ஏமாற்றம்!



சூட்சமத்தால் சூழப்பட்ட
ஆழ்மனத்தின் வேர்களுக்குள்
முன்பைவிட முழுவீச்சோடு
ஊடுருவிக் கொண்டிருக்கிறது
குழப்பத்தினால் பின்னிப் பிணைந்த
நினைவுகளின் சுவடுகள்!

சிதைக்க முடியாதென
நெஞ்சுக்குள் கட்டியெழுப்பிய
அசைக்கமுடியா நம்பிக்கையும்
தூள்தூளாய் நசுக்கப்பட்டு
துயரத்திற்குள் தூக்கி எறியப்படுகின்ற
அந்தவொருசில நாழிகைக்குள்...
கணப்பொழுதில் வெடித்து சிதறி
காணாமல்போகும் நீர்க்குமிழிபோல.
நிர்கதியான மனதைவிடுத்து
நினைவுகளும் நிர்மூலமாய்
சிதற தொடங்குகிறது!

சற்றே சுயமாய்
சுதாரித்துக்கொண்டு
தன்னை சூழ்ந்துகிடக்கும்
சுகவீனமற்ற நிலையை
துடைத்தழிக்க முற்படும்
அந்தவொரு நொடிப்பொழுதில்
ஏமாற்றத்தின் விளிம்பில் அகப்பட்டு
மரண ஒத்திகைக்கு
ஆயத்தமானது மனது!

- இரா.ச.இமலாதித்தன்

தேர்தல் முதலீடு!




பாராளுமன்ற தேர்தலென்றால்
தாராளமாய் பணம் கிடைக்கும்...
இடைத்தேர்தல் வந்தாலும்
இது போலவே கிடைத்திருக்கும்...
பணம் மட்டும் தந்தால் போதும்
எமனுக்கும் வாக்களிப்போம்
இறைவனையே தோற்கடிப்போம்...!

எங்களின் பலம்கொண்ட
பசிமறந்த உழைப்புக்கு
பலனேதும் கிடைத்ததில்லை...
பல போராட்ட குழுவிருந்தும்
பசிபோக்க யாருமில்லை...
பணம் தந்தால் ஓட்டுண்டு
தேர்தலென்று வந்துவிட்டால்
கடவுளுக்கே வேட்டுண்டு!

சோறள்ளி உண்பதற்கும்
சேறள்ளி உழைப்பதற்கும்
உண்டான கையென்றாலும்
தேர்தலுக்கு தேடி வந்து
ஒற்றை விரலில் மைபூசி
வாக்களிக்க பலநூறு பணமளிக்கும்
கூட்டமிங்கே கூடிடுச்சு!

எவன் வென்றால் நமக்கென்ன
எதிர்கொள்ள தேவையென்ன?
பணம் வந்தால் போதுமென்று
பழகிக்கொள்ள கற்றுக்கொண்டோம்
வாக்கு மட்டுமே எங்கள் முதலீடு
தேர்தல்தான் எங்களுக்கு பலியாடு!

- இரா.ச.இமலாதித்தன்



இந்த கிறுக்கல்கள் தமிழ் ஆதொர்ஸ் இணையதளத்திலும் வெளிவந்துள்ளது.
இந்த கிறுக்கல்கள் தமிழமுதம் இணையதளத்திலும் வெளிவந்துள்ளது.


அவள் முகம்!



இரு பாதங்கள் படிய
நான் கடந்து போகின்ற
சாலைகளின் பாதையெங்கும்
என் கண்ணெதிரே
தென்பட்ட உருவமெல்லாம்
பிரதிபலிக்கிறது உன் முகத்தை!

இதுநாள் வரை உன்னைநான்

பார்க்கவே இல்லையே...
இருந்தபோதிலும்
காண்கின்ற எல்லாமும்
கவித்துவமாய் என் கண்களுக்கு
காட்சி தருகின்றனவே
கவிதைதான் உன்முகமோ?

மூன்றைந்து நாட்களுக்குள்

முகம் மறைக்கும் நிலவைப்போல்
என்னுலகில் தோன்றவேண்டிய
எனக்கான வளர்பிறையே
எப்போது முகம் மலர்வாய்?

உன் நிழலைக் கூட காணமுடியாமல்

உன் முகத்தை அனுதினமும்
ரசித்துக்கொண்டிருக்கிறேன்...
எனக்கு பிடித்த ஒன்றைப்போல்
உனக்கானதொரு
புத்தம்புது உருவத்திற்குள்
என்னுயிரை பகிர்ந்தளித்து!

