் இரவின் வெறுமை போதும்,
ஆதித்த கதிர்களையே
ஆதிக்கம் செலுத்தும் உன்னுலகில்
எனக்கான விடியல் எப்போது?

-
நெற்றியில் பொட்டில்லை,
சூரிய கிரகணமானது;
புருவங்கள் உயர்த்துகிறாய்,
வானவில் இரண்டானது;
கொஞ்சம் முறைக்கிறாய்
குளிர் நிலவும் சுடுகின்றது;
மெல்ல சிரிக்கிறாய்,
நட்சத்திரங்கள் உதிர்கின்றன;
நீ எனக்கான தேவதை,
விலகாமல் அருகிலேயே இரு;
நமக்கானதொரு
புது உலகையே படைக்கிறேன்!

-

உன் தரிசனமற்ற நாட்களில்
போர்க்களத்தின்
இரைச்சலை உணர்த்துகிறது
என் தனிமை;
ஒற்றை நொடியில்
உயிர் கொல்லும் ஆயுதம்
உன்னிரு பார்வைகள்;
உடன்படிக்கையெல்லாம் வேண்டாம்
உயிரையெடுத்து போ
நீயில்லாமல்
அது மட்டும் எதற்கெனக்கு?

-

மிச்சமிருக்கும்
மிகக்குறைந்த அளவிலான
அலைபேசியின் மின்னிருப்பு போல
உன்னை
நினைவுப்படுத்திக்கொண்டே
இருக்கிறது மனது;
தொடர்புகளற்ற தொலைவில்
நீ இருக்கிறாய்!

-

வாயை மூடி
புன்னகைக்க முயல்கிறாய்,
உன்னிரு கண்களோ
அப்பட்டமாய்
சத்தமிட்டு சிரிக்கிறது;
காட்சிப்பிழைக்கு
சாட்சியங்கள் ஏதுமில்லை,
நீ மட்டுமே அங்கிருந்தாய்;
உன் புன்னகைப்புயலில்
சிக்கிக்கொண்ட
என்னை மீட்டெடுத்து
நிவாரணம் கொடு,
கொஞ்சம் பிழைக்கிறேன்!

-

தன் வேர்களையே தேட மறந்த
மரங்களின் கிளைகளில் அமர்ந்து
உயிரை கொத்தி தின்னும்
பெருவெளி பறவைகளின்
கூச்சலிடும் பேரொலிகளுக்கிடையே
அடர்வனத்தின் சிறுவழி பாதை,
வண்ணங்களனைத்தையும் தொலைத்து
வியாபித்திருக்கும் வான்வெளி போல
மனதிற்குள் விரிய தொடங்குகிறது;
புகழெனும் பெரும்போதையில்
என்னைத்தவிர எதையெதையோ
தேடிக்கொண்டிருக்கிறேன்,
முடிவுறா இப்பிரபஞ்ச பயணத்தில்
நானென்பது மட்டுமே அங்கிருக்கிறது!

- இரா.ச. இமலாதித்தன்

சுவரொட்டி!





அரசாங்க மதுக்கடையோரம்
நிறுத்தப்பட்டிருந்த ஸ்ப்ளண்டர் பைக்கில்
’ஏ1பி பாசிடிவ் இரத்தம்
தேவையெனில் தொடர்பு கொள்க’ யென்ற
வாசகத்தின் கீழே கொடுப்பட்ட
பத்தெண்களில் ஏழெண்களில்லை,
கடைசியாக நூற்றி அறுபத்திரெண்டு மட்டும்
அழைக்க மீதமிருந்தது;

அதே பைக்கில் மாட்டிருந்த
வழிந்து நிரம்பிய மைதா வாளியை
கையிலெடுத்த கையோடு
சரட்டென வீறிட்டு சென்றவர்கள்
’தேவி திரையரங்கம்’ அருகிலிருந்த
திருமண மண்டப சுவர்களிலெல்லாம்
‘வாழ்த்தலாம் வாங்க;
அடுத்த மாப்பிள்ளை நாங்க’யென்ற
வாழ்த்து சுவரொட்டிகளை
’மெர்சல்’ நூறாவது நாளில்
ஒட்டிக்கொண்டிருந்தனர்;

நண்பகலில் நடைபெறும் திருமணத்தில்
ஒரே மாதிரியான வேட்டிச்சட்டைகளோடு
ஆண்ட்ராய்டு போன்களில் செல்ஃபி எடுத்து
அட்சதை போடும் நேரத்திலேயும்
‘ஃபேஸ்புக் லைவ்’வில் பரபரப்பாயிருந்தும்
இரவில் தீர்ந்தவற்றை வாங்கிவர
மதுக்கடைக்கு பறந்தனர்
மாப்பிள்ளை தோழர்கள்;

