தேர்தல் தீபாவளி!



இரு மாதங்களாகவே களைக்கட்டிய
திருவிழாக்கோலமெல்லாம்
இன்றோ வெறுமையாக கிடக்கின்றது;
நெரிசல் நிரம்பிய இரைச்சலின்றி
யாருமற்ற வீதியெங்கும்
தனிமையின் ஓலங்கள் வியாபித்திருந்தது;
சம்பளத்தேதிக்கு முன் வந்துபோகும்
எந்தவொரு சுபவிழாக்களும்
இப்போதெல்லாம் சுணக்கமாகவே கடந்துபோகின்றது;
மூன்று ரூபாய் தினசரி நாளிதழை கூட
வாங்கமுடியாததை உணராமலேயே
தேநீரகத்திலும் முடிதிருத்தகத்திலும்
உலக பொருளாதரத்தை விமர்சிப்பது போல
சுயத்தின் வலியை அறிந்துகொள்ளமலேயே
வேறெங்கேயோயுள்ள அற்ப சுகத்தை
எல்லோரது மனதும் தேடிக்கொண்டிருக்கிறது;
இலவசத்துக்கும் பணத்துக்கும் கையேந்தும்
வாக்காளனாய் தமிழன் வக்கற்று போனதால்
இந்த வருட திருவிழா காலமும்
சென்ற சில வருடங்களை போலவே
இருளிலேயே தனித்து கிடக்கிறது
வெறுமையோடு இருமாதங்களாக!

- இரா.ச.இமலாதித்தன்


இந்த கிறுக்கல் வல்லமை இணைய மின்னிதழிலும் வெளிவந்துள்ளது.

அரசியல் வியாதி!



பொது கழிவறை சுவற்றில்
கிறுக்கிய வார்த்தைகளால்
ஒவ்வொரு இரவுகளிலும்
போதையில் யாராரையோ
தூற்றிக்கொண்டிருந்தான்;
யோக்கியனென அடையாளப்படுத்த
மிகவும் மெனக்கெட்டு
தேர்ந்தெடுத்து கொண்டிருந்தான்
தன்னுடைகளோடு தலைவனையும்;
அரசியல் சாக்கடையில்
வெண்ணிற சட்டையோடு
கட்சிக்கரை வேட்டியோடும்
தூர்வார இறங்கிவந்தான்
தன்மீது கறைபடியாமல்;
திராவிடன் என்ற போர்வையில்
தலைமையின் ஊழலை
தானும் கற்றுக்கொண்டு
உடன்பிறப்பாக்கி கொண்டான்
அரசியலை முழுநேர தொழிலாக!

- இரா.ச.இமலாதித்தன்

அழகிய வான் மேகம்!



வானில் ஓர் அழகிய ஓவியம்
மேகத்தூரிகையால் தீட்டப்பட்டு
ஒருசில நொடிகளுக்குள்ளேயே
அது களையவும் ஆயத்தமாகிறது;
கிழக்கின் கீழிருந்து முளைத்த
ஆதித்த ஒளிகற்றையும் மேல் செல்ல
வான்மரத்தின் உச்சியடைந்த நாழிகையில்
மேற்கு நோக்கி பயணப்பட எத்தனித்து
நாளைய வெளிச்சத்தின் அறுவடைக்காக
அது விதையாய் விழுந்துகொண்டிருந்தது;
வெண்மஞ்சள் வண்ணங்களில் இருள்சூழ
இமைகள் போர்த்திய விழிகள்போல
இரவும் மெதுவாய் உலகில் எட்டிப்பார்த்தது;
தங்களுக்குள்ளேயே யார் அழகென்று
நட்சத்திரங்கள் யுத்தமிட்டுகொண்டிருக்க
நிலவு வந்தவுடன் இமைகள் திறந்த விழிகளாய்
வான்வெளியில் வெளிச்சம் படர்ந்ததும்
ஒருவழியாய் அழகுயாரென்ற போட்டியில்
வழமைபோல நிலவே வாகை சூட
நிசப்பதமான நீண்டதொரு பொழுதில்
நட்சத்திரங்களோடு நிலவும்
அழகாய் உறங்க தொடங்கியது

அவளைப்போலவே!

- இரா.ச.இமலாதித்தன்

காதல் கொஞ்சம்!