- இரா.
ச.இமலாதித்தன்


இந்த கிறுக்கல்கள் தமிழ் ஆதொர்ஸ் இணையதளத்திலும் வெளிவந்துள்ளது.

இந்த கிறுக்கல்கள் தமிழமுதம் இணையதளத்திலும் வெளிவந்துள்ளது.

காதல் என்பது?



_____________________

001.


உன்னிடம் சொல்ல நினைத்து
தவறிப்போன வார்த்தைகளெல்லாம்
நீ குனிந்து நடக்கும் பாதையில்
கீழே சிதறி கிடக்கலாம்;
மெதுவாக கடந்து செல்!

_____________________

002.


ஆண் பெண்
நட்பின் முக்தி
காதல்!

_____________________

003.


ஒரு சிலருக்கு
கல்லறை
வேறு சிலருக்கு
கோவில் கருவறை
காதல்!

_____________________

004.


புனிதம்
என்ற சொல்
பூர்த்தியானது
காதலை
தியாகம் செய்யும்போது!


- இரா.ச.இமலாதித்தன்

தேவதையின் கணவன்!





ஏதோதோ உருவகப்படுத்தி
எழுதினால்தான்
காதலியைப் பற்றிய
கவிதை வருமென்று
எல்லோரும் சொல்கிறார்கள்...
உவமைக்காக ஒவ்வொன்றாய்
இவ்வுலகில் தேடியலைந்து
உனக்கான மாற்றுரு
ஒன்றுமில்லையென்ற 
உண்மையை உணர்ந்தபின்
வார்த்தைகள் ஊமையாகி
சொற்களெல்லாம் உதிரத்தை உதிர்த்து
வெற்று வரிகளாய் மட்டுமே
காகிதத்தில் வந்து விழுகின்றன;


உயிர்களெல்லாம்
பிரம்மனின் படைப்பென்று
எல்லோரும் சொல்லிக்கேட்டிருந்தும்
கண்கள் கதை பேசுவதும்
இதழ்கள் எட்டிப் பார்ப்பதும்
உன்னுள் மட்டுமெப்படி
இந்தவொரு முரண்பாடென்று
உன்மீதான சில சந்தேகங்கள்
என்னுள் அடிக்கடி எத்தனிக்கிறது;


தேவதையை
கதைகளிலே கேட்டதுண்டு
என் கண்ணெதிரே நீ வந்தபின்தான்
நேரடியாய் கண்டுகொண்டேன்...
எனக்கான தேவதையே
உன் கரங்களைப் பற்றிக்கொள்ளும்
கணவனாய் நான் மாற
சம்மதம் சொல்வாயோ இல்லை
சங்கடத்தில் கொல்வாயோ?


- இரா.ச.இமலாதித்தன்

கைத்தொழில்!


ஏழெட்டு பிள்ளைகளை
ஈன்றெடுத்த தாடிக்காரனொருவன்
தன் நாலுவயது மகனுக்கு
கைத்தொழிலாய் மாறிப்போன
சுயவேலை யொன்றை
சிலகாலம் பயிற்றுவித்து...
கலைந்து கிடக்கும் முடியோடும்
கறை படிந்த உடையோடும்
முதல்நாள் தொழிலுக்கு
தன்மகனை அழைத்துவந்து
பேருந்து நிறுத்தத்தில் நிற்க வைத்து
போய்வருகிற எல்லோரையும்
சட்டையைப் பிடித்திழுத்து
கைநீட்டி கேட்கச்சொல்கிறான்
பிச்சை...! 

- இரா.ச.இமலாதித்தன்



" கைத்தொழில் "யென்ற இந்த கிறுக்கல்களும்  தமிழ் ஆதொர்ஸ் இணையதளத்திலும் வெளிவந்துள்ளது.தமிழ் ஆதொர்ஸ் மேல் சொடுக்கினால் அங்கே சென்றும் நீங்கள் பார்க்கலாம்.


"கைத்தொழில்" யென்ற இந்த கிறுக்கல்களும்  தமிழமுதம் இணையதளத்திலும் வெளிவந்துள்ளது.தமிழமுதம் மேல் சொடுக்கினால் அங்கே சென்றும் நீங்கள் பார்க்கலாம்.



ஈழம்!



001.

முட்கம்பி வேலிகட்களுக்குள்ளும்
சுவாசிக்க விருப்பமில்லை
காற்றுக்குள் உன் பிணவாடை!

002.

