மெல்லிய புன்னகையில்!





-01-

உன் மூச்சுக்காற்று கலந்த அரவணைப்பில்
எனக்கான ஓர் உலகம் சுழலத்தொடங்கி
உன்னுள் அடங்கும்;
இனி நமக்கான இந்த பிரபஞ்சமே
சிறுதுளியாய் மாறிப்போகும்!

-02-

வாழ்நாளெல்லாம்
உன் கூந்தலை என் தலையணையாக்கி
தூக்கம் தொலைத்த இரவுகளில்
உன் கூந்தலுக்குள்
என் மூச்சுக்காற்றை வைத்திருக்க ஆசை!

-03-

உதடுகள் உரசாததால்
உரையாடல் ஏதுமில்லை;
ஆனால் தோள்கள் இரண்டும் 
அருகருகே உரசாமலேயே 
பல கதைகள் பேசிக்கொண்டிருக்கின்றன,
மெளனமாய் என்னருகில் அவள்!

-04-

உன் கண்ணிசைவுகளுக்காக காத்திருக்கும்
என் உயிர் மொத்தமும்,
நீ உதிர்க்கும் மெல்லிய புன்னகையால்
ஆயிரம் ஒளியாண்டை
ஒருநொடியில் கடந்து விடுகிறது!

-05-

தனித்தனியான நான் என்பதே
நம்முள் இருப்பதாய்
எனக்கு இதுவரை நினைவிலில்லை;
என்னைவிட உன்னையே
நானாக நினைத்திருக்கிறேன்.
நீ வேறு யாரோயல்ல;
நான் தான்!

- இரா.ச.இமலாதித்தன்

என் பிரபஞ்சமாகிறாய்!
























-01-

தினமும் எத்தனை பெண்களை கடந்தாலும்
நினைவுகளில் நிற்பதில்லை;
பாவம், அவர்களுக்கும் கொஞ்சம் இடம் கொடு;
என்னுள் நீ மட்டுமே ஆக்கிரமித்து விட்டாய்!

-02-

நீ என்னோடு இல்லாத போது
சிலுவையில் அறையப்படுகிறேன்.
நீ அருகில் இருக்கையில் உயிர்த்தெழுகிறேன்.
நான் கடவுளல்ல;
ஆனால் நீயே எல்லாமுமாகிவிட்டாய்!

-03-

என் மடி மீது சாய்ந்து
மெளன புன்னைகையில்
பல கதைகள் பேசி என்னை பார்க்கிறாய்;
நான்கு யுகத்தை நொடியில் கடந்து
உன்னுள் தொலைகிறேன்
நீயே என் பிரபஞ்சமாகிறாய்!

-04-

உன்னாலேயே குழம்பி நிற்கிறேன்;
நீயே தெளிவுற செய்கிறாய்.
என்னுளேயே கடந்து தவிக்கிறேன்;
நீயே மீட்கிறாய்;
இது உளியின் வலி தாங்கும்
சிலையின் வேதனை!

-05-

என் தோள் சாய்ந்து நீ உறங்கும்போது,
உன் நெடுந்கூந்தலுக்குள் முகம் பதித்து
நான் தொலைந்து போகிறேன்.
மீட்காதே;
உன்னுள்ளேயே தொலைந்து விடுகிறேன்!

- இரா.ச.இமலாதித்தன்