--001--

நாற்பது மைல்தூர பேருந்து பயணத்தின்
அன்றைய தருணங்களெல்லாம்
நான்கே நொடிகளில்
கடந்திருப்பதாய் உணர்ந்திருந்தும்
இப்போதைய நான்கு மைல்தூர பயணங்கள்
ஒரு நாளையே விழுங்கிக்கொண்டிருக்கிறது
அருகில் அவளில்லை!

--002--

ஒவ்வொரு பேருந்து பயணங்களிலும்
ஏதோவொரு இருக்கைக்கருகில்
எழுதப்பட்டிருந்த காதலர் பெயர்கள்
சட்டென்று பிம்பமாய் வெளிப்பட்டு
உருமாறி இடம்பெயர்ந்திருந்தது
என்பெயரோடு உன்பெயராய்!
 

--003--

கடவுளிடம் விண்ணப்பித்திருந்தேன்
வருங்கால மனைவி யாரென்று;
பதில் வந்தது நட்சத்திரங்களாய்...
வியந்துபோனேன்;
என் கடவுச்சொல் அவளது பெயரென்பதால்!

- இரா.ச.இமலாதித்தன்

என்னைத்தேடிய நான்!



நொடிகளை கொன்ற நிமிடங்களெல்லாம்
சட்டென்று கடந்து போகும் நாழிகைக்குள்
தொலைத்த வருடங்களை தேடிக்கொண்டிருந்தது;
நாட்களோடு மாதமாய் உருமாறிப்போன
வருடங்களும் இலக்கேதுமில்லாமல்
எங்கயோ விரைந்து கொண்டிருந்தது;
நீண்ட உறக்கத்திற்கு நடுவே கனவுகளாக
உயிர் ரகசியமும் தோன்றி மறைகிறது;
பிறப்புக்கும் இறப்புக்கும் இடையிலிந்த
சின்னஞ்சிறு பயணத்தின் சுவடுகள் யாவும்
ஏதோவொரு வரலாறாக்கப்படுவதற்காகவே
உறக்கத்திலேயே கருவாக உட்புகுந்து
உடலாக உயிரோடும் உறவாடிக்கொண்டிருந்தது;
விழிப்புகளுக்கு அப்பால் நேர்ந்ததையுணர
விழிகளுக்குள்ளே காத்திருந்த ஏக்கத்தோடு
அழியும் உடலை அறிவு ஆயத்தபடுத்தியது;
முடிவிலியாய் நீண்டுக்கொண்டிருக்கும்
அழிவில்லா ஒன்றை எதுவென யூகிக்க முடியாமல்
பயணமும் தொடர்ந்துகொண்டேயிருக்கிறது
இந்த உடலுக்குள் நான் யாரென்ற தேடல்களோடு!

- இரா.ச.இமலாதித்தன்


இந்த கிறுக்கல்கள் வல்லமை மின்னிதழிலும் பிரசுரமாகியுள்ளது.

கலாய்த்தல் திணை!



--001--

நீ மட்டும்தான்
அழகென்று சொன்னதும்
சிரித்தாள்;
நானும் பதிலாய் சிரித்தேன்
சொன்னது பொய் என்பதால்!

--002--

நட்பா? காதலா?
எது பெரியது என்றாள்;
காதலியின் நட்பென்றேன்...
கட்டியணைத்தாள்;
கழண்டு கொண்டேன்
நண்பனாகவே!

--003--

தேவதை நீ யென்றதும்
பறக்க ஆயத்தமானாள்
வரம் கொடுப்பது மட்டுமே
தேவதைக்கு அழகென்றேன்;
என் பணம் தப்பித்தது!

--004--

அடிக்கடி உன் நினைவிலேயே
அலுவல்களை மறந்துவிட்டதாய்
அவளிடம் சொன்னேன்...
ம்ம்ம் என்றாள்;
உன்னையும் ஒருநாள் என்றேன்
புரியவில்லை அவளுக்கு!

--005--

நம் முதல் சந்திப்பு
நினைவிருக்கிறதா என்றாள்;
உன் தோழியோடு
உன்னை சந்தித்ததாய் சொன்னேன்..
ஆச்சரியத்தோடு
அந்த அளவுக்கு பிடிக்குமா என்றாள்;
தோழியை பிடிக்குமென்றேன்!

- இரா.ச.இமலாதித்தன்



இது யார் மனதையும் காயப்படுத்துவதற்காக அல்ல; கலாய்ப்பதற்காக மட்டுமே!

காதல் தேவதை!