ஊருக்கு வெளியே சுடுகாடு
என்ற காலம் மாறி
ஊரே சுடுகாடாய் ஆனபின்னே
ஆறடி நிலம்கூட இல்லாமல்
அடித்துவிரட்டபட்டு
நாடுவிட்டு நாடோடிகளாய்
இன்று தமிழர்கள் அகதிகளாய்
சுடுகாட்டிற்குள்!

003.

ஒட்டுமொத்தமாய் தமிழினத்தை
உயிரோடு புதைக்கப்பட்ட இடத்தில்
ஒய்யாரமாய் உருவெடுத்து நிற்கிறது
விகரமான விகார்!

004.

உன்னை மறக்கநினைக்கும்
மரத்துப்போன மனங்களை
உளுத்துப்போன வார்த்தைகளால்
என்னால் மன்றாட பிடிக்கவில்லை...
நீ கண்ட கனவு வீணாகபோகாது
நிச்சயமொரு நாள் ஈழம் மலராமல் போகாது
நிம்மதியாய் நீ உறங்கு
சுததந்திர ஈழத்தில் தமிழ் தேசியகீதத்தோடு
உன்னுறக்கம் நான் களைவேன்
அதுவரை உன் ஆன்மா ஈழத்திலே
சுழன்று கிடக்கட்டும் மாவீரா!

- இரா.ச.இமலாதித்தன்



"மாவீரா" யென்ற இந்த கிறுக்கல்களும் தமிழமுதம் இணையதளத்திலும் வெளிவந்துள்ளது.தமிழமுதம் மேல் சொடுக்கினால் அங்கே சென்றும் நீங்கள் பார்க்கலாம்.

உன்னோடு உரையாடும்போது!



ஒவ்வொரு நாட்களும்
உன் அழைப்பு வந்தபிறகு தான்
சுழியத்திலிருந்து தொடங்கி
சுழலத் துவங்குகிறது
இருபத்திநாலு மணி நேரத்தின் 

னக்கான கடிகார முட்கள்!

உரையாடலில் கேள்விகள் கேட்பதென்பது
எளிதான போதும்
உன்னிடம் பேசும்போது
வினாக்கள் கூட வெளிவர மறுத்து
உள்ளிருப்பு போராட்டங்கள் நடத்துகின்றன;
நீ கேட்கும் கேள்விகளுக்கு
என்னிடம் விடையில்லை என்பதை
முன்னரே நீ மட்டும் எவ்வாறு அறிந்துவிடுகிறாய்?

அதுதெரியாமலேயே
எங்கேயோ தலைமறைவாய்
ஓடிஒளிந்து கொண்ட உனக்கான பதில்களை
என்னிடம் தேடியலைந்து
விடைகிடைக்காமல் போனதும்
உரசிக் கொள்ளாமல் உறங்கிக் கிடக்கின்றன
என்னிரு உதடுகள்!

பின்பு உளறத்தொடங்கிய உதடுகள்
ஊமையானதை சற்றே உணர்ந்துகொண்டு
இரு உதடுகளும் விழித்து
இதழ்களாய் விரிக்கும்போது
வார்த்தைகள் நொண்டியடித்து
அங்கே ஊனமாய் நிற்கிறது
நம் உரையாடல்!

முடிவிலியாய் நீ
என்னோடு இருப்பாயென்ற
மாயையை உணரமறந்து
அப்புறம்,வேறென்ன, ம்ம்,சொல்லு,சரியாவென்ற
ஐந்து வார்த்தைகளால் நீ உரையாடும்
அந்தவொருசில நாழிகைக்குள்
உன்னுள் உறைந்து போய்விடுகிறேன்
அறிவிலியாய்!

உரையாடி முடித்தபின்
ஒவ்வொரு நிமிடங்களில்
புதைக்கப்பட்ட எந்தவொரு
நொடியும் முடியும் முன்னரே
உடனடியாய் நிலைகொண்டு
நிற்கின்ற உன்நினைவால்
மீண்டுமுன் அழைப்பொலியை
எதிர்பார்த்துக் காத்திருக்கும் 
நொடியின் அளவை கோடியாய்ப் பிரித்த
சின்னஞ்சிறு நேரத்திற்குள்ளும்
உணர்கிறேன் என்னுளுள்ள
உன்மீதான கட்டுக்கடங்கா காதலை!

- இரா.ச.இமலாதித்தன்


இந்த கிறுக்கல்களும் தமிழமுதம் இணையதளத்திலும் வெளிவந்துள்ளது.

விழுங்கப்பட்ட அன்பு!


