காதலோடு!























-01-

என் கனவுச்சாலையின் அருகில் வந்து
துயில் கொள்கிறாய்;
உன் மனதெங்கும் பரவிக்கிடக்கும்
பேராசை போர்வைகளை துகிலிருத்து,
அமிழ்தம் பகிர்கின்றேன்!

-02-

இந்த காதலை சுற்றியே
இவ்வுலகமும் நிரம்பி வழிகிறது;
நமக்கான காதலும் கூட
உந்தன் காலடி தேடியே
எனக்கான பாதைகளை
விரிவடைய செய்கிறது
நீயே என் வழி!

-03-

என் கோபங்களும்,
உன் கோபங்களும்
தனித்தனியாய் இருக்கும்போது
கோபமாகத்தான் இருக்கின்றன;
நம் இருவருக்குள் வரும் போதுதான்
மரணித்து போய் விடுகின்றன!

-04-

விடிய காத்திருக்கும் இரவில்
உன் கூந்தலுக்குள் குடிபுகுந்து,
உடலை திரியாக்கி தீமுட்டி
அமிழ்தம் கசியும் உன் எச்சில்களால்
அணைக்க அனுமதி தருவாயா?
உன்னை அணைப்பேன்!

-05-

உன்னை என்னிலிருந்து
பிரிக்கமுடியாத ஒற்றை புள்ளியில்
நாமென்ற ஒன்றே
என் நினைவுகளின் வழியே
உச்சமடைவதாய் உணர்கிறேன்.
அங்கும் நான் என்பது நீதான்!

- இரா.ச.இமலாதித்தன்

அவளும் நானும்!





-01-

கூடல்கொண்ட மேகங்களின்
பெருமழைச்சாரல் போல
உடலோடு உறவாடி
என்னுயிரை இதழ்களால் உட்கொள்கிறாய்;
நானென்ற வெற்றுடலோ
உன் கூந்தலில் தலை துவட்டுகிறது!

-02-

என் கைப்பிடிக்குள் மவுஸ் போல
சிக்கிக் கொள்கின்றன உன் நினைவுகள்
மவுஸ் பேடாய் தேய்கிறது மனது!

-03-

கண்கள் வழி சிரிக்கிறாய்;
என்னுயிர் உயிர்த்தெழுகிறது.
தென்றல்மொழி பேசுகிறாய்;
தாழிடப்பட்ட மனக்கதவு திறக்கிறது.
இனி உன்னுள் கலந்து நீயாகிறேன்!

-04-

உன்னோடு இருக்கும் ஒவ்வொரு நொடியிலும்,
இதுவரை கண்டுபிடிக்காத
புதுப்புது கிரகங்களையெல்லாம் கடந்து வந்து,
அதற்கெல்லாம் உன் பெயரையே சூட்டுகிறேன்!

-05-

உன் விரல்கள் கோர்த்து,
மழலை மொழி பேசி,
நெரிசலான பாதையில் நடக்க ஆசை.
உன்னை பெற்றெடுத்தவங்களுக்கு மட்டுமல்ல,
எனக்கும் நீ சின்ன குழந்தை தான்!

- இரா.ச.இமலாதித்தன்