ஈழம்!



001.

முட்கம்பி வேலிகட்களுக்குள்ளும்
சுவாசிக்க விருப்பமில்லை
காற்றுக்குள் உன் பிணவாடை!

002.

ஊருக்கு வெளியே சுடுகாடு
என்ற காலம் மாறி
ஊரே சுடுகாடாய் ஆனபின்னே
ஆறடி நிலம்கூட இல்லாமல்
அடித்துவிரட்டபட்டு
நாடுவிட்டு நாடோடிகளாய்
இன்று தமிழர்கள் அகதிகளாய்
சுடுகாட்டிற்குள்!

003.

ஒட்டுமொத்தமாய் தமிழினத்தை
உயிரோடு புதைக்கப்பட்ட இடத்தில்
ஒய்யாரமாய் உருவெடுத்து நிற்கிறது
விகரமான விகார்!

004.

உன்னை மறக்கநினைக்கும்
மரத்துப்போன மனங்களை
உளுத்துப்போன வார்த்தைகளால்
என்னால் மன்றாட பிடிக்கவில்லை...
நீ கண்ட கனவு வீணாகபோகாது
நிச்சயமொரு நாள் ஈழம் மலராமல் போகாது
நிம்மதியாய் நீ உறங்கு
சுததந்திர ஈழத்தில் தமிழ் தேசியகீதத்தோடு
உன்னுறக்கம் நான் களைவேன்
அதுவரை உன் ஆன்மா ஈழத்திலே
சுழன்று கிடக்கட்டும் மாவீரா!

- இரா.ச.இமலாதித்தன்



"மாவீரா" யென்ற இந்த கிறுக்கல்களும் தமிழமுதம் இணையதளத்திலும் வெளிவந்துள்ளது.தமிழமுதம் மேல் சொடுக்கினால் அங்கே சென்றும் நீங்கள் பார்க்கலாம்.