காதலால் நான் உன்னை
மணம் செய்ய முடியாதென்று
பெற்றோரின் குணமறிந்த
முற்போக்கு மூளைக்கு தெரிந்திருந்தும்...
உன்னை மறக்க தவிர்த்து
முண்டியடிக்கும் மனதை மறுத்து
உன்னை மட்டுமே நினைத்து
உயிர் துடிக்க முயலுகின்ற
ஒவ்வொரு நொடிகளுக்குள்ளும்
பலகோடி விதைகளாய்
ஆழ்மனதில் விழுங்கப்படுகிறது
நம்மிருவரின் அன்பு!

விலகிச்சென்ற அன்பால்
சிதைவடைந்த செந்தளிர் நாட்களும்
விளைச்சலாய் வெளிப்பட்டு
விருட்சமாய் வெளிக்கொணரும் காலங்களில்...
தனிமையால் வெறுமை சூழ்ந்து
செழிப்பிழந்து செயல்படாமல்
தடுமாறி கிடக்கும்போது
என்குழந்தையின் பெயராய் நீயும்
உன்குழந்தையின் பெயராய் நானும்
அறுவடைசெய்திருப்போம்
விழுங்கப்பட்ட அன்பை!

- இரா.ச.இமலாதித்தன்

திருமண வரவேற்பு!



திருமண வரவேற்பில்
மணமகனிடம் கை குலுக்கி
புகைப்படத்திற்கும் முகம்காட்டி
பரிசொன்றை தந்து
பத்திரமாய் பார்த்துக்கொள்ள
சொல்லிவிட்டு
மணமேடை கீழிறங்கி
இருவிழி கலங்கி நின்றேன்...

எட்டு வருடம் தொட்டுவிட்ட
எங்கள் காதலின் பரிசாய்
வரவேற்பு பத்திரிகையை
எனக்கு தந்துவிட்டு
மணமேடையில் என்னவள் 
மணக்கோலத்தில் இருந்ததைக் கண்டு
அலங்கோலமாய் நான்
அழுதுகொண்டே வெளிசென்றேன்...

நான் பத்திரப்படுத்த சொன்னது
பரிசை அல்ல காதலியையென்று
மாப்பிளைக்கு தெரியாது...
நான் இன்றும் அவள்தந்த
வரவேற்பு பத்திரிக்கையை
பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேனென்று
என் காதலிக்கும் தெரியாது! 

- இரா.ச.இமலாதித்தன்


இந்த கிறுக்கல்களும்  தமிழமுதம் இணையதளத்திலும் வெளிவந்துள்ளது.

வீட்டில் விருந்தாளி!


நான் துயரப்பட்டநாட்களிளெல்லாம் 
தூரமாய் இருந்துவிட்டு
இன்றோ துக்கம் விசாரிக்க
துடித்துக்கொண்டு வருகிறார்கள்
தூரத்து சொந்தமென...
எப்போதோ ஒருநாள் வந்துபோகும்
உன் அலைபேசி அழைப்பை
இந்த அழையா விருந்தாளிகளுக்காக
துண்டித்து கண்ணீர் வடிக்கிறது
என் கட்டைவிரல்!

 - இரா.ச.இமலாதித்தன்

திருவிழா குழந்தை!


திருவிழாக் கூட்டத்தில்
உனக்கு மட்டுமே பிடித்துப்போன
பொம்மையொன்றை 
என்னை கைக்காட்டிக் கேட்கும்போது
வீட்டில்தான் ஆறேழு வீணாகவே கிடக்குதென்று
வேண்டாமிது என்றுரைத்து
எனக்கு மட்டுமே பிடித்துப்போன ஒன்றை
எடுத்துவந்து நீட்டும்போது
வெடுக்கென்று அதைபிடித்திழுத்து 
கீழே தட்டிவிட்டு சிரிக்கிறாய்
அங்கே குழந்தையாய் நான்!

- இரா.ச.இமலாதித்தன்

தனிமையின் தாகம்!



கண்களுக்கு புலப்படும் எல்லைகளுக்குள்
யாதுமற்ற வெறுமைகளால்
வெறிச்சோடி விரிந்து கிடக்கும்
தரிசுநில வயல்வெளிகளின்
வரப்போர ஒற்றை கருவேலமரத்தின்
நிழல்தேடி அமர்ந்திருக்கும்
நண்பகல் வேளைகளில்
சுட்டெரிக்கும் வெயிலின்
தீ சுவாலை சுவடுகளால்
தீண்டப்படுகின்ற சுணக்கத்தை
என்னுள் உணர்கிறேன்
குளிரூட்டப்பட்ட அறையின்
தனிமையில் நான்!