-001-

பறவைக்கு மட்டும்தான்
சிறகுகள் உண்டா என்றாள்;
தேவதைக்கும் உண்டு
உன்னைபோன்ற சிலர்
விதிவிலக்கென்றேன்;
கேட்காமலேயே கிடைத்தது!

-002-

மின்மடலின் கடவுச்சொல்
என்னவென்றாள்;
தேவதை என்றேன்...
என்னென்னமோ
யோசித்துக்கொண்டிருந்தாள்
அவளது பெயரை மறந்துவிட்டு!
 

-003-

காதல் என்னவென்றாள்
என்னை நீ
புரிந்துகொள்ளென்றேன்
இன்னும் கிடைக்கவில்லை
அவளுக்கான பதில்!

-004-

நமக்குள் நட்பு
எப்படி உருவானதென்றாள்
சிரித்தேன்;
மறந்துவிட்டதாய் சொல்லி
நினைவுப் படுத்தினாள்;
மறுமுறையும் சிரித்தேன்
மீண்டுமொருநாள் நினைவுபடுத்த
புதுக்காதல் இருப்பதால்!

- இரா.ச.இமலாதித்தன்

நடுநிசி நிகழ்வுகள்!



ஏதோவொரு இலக்கை நோக்கிய
ஆழ்ந்த இரவின் கரங்கள்
வெகுதொலைவில் நீண்டு கொண்டிருக்கிறது...
கண்களுக்குள் அகப்படும் உருவங்கள்
தனக்கான அடையாளங்களை உதறிக்கொண்டு
அமீபாவாய் உருமாற ஆயத்தமானது;
செப்பனிடாத குறுஞ்சாலை நடுவே
தென்பட்ட பள்ளங்களிலெல்லாம்
தேங்கி நின்ற தண்ணீருக்குள்
நிலவும் நீந்திக் கொண்டிருந்தது;
வெயிலின் தாக்கம் அனைத்தையும்
வெகுநேரமாய் உள்வாங்கிக்கொண்டிருந்த
சாலையோர மரங்களனைத்தும்
சற்றுநேரம் உறங்கிக்கொண்டிருந்தன;
பலவருடங்களாய் பூமியில் சேமிக்கப்பட்ட
புதையலின் குவியல்கள் சுரண்டப்பட்டு
வறண்டு கிடந்த ஆற்றின் நடுவே
அடையாளங்களாய் காட்சிக்கு விடப்பட்டிருந்தன;
உறக்கம் தொலைத்த ஒவ்வொரு இரவுக்குள்ளும்
நாய்களின் கூச்சலுக்கிடையே குறட்டை சத்தங்களும்
நிசப்த நாழிகையின் உயிர்நாடியை
நிறுத்த முயல்கின்றன;
இப்படி ஏதோவொரு நிகழ்வுகள்
நடுநிசி பொழுதுகளில் பயணிக்கும்
எல்லா நாட்களிலும்
கடந்து மறைகின்றன நாளைய விடியலோடு!

- இரா.ச.இமலாதித்தன்


இந்த கிறுக்கல்கள் அதீதம் இணையத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.

மரணங்கள் முடிவதில்லை!


 

உன்னைவிட்டு பிரியப்போவதாய்
உரையாடிக்கொண்டிருக்கும் வேளையில்
சட்டென்று சிலிர்த்துக்கொண்டு
மறுமொழி ஏதும் சொல்லாமல்
மௌனத்தை மட்டுமே
முழுவதுமாய் பரவச்செய்து
புன்னகையை தவழ விட்டதும்
குழம்பி நிற்கிறது உடல்;
பிரிதலை ஏன் சொன்னோமென்று
உடனடியாய் தன்னிலை மாறுதலாக்கி
மௌனத்திலேயே லயித்திருக்க முடிவுசெய்து
தன்னைத்தானே ஆசுவாசப்படுத்தி
சூழ்ந்த அமைதியை கலைக்காமல்
ஆழ்ந்து நீடித்திருந்தது உயிர்;

கடைசிநேர பரிவர்த்தனையாய்
ஏதேதோ செய்யலாமென முயன்றும்
தோல்வியடையப்போவதை
உணர்ந்திருந்த உடலும்
இத்தனை நாட்களாய்
உடன்பிறப்பாய் உள்ளிருந்த
உறவின் தவக்காலம் முடிந்து
பயணப்பட ஆயத்தாமாயிருந்த
அழிவில்லா ஆன்மாவை 

வழியனுப்பி வைத்தது
முடிவில்லா மரணத்தால்!


