அவனும் நானும்!






















உயிரற்றதாக வரையறுக்கப்பட்ட

எல்லாவற்றிற்குள்ளும்
ஓர் உயிரை உணர்ந்த பின்னால்
ரத்தமும் சதையுமான
துர்நாற்றமடிக்கும் இவ்வுடலிலுள்ள வாலை 
எப்போது தொலைத்தேனென தெரியாமலேயே
தலை வரை நீண்ட முதுகெலும்பிற்குள்
என்னுயிரை தேடி பயணிக்கிறேன்;
இடை மறித்து
அவனென் கண்களை உற்று நோக்கி
ஏதேதோ சொல்கிறான்;
ஒலிக்கு தானே, தேவ பாஷை?
அவனோ ஒளியில் உரையாடுகிறான்;
நான் என்பதை
தேடவா? தொலைக்கவா?யென
அவனிடம் கேட்காமலே
கவனித்தலின் கடைசி புரிதலில்
சட்டென பதிலைச் சொல்லி
கடந்து போகிறான், மீண்டும் என்னுள்;
அவனும் நானும் வேறல்ல தான் போல!

- இரா.ச. இமலாதித்தன்