- இரா.ச.இமலாதித்தன்


 இந்த கிறுக்கல்கள் திண்ணையிலும் வெளிவந்துள்ளது.

கடலோடியின் மரணம்!


காலத்தின் காலடியில்  சிக்கிக்கொண்டு
கடலில் கலக்கத்தோடு கரைதேடியலைந்து
பயணிக்கின்ற தருவாயில்
கலங்கரைவிளக்கத்தின் ஒளிக்கீற்றை 
என்விழிகள்துலாவிக்கொண்டிருக்கின்ற
அந்தவொருசில நாழிகைக்குள்
பாய்மர படகின் துவாரம்வழி
ஓரவஞ்சனையில் ஒய்யாரமாய்  சிரிக்கிறது
நிர்ணயிக்கப்பட்ட என் மரணம்!

- இரா.ச.இமலாதித்தன்

கற்பு!



நகரத்துக் காட்டானின்
காமக் காட்டாற்று வெறியாட்டத்தில்
பறிபோனது
தெருவோரம் குப்பை பொறுக்கும்
சிறுமியின் கற்பு!

சூழ்ச்சி செய்யும்
சூட்சமக்காரர்களால் சூழப்பட்டுள்ள
இந்த  சமுதாயத்தில்
இவன் போன்ற சந்தர்ப்பவாதிகளின்
அற்ப சந்தோசங்களுக்காக
இங்கே சந்திசிரிக்கிறது கற்பு!

சமுதாயத்தின் மீதுள்ள
நம்பிக்கைகளும்
பலநேரங்களில் சூறையாடப்படுவதால்
சூழ்நிலைக் கைதியாய்
கற்பிழந்து நிற்கின்றது மானுடம்!

பணத்திற்காக பள்ளிப்பருவத்திலேயே
வீதிக்கு வரவழைத்த
வறுமை போன்ற சமுதாயப் பிழைகளை
இல்லாதழிக்க 

ஒருமித்த குரலாய் ஒன்றிணைவோம்
மானிடராய்!

 - இரா.ச.இமலாதித்தன்



இந்த கிறுக்கலை பற்றிய விமர்சனத்தை, விமர்சனம் வலைப்பக்கத்திலும் பார்க்கலாம்


மழைக்காலங்களில்!


-001-


மழைக்காலங்களில்
உன்னை தொடாமல்
மண்ணை தொடும் மழைத்துளிகள்
கண்ணீரோடே வழிந்தோடுகிறது
சாலையோர  பாதைகளில்!

-002-

மழைக்காலங்களில்

உன்னை தொட்டுவிட்டு
மண்ணை தொடும் 
மழைதுளிகள்தான் 
மோட்சமடைகிறதாம்
குடையை கொஞ்சம்
தூர வைத்துவிட்டு
தூரலில் உன் முகத்தை காட்டி
எனக்கு செய்த பாவம் போக்க
இதுபோல் புண்ணியங்கள் சில
செய்து விடு!

-003-

மழைக்காலங்களில்
உன்மேல் விழுந்த
ஒருசில மழைத்துளிகளும்
பிரிய மனமில்லாமல்
உன்னை இறுகப்பற்றி கொள்கின்றன
என்னைபோலவே!

-004-

மழைக்காலங்களில்
நீ குடை பிடித்து
மழையில் நடக்கும்போதெல்லாம்
உன்னுள் கூடல் கொள்ள முடியாத
மழைதுளிகளெல்லாம்
கோபித்து கொண்டு சண்டையிடுகிறது
உன் குடையோடு!


- இரா.ச.இமலாதித்தன்


 இந்த கிறுக்கல்கள்  யூத்புல் விகடன்  இணையதளத்திலும் வெளிவந்துள்ளது.

இந்த கிறுக்கல்கள்  தமிழ் ஆதொர்ஸ் இணையதளத்திலும் வெளிவந்துள்ளது.

தமிழனின் தீபாவளி!


தீபஒளி பரபரப்பில்பற்றிக்கொண்ட
விழாக்கால கடைகளையெல்லாம்  
வெள்ளக்காடாய் மிதக்க விட்டு
வெளியேறி சென்றுவிட்ட
என்தமிழ் இளைஞர்களை பற்றி
உருமாறிப்போன வீதிகளெல்லாம்
பெருமூச்சு விட்டுக்கொண்டே  
ஒன்றுக்கொன்றாய்
வினவிக்கொள்கின்றன
அசுரனை கொன்ற இந்நாள்தான்
இவர்களுக்கு இனியநாளாமென்று!