- இரா.ச.இமலாதித்தன்

சாதிப்பிழை!



சாதிகள் இல்லையென்று
எழுத்துகளால் உரைத்தவனை
கவிஞன் என்றான்;
சாதிமத பேதம் இல்லையென்று
மேடையில் முழங்கியவனை
தலைவன் என்றான்;
சாதீய மாயையென்ற
சமுதாயப்பிழை உருவாக
கருவானவனை மட்டுமேன்
இறைவன் என்றான்?
இந்தகேள்விகளோடே
தினந்தோறும் நுழைகின்றான்
கோயிலுக்குள் அவன்!

- இரா.ச.இமலாதித்தன்

உடன் பிறப்பே!




செந்தமிழென்றாய்
தன்மக்கள் நீயென்றாய்
என் உடன்பிறப்பே வாவென்றாய்
எப்போதும் நீ மட்டுமே வென்றாய்;
மொழிதான் உன் மூச்சென்றாய்
மூச்சை திணறடித்து
மூழ்கி கிடப்பதுவும் பிடிக்குமென்றாய்;
பகுத்தறிவே தன்மானம் காக்கின்ற
மேலாடை என்றுரைத்தாய் - இப்போதோ
உள்ளாடையே இல்லாமல்
உல்லாசமாய் இருப்பதுகூட பிடிக்கிறதென்கிறாய்;
வாக்களித்தவர்களுக்காகவே வாழ்கிறேனென்றாய்
தமிழகமே தன் குடும்பமென்றாய்
ஓட்டுக்காகவே நீ உளறிக்கொண்டிருப்பதை
ஒவ்வொரு தேர்தலிலும் வாக்களித்த பின்புதான்
உணர்ந்து கொள்கிறோம் நாங்களும்
உன் குடும்பம் மட்டும் தான்
ஒட்டுமொத்த தமிழகமென்று!

- இரா.ச.இமலாதித்தன்

விழியின் வழியில்!



பொன்னிற மாலையில்
மண்ணுக்குள் மூழ்க
ஆயத்தமானது ஆதித்தன்;
வெகுநேரமாய்
நகர்ந்துக் கொண்டிருக்கும்
இந்த பாதையின் சுவடுகள்
நெடுந்தூரம் நீண்டிருக்கவில்லை;
வழி தெரியாமலே
கால்கள் இரண்டும்
ஒன்றோடொன்று முந்திக்கொண்டிருந்தன;
எந்தவொரு துருவமும்
அனுமானிக்கப்படாத வேளையில்
பேரிடருக்குள் அகப்பட்டிருப்பதாய்
அவதானித்திருந்தன விழிகள்;
பேரிருள் சூழ்ந்த
கார்மேக வானை நோக்கி
நிலவை தேடி
தோல்வியடையும் தருவாயில்
மாத வான் விடுமுறையை
நினைவு கூர்ந்து கொண்டிருந்தது மூளை;
வெகுநேர சுழற்சியின்
பயண களைப்பில்
சோர்வோடு திளைத்திருந்தது உடல்;
நீண்ட நேரம் நிகழ்வுகளுக்கிடையில்
காதோரம் ரீங்கரமிட்டது  அழைப்பொலி;
இமைகள் திறக்கும்போது
வெயிலின் வெளிச்சம்
விழிகளுக்குள் ஊடுருவ
மணி ஏழாகி இருந்தது;.
மீண்டுமந்த வழமையான
அலுவல்கள் தொடர
எழுந்து கொண்டிருக்கிறேன்
கனவிலிருந்து!

- இரா.ச.இமலாதித்தன்

அடையாளம்!



மதத்தின் குரு
சாத்வீக மனது
சாமனிய தவம்
ஏமாற்ற வலி
வள்ளுவ சிலை
காதலின் தோல்வி
நிகழ்கால ரௌத்ரம்
வறுமையின் உருவம்
கவிஞனின் அடையாளமென
அலங்கரிக்கப்படுகிறது
முகத்தில் தாடியாய்!

- இரா.ச.இமலாதித்தன்

நான் அவள் காதல்!




-001-

நமக்குள்ளான கூடலை பற்றி
கிறுக்க தொடங்கும்போது
எழுத்துகள் ஊடல் கொள்வதால்
பற்றில்லாமல் நிற்கிறது
தமிழ் மீதான காதல்!