இரவில் ஒட்டியிருந்த
சுவரொட்டிகளையெல்லாம்
பசும்புல் போல பசுக்களனைத்தும்
சுவைத்துண்பதை பார்த்து
அகண்ட காவிரியை வறண்ட காவிரியாக்கிய
அண்டை திராவிட மாநிலமும்,
பசுமை நிலங்களை மீத்தேனால் பாழாக்கிய
பசுக்காவலர்களின் அகண்ட தேசமும்,
நம்மை மட்டுமல்ல,
இம்மண்ணையும் உயிர்களையும்
அடிமைகளாக பழக வைத்திருக்கும்
அரசக் கதைகளையெல்லாம்
தெளிவில்லாத நிலையிலும்
ஓரளவுக்கு புரிந்து கொண்டார்கள்;

கிழித்தெறியப்பட்ட சுவரொட்டியின்
கழுத்தில் மாலையோடு ஜோடியாக இருந்த
தன் நண்பனின் படமிருந்த இடத்தில்
பின்னாலிருந்த யாரோ ஒருவனின்
‘கண்ணீர் அஞ்சலி’ சுவரொட்டியின்
படமும் பெயரும் அமைந்திருந்ததை
கவனிக்க தொடங்கும் வேளையில்
’சீக்கிரம் வாங்கடா,
கடிநெல்வயல் வேம்புடையார் கோவிலுக்கு
போகணுமாம்’ என்ற
மணவறையிலிருந்து வந்த
அலைபேசி அழைப்பால்
அவசர அவசரமாய் பறந்து போனார்கள்;

இதற்கிடையே
பாசக்கார பங்காளிகளின் குரலொலியில்
’கூலிங்கே இல்லையாம் பங்கு?!’
’இருக்கிற டென்சனுக்கு,
ஏதோ ஒன்னு வாங்குங்க பங்கு’
என்ற சோகத்தோடு
முப்பதாம் நாள் காரியத்திற்கு வந்திருந்த
சிவக்குமாரும் எழிலரசும்
அதே சுவரொட்டியை பார்த்து
’அவ இன்னொருத்தனுக்கு
பொண்டாட்டியாவே ஆய்ட்டா;
நம்ம பங்காளியை ஏமாத்துனவ
நல்லாவா இருக்க போறா?’வென
மனம் நிறைய சுமையோடு
மயானக் கரைக்கு செல்லும் நேரத்தில்,

அடுத்த சுவரொட்டியை
அதன்மேல் வேறாரும் ஒட்டும்வரை
இந்த சுவர்களிலாவது
இணைந்திருக்கட்டுமென
பசுக்கள் கூட பசியாறாமல்
காத்திருக்கும் இடைவெளியில்
’பாரத் மாதாகி ஜெ!’ என்ற சுவரொட்டிகள்
அவர்கள் இருவரையும் பிரித்த நொடியில்
அந்த சுவரொட்டியை மட்டும்
ஈரம் காய்வதற்குள் லாவகமாய்
வெடுக்கென கிழித்து திண்றது
கொம்புடைந்த பசுவொன்று!

- இரா.ச. இமலாதித்தன்

ஆதாமும் ஏவாளும்!


















உயிர்களனைத்தும் இல்லாதொழிக்கப்பட்ட
ஓர் ஊழிக்காலத்தில்
எட்டுமாத கர்ப்பிணியின் வயிற்றிலிருந்து
தன்னந்தனியே இவ்வுலகில்
தப்பிப்பிழைத்த குழந்தையொன்று
நூற்றாண்டுகளுக்கு ஒருமுறை வந்துபோகும்
சந்திர கிரகணம் நிகழ்ந்தவொரு நாளில்
இளம்வயது கன்னியாக பூப்பெய்த பொழுதில்
காலமென்ற மாயையை வென்ற
சித்தன் போன்ற தோற்றமுடையவனை கண்டதும்
அலறலும் முனகலும் மெளனித்து
இலக்கணமில்லா மொழியொன்று உருவெடுக்கிறது;
பதிமூன்று ஆண்டுகள் சேகரித்தவற்றையெல்லாம்
வார்த்தைகளின் வழியே கொட்டித்தீர்க்க
வரிகளற்ற புது இலக்கியம்
பிரபஞ்சப் பெருவெளியில் எழுதப்படுகிறது;
பெருங்கோவில்களில் வியாபித்திருக்கும்
யாளிகளின் சிலைகளை பார்ப்பது போல
மிச்சமிருக்கும் செல்பேசி கோபுரங்களை
வியப்புடன் பிரமித்து, அவனிடம் கேட்கிறாள்
இது எந்த மிருகத்தின் கால்களென;
கிரகணத்தில் சிக்கி தவித்த
பிறைநிலவின் ஒளி முழுதும்
அவள் முதுகோரம் படரும் வேளையில்
ஆலமர விழுதோரம் அமர்ந்திருந்தவளில்
கருடன் போன்றதொரு நிழலுக்கருகில்
மண்ணுக்குள் பாதி புதையுண்ட
ஆப்பிள் போனை நோண்டியெடுத்து
ஆதியோகியானவன்
பழங்கதை சொல்லும் நாழிகையில்
ஆதாமாய் அடையாளப்படுகிறான்;
மீண்டுமோர் ஏவாள் உருவெடுத்து விட்டாள்
இனி புதிய உலகம் படைக்கப்படுகிறது!

- இரா.ச. இமலாதித்தன்