- இரா.ச.இமலாதித்தன்

அம்மா!



ஒருகாலத்தில் ஒற்றை வார்த்தையே
உச்சரித்து சொல்ல தடுமாறி
உளறிய என் நாக்கும்
இன்றைய நாட்களில்
தடித்தெழுந்து வெளியே
தாறுமாறாய் வெடித்து சிதறும்
வார்த்தைகளால் யாவும்
உன்மனதை
சுக்குநூறாய் உடைக்கின்ற வேளையிலும்
ஒற்றை சொல்கூட உதிர்க்காமல்
ஊமையாகவே இருந்துவிடுகிறாயே
உன் மௌனமும்
எனக்கான மரண தண்டனை தான்!

நான் கோபப்பட்டு
கடுஞ் சொற்களை தொடுத்து பேசியும்
கண்டதை யெல்லாம் எடுத்து வீசியும் கூட
என்மீது மட்டுமேன்
உனக்கான எதிர்ப்புகள்
துளிகூட இல்லையே!

உன் துக்கம் பலவற்றில்
நான் பங்குகொள்ளவில்லை
நீ கதறி அழுத பல பொழுதுகளில்
நான் கண்டுகொள்ளவேயில்லை
அப்பறம் நீ மட்டுமெப்படி
என் சிறு துளி கண்ணீருக்கும்
படபடத்து ஒப்பாரி வைக்கிறாய்?

நான்  வெற்றிபெற்ற வேளைகளில்
என்னை மட்டும்
காரணமாக சொன்னாய்;
நான் தோல்வியுற்ற வேளைகளில்
வேறு யாரைவது தேடிபிடித்து
அவர்கள் மீதல்லவா
நீ பழிபோடுகிறாய்!

உன்னை சிரிக்க வைக்க
எந்தொரு சிறு முயற்சி கூட
நான் எடுக்க வில்லையே
ஆனாலும்
நான் சந்தோசபட்டால்
உனக்கெப்படி முகமலர்ந்த சிரிப்பு
முந்திக்கொண்டு  வருகிறது?

ஊருக்கு வரும்போது
பார்ப்பவனெல்லாம்
'உடம்பு ஏறிவிட்ட'தென்று
வினவியதை கேட்டுவிட்டு
வீட்டுக்குள் உள்னுளைந்துடன்
'இப்படி இளைத்துவிட்டாயே?’யென்ற
உன் வாய்மொழி கேட்ட பின்னே
சற்று குழம்பிவிட்டு
நீயும் பொய் சொல்லுவாயோ
என்ற சிந்தனையில்
மூழ்கி போய்விடுகிறேன்
உன் பார்வையில் மட்டும்
என்னுடல் தேய்பிறை போல்
தோன்றுவதன் அர்த்தமென்ன?

'நீ சாப்பிட்டாயா ?’
என்று கேட்குமுன்னே
'சீக்கிரம் வந்து சாப்பிட’ சொல்லி
தொந்தரவு செய்கிறாயே
உனக்கு பசியென்ற ஒன்றை
இறைவன் கொடுக்கவேயில்லையா?
நான் உண்டுவிட்டால்
உன்பசியும் மறைந்துவிடுகிறது
உன் மனதும் நிறைந்துவிடுகிறது
இந்த உண்மை  எந்தொரு அறிவியலிலும்
இதுவரையிலும் நிரூபிக்கப்பட வில்லையே!

உன் பாசம் என்னவென்பதை
அறிந்தபோதும்
மழுங்கிப்போன என் நெஞ்சம்
உன்னிடம் நேசத்தை
வெளிக்காட்ட தெரியாமல்
தொலைந்து கொண்டிருக்கிறதே!

அம்மாவென்ற
ஒற்றை வார்த்தையில்
இவ்வுலகே உள்ளடங்கி போய்விட்டதென்ற
உண்மையை உணர்ந்துவிட்ட
இந்நேரத்தில்
உன்காலடிதொட்டு
தலைவணங்குகிறேன் தாயே!

- இரா.ச.இமலாதித்தன்


இந்த கிறுக்கல்கள் யூத்புல் விகடன் இணையதளத்திலும் வெளிவந்துள்ளது.

என் தோழா!