-002-

நான் அவள்
மூன்றாவதாய்
அது
தனித்து நின்று
எங்கள் இருவரையும்
தனிமை படுத்தியது
தயக்கம்!

-003-

தமிழுக்கும் உனக்கும்
ஒரே ஒற்றுமை;
அறிய முடியவில்லை
சரியான வயதை!

-004-
 

நட்பு காதல்
எந்த ஒன்றை
பிடிக்குமென்றாய்
பதிலாக உன்னையென்றேன்!

-005-

உன் சிரிப்பு,கோபம், 

அழுகைக்கெல்லாம் 
அப்படியே மறுமொழிந்தேன்;
நீ வெட்கப் படுகிறாய்
பதிலாக
வேடிக்கை மட்டுமே
பார்க்க முடிகிறது!

-006-

முதல் நிகழ்வு
மீண்டும் நிகழ்வதில்லை
மீண்ட காதலில்!


- இரா.ச.இமலாதித்தன்

கனவுக்குள் மழை!




மண்ணை பழித்துக் கொண்டிருந்தது
மேகக்குழுமம்...
விண்ணை சூழ்ந்த வெள்ளை மின்னலால்
கிழித்தெறியப்படுகிறது வானம்;
ஆழ்ந்த இருளின் உயிர்முடிச்சும்
சற்றுநேரம் அவிழ்க்கப்படுகின்றது;
மீண்டுமிந்த இருள்சூழல்
தன் ஆளுமையை செலுத்திவிட
நீண்டுக்கொண்டிருக்கிறது;
வறண்ட வெளியினுள்
சின்னப்புன்னகையாய்
விழுந்த வெளிச்சம்
இன்னுமிங்கே சுகமாய்
நீந்திக்கொண்டிருக்க
கமழும் வாசனையை தவழவிட்டு
மருத மண்ணும்
தாலாட்டு பாடிக்கொண்டிருக்கிறது;
கோடைக்கால மழைப்போல
சிறு தூறலில் தொடங்கி
உச்சத்தையும் தொட்டுவிடும் நேரம்
மூடப்பட்ட கண்களின் வழியே
கனவுக்குள்ளிருந்து மீளப்பட்டு
நிகழ்வுகளும் களையப்படுகிறது!

- இரா.ச.இமலாதித்தன்


இந்த கிறுக்கல்கள் வல்லமை இதழிலும் பிரசுரமாகியுள்ளது.

பைரவ பயம்!



அதி காலை நேரம்
சிவன் கோயிலுக்குள்
கல்லாய் காட்சி தந்ததை
கரம்கூப்பி வணங்கியபோது
பக்தியால் பெருக்கெடுத்தவொன்றும்...
அந்தி மாலை நேரம்
சிவன்கோயில் தெருவோரம்
கல்லெடுத்து விரட்டும்போது
பயத்தினால் உருவெடுத்தவொன்றும்...
ஒன்றோடொன்றாய் மற்றொன்றோடு
என் மனதுக்குள் ஒருங்கிணைந்து
உள்ளேயும் வெளியேயும்
முரண்பாடாய் நின்றிருந்தது
நாயும் பைரவனுமாய்!

- இரா.ச.இமலாதித்தன்

யார் கடவுள்?


நானும் நீயும் யாரென கேட்டேன்
மனிதன் என்றாய்...
அதுவும் அவையும் ஏதேன கேட்டேன்
மிருகம் என்றாய்...
எதுதான் உனக்கான வரையறையில்
இறைவன் என்றேன்...
உனக்கு தெரியாதாவென்று
எனக்கான பதிலை
என்னிடமே சொல்லேனென்றாய்;

மனதை அறிவால் குவித்து
மனித மிருக பாகுபாடற்ற
இயல்பே இறைவனென்றேன்;.
இங்கே இயல்பென்பதே
எதுவென்று தெரியாத போது
இறைவனை எங்கே தேடுவதென்றாய்?

அந்த தேடலே மார்க்கம் என்றேன்;
மதத்தை பிடித்தவருக்கு
தன்மனதை அடக்கத் தெரியாதபோது
மார்க்கத்திலும் மாற்றம் வருமென்றாய்;
மதம் மார்க்கம் என்பதெல்லாம்
மனம் மாற்றத்தில்தான் உள்ளதென்றேன்;
தடுமாறும் உள்ளங்களனைத்தும்
நிலைமாறும் ஒருநாள்
இறைகூட மாறுமோ யென்று
கேள்விகளுக்குள்ளேயே பதிலை தேடினேன்

இறைவனோ
மெளனமாய் என்னுள்
சிரித்துக்கொண்டிருக்கின்றான்!