கனரக ஆயுதங்கள் பலகொண்டு
அய்யோவென்ற அலறலும்
அழுகுரலும் கொடுத்திட்ட
எந்தமிழினம் அனைத்தையும்
கணப்பொழுதில்
உயிரோடே மண்ணோடு
மரணக்குழியில் புதைத்தவனை
தோலுரிக்க உன் தோள்கொடு என் தோழா!

வீடற்று வீதியற்று நாடற்ற நாடோடிகளாய்
நடமாடக்கூட முடியாமல் -
எந்தமிழன் நாதியற்று
முட்கம்பிகளுக்குள் மூச்சை மட்டும்
முழுவேளை உணவாக உட்கொண்டு
உயிர் மட்டும் உள்ளவனாய்
முடங்கி கிடப்பவனை முடுக்கிவிட
முயற்சியெடு என் தோழா!

உணர்வற்ற நம்மக்கள்
உணர்ச்சியற்ற உன்தோள்கள்
இவ்விரண்டும் புத்துணர்ச்சிபெற
புதுவழி கண்டிடு என் தோழா!

வன்மம் கொண்ட வன்முறை வெறியனை
இல்லாதழித்தொழித்து
என்மக்களின் துயரங்களை துடைத்தழிக்க
விருட்சமாய் ஒன்றிணைய
உன் இருகரம் கொடுத்திடு என் தோழா!

என் தமிழினம் கொன்று சுகம் காணும்
பிணந்தின்னி இனவெறி கூட்டத்தை
இனங்கண்டு பகை முறிக்க
புறப்படு என் தோழா!

புரிதல் கொண்டு புரட்சிகள் வெடிக்கும்
அதுவரை புலிகளாய் பதுங்கி
பொறுத்திரு என் தோழா...
பாயும் நாட்கள் வெகு தூரமில்லை
அப்போது களத்திற்கு
போராட வந்திடு என் தோழா!

- இரா.ச.இமலாதித்தன்

இனிய பொழுதுகள்!



காலைபொழுதில் தோளில் துண்டோடு
வாயில் வேப்பங்குச்சியுமாய்
கொல்லைபுற வாசல்வழி
வயல்வெளி ஒத்தையடி பாதையில்
எட்டி நிற்கும் குட்டி முட்களை மிதித்துகொண்டே
ஆற்றங்கரை பாதையோர
கருவைமர கிளைகளின் கீரல்களோடு
குறுக்கே வந்தவரையும்
சிலநேரம் குப்புற தள்ளிவிட்டு குளிக்க ஓடிய  

மின்னல்நேர தருணங்களும்...

சீரும் ஆற்றின் படித்துறை ஓரமாய் 

பாய்ந்து குதித்து கீறும் மணலிடையே
பாதங்கள் படிய நின்று மூச்சை இடைநிறுத்தி
பலமணிநேரம் மூழ்கி கிடந்து 
நெஞ்சளவு நீரினுள் நீச்சலோடு நிலைத்து
லயித்து கிடந்ததும்...
வற்றிய ஆற்றில் இடுப்பளவு நீரினுள்ளே
கருத்த கிடந்த பல ஒருரூபாய் நாணயங்களை 
கண்டெடுத்து களிப்புற்றதும்...
பாசி படிந்த படிகளை எண்ணி
என் பெயரையும் எழுதி பார்த்து மகிழ்ந்ததும்...
கிளிஞ்சல் எடுத்து நீரை கீறி தட்டுக்கல் விட்டு 

தம்பட்டம்  அடித்து சிரித்ததும்...
துண்டினாலே வலைவீசி  துள்ளிக்குதித்த 

சின்னஞ்சிறு மீன்களையெல்லாம் 
அள்ளியெடுத்த அந்த காலை பொழுதுகளும்...

ஒய்யாரமாய் ஊர்சுற்றி
பனை இலந்தை  ஈச்ச மரம் தேடியலைந்த
அந்த மதியநேர பொழுதுகளும்... 


ஆத்தங்கரையோர ஆலமர நிழலில்
பாலத்து மதில்மேல பலமணிநேரம் அமர்ந்து
ஊர்கதை பேசி திரிந்த அந்த மாலை பொழுதுகளும்...
இதுபோல் இன்னும்பல இனியபொழுதுகள்
இனிவொரு நாளும் திரும்பவும் வந்துவிடுமா? 



 - இரா.ச.இமலாதித்தன் 

காதலியே!




-001.-

தமிழ்மொழி
செம்மொழி என்பதை
உணர்ந்தேன்
உன்
செவ்வாய் வழி
தெறித்து விழுந்த
வார்த்தைகளால்!