- இரா.ச.இமலாதித்தன்

எனக்கொன்றும் தெரியாது!



திருவிழாக்கால நெரிசல்களில்
நான் தரிசிக்க முடியாத நம் குலசாமியை
நீ தவழ்ந்து நடந்த
பால்ய வயது பருவக்காலங்களில்
என் தோள்மீது உன்னை சுமந்து
உன் கண்கள் வழியாக
வழிபட்ட போதும்

எனக்கொன்றும் தெரியாது!

பள்ளி சென்று திரும்பாத
மாலைப்பொழுதுகளில்
படபடப்போடு
உன்னை வாரியணைத்து
உனக்கான வீட்டுப்பாடங்களை
நான் முடித்து கொடுத்து
உன் அச்சத்தையும்
கண்ணீர் துளிகளையும்
துடைத்தெறிந்த போதும்

எனக்கொன்றும் தெரியாது!

உன் கல்லூரிக்கால கட்டணங்களை
அக்கம்பக்கம் அலைந்துதேய்ந்து
வட்டிக்கு கடன்பட்டு
கடைசி நாளில்
கல்லூரி அலுவலர்களின்
வசைச்சொல்லை வாங்கிக்கொண்டு
உனக்கான பணத்தை செலுத்தியபோது
முகத்தை மட்டும் சிரிக்க
பழகிக்கொண்ட போதும்
எனக்கொன்றும் தெரியாது!

வருடங்கள் கடந்த பின்னே
நீயே பின்பொரு நாள்
இதை என்னிடமே சொல்லிவிட்டு
ஏளனம் செய்வாய் என்பதை பற்றி
இப்போதுதான் உணர்கிறேன்
எனக்கொன்றும் தெரியாது!

- இரா.ச.இமலாதித்தன்

நிழலும் நீயே!




ஆளரவமற்ற மதியநேர பயணத்தின்
அரங்கேறிய ஆகாய மார்க்க
ஆதித்த தாண்டவத்தில்
அல்லல் பட்டுக்கொண்டே
அவசரகதியில் கால்களிரண்டும்
நகர்ந்து கொண்டிருக்க;
நீண்ட நெடுந்தொலைவில்
என் தாயைப்போல் ஒருத்தி
என்னை இளைப்பாற்றி அரவணைக்க
அழைப்பு விடுக்கிறாள்
ஒற்றைக்காலோடு
நிழல் தரும் மரமாய்!

- இரா.ச.இமலாதித்தன்

விழிகளில் ஒரு கனவு!




உணர்வற்ற நடுநிசி தருணங்களிலும்
அதிகாலை முனகல்களிலும்
என்னை நானே வெற்றிக்கொள்ள;
எனக்காகவே போரிட்டுக் கொள்வதும்
என்னையே நானே போரிட்டுக் கொல்வதும்
உணர்வற்ற காட்சிப்பதிவுகளாய் அரங்கேற;
நான் நானாகவே நாயகனாக
புத்தம்புது அவதாரமாய் உருவெடுத்து
என்னால் என்னையே எதிராளியாக வீழ்த்தப்படும்
ஒவ்வொரு தருணங்களிலும்
எதிர்ப்படும் நிகழ்வுகள் அனைத்தும்
காட்சிப்படுத்தி பதிவாக்கப்படும்போது
அந்தரங்க சாட்சியங்கள் யாவும்
பல மர்ம முடிச்சுகளை அவிழ்த்தெறியுமோயென்ற
அச்சத்தோடே அரங்கேறிக்கொண்டிருக்கிறது
விழிகளுக்குள்ளே கனவும்!

- இரா.ச.இமலாதித்தன்

நீயில்லாத போது!



வானோடு நீலமும், 

காடோடு பசுமையும்
நிலத்தோடு மஞ்சளும், 

நிலவோடு வெண்மையும்
இரவோடு கருமையும், 

தீயோடு சிகப்புமாய்
ஏழு வண்ணங்களோடு
எல்லா திசைகளும் 

பல வண்ணங்களாய் சிதறிக்கிடக்கும் 
இவ்வேளையில் கூட
நிறங்கள் அனைத்தும்
வண்ணங்களற்று 

வெறிச்சோடி கிடக்கிறது
என்னருகில் நீயில்லாத போது!