-002.-

உன்
இதழ்களால் வெளிப்படும்
வார்த்தைகள் கேட்டு
உதிர்ந்து விட்ட பூக்களும்
உயிர்கொள்கின்றன
நீ அறிவியலின் புதுப்பரிமாணம்!


- இரா.ச.இமலாதித்தன் 

_

நீ நான் காதல்!




-001-

விடிகாலை பொழுதுகளில்

சாலையோரம் 
நீ பயணிக்கும் நேரமெல்லாம்
சூரியனும் விரைவாகவே
எழுந்து விடுகிறது
உன்னை தரிசிப்பதற்காக!

-002-

மாலை பொழுதில்

உன்புன்னைகைக் கண்டு 
நிலவுகூட சற்றுதடுமாறுகிறது
எனக்கு போட்டியாக
இவள் யாரென்று!

-003-

சூரிய உதயத்தை

உன் முகத்திலேயே
கண்டுவிடுகிறேன்
இரு புருவ மத்தியில்
பொட்டாக...!

-004-

நீ சிரிக்கின்றபோதெல்லாம்
நினைத்துகொள்வேன்
என்னைப்போல இன்னும் 
எத்தனை பேரை பைத்தியமாக்க
முயற்சித்தாயென்று...!

-005-

உன்னால் மட்டும்

எப்படி சாத்தியமாகிறது
ஆயுதமே இல்லாமல்
கண்களுக்குள் ஊடுருவி
கனத்த என் நெஞ்சை
கவர்ந்திழுக்க!

-006-

உன் இருவிழி
தரிசனம் கிடைக்காத நாட்களில்
பட்டினியாகவேகிடக்கிறது
என் நெஞ்சம்...!

-007-

நீ கோபப்படும் நேரங்களில்
என்னை பார்த்து சிரிக்கிறது

நீ புன்னகைக்கும் நேரங்களில்
என்னை பார்த்து சண்டையிடுகிறது
உன் விழிகளுக்கும் இதழ்களுக்கும்
என்னவொரு முரண்பாடு!

- இரா.ச.இமலாதித்தன் 



காதல் புதிது!




-001-

காலைப்பொழுது கடந்தபின்னும்
சாலையோர பூக்களெல்லாம்
மலராமலே காத்துகிடக்கிறது
உன் வருகைக்காக!

-002-

உன்னை கண்டபின்தான்
சின்னஞ்சிறு வண்ணப்பூக்களும்
புன்னகையை சிதறவிடுகிறது
என்னைப்போலவே!

-003-

உன்னை காணாத
நாட்களெல்லாம்
என் நாட்காட்டியில்
முடியுறாமலே
முழுமையற்று கிடக்கின்றன
நாட்கள் அனைத்தும்!

-004-


நீ என்னை
கடந்து செல்லும்
நேரமெல்லாம்
என் கடிகார முட்களும்
கண்ணடித்து சிரிக்கின்றன
வந்துவிட்டாள் தேவதையென்று!

-005-

நீ
யாரென்றே தெரியவில்லை
இருந்தாலும்
உன்னை நினைத்தே
காகிதங்களில்
கிறுக்கிக் கொண்டிருந்தேன்
கவிதை என்றார்கள்!

-006-

உறங்கா இரவுகளில்

உன்னிடமே
பேசிக்கொண்டு இருக்கிறேன்
படுக்கையறையில்
தன்னந்தனியாய்!


- இரா.ச.இமலாதித்தன்



காதல் முதல்!




-001-


அலைகள் கூட
என்னிடம் கேட்குதடி...
உன்னவள் எங்கென்று ?
எப்படி சொல்ல
நீ இன்னொருவனுக்கு
மனைவியானதை...!   


-002-
 
என்னைபோல் அலைகளும்
உன் பெயரை  உச்சரித்துக்கொண்டே
நீ நின்ற இடத்தைத் 

தொட்டுவிட்டு செல்கிறதே
ஏன்?
என்னிடம் சொன்னதுபோல்
அலைகளிடமும் சொல்லிவிட்டாயா
காதலிக்கிறேனென்று! 


-003-
 
அன்பே நீயும்
பங்குசந்தை போலத்தான்
நேற்று
சந்தோசப்பட வைத்தாய்
இன்று
சங்கடப்பட வைக்கிறாய்!


-004-

நாம் இருவரும்
கைகோர்க்காமல்
கடற்கரையில்
கடந்துசெல்லும்
தருணங்களில்
அலைகள் கூட
உள்வாங்கி கொள்கிறது!


- இரா.ச.இமலாதித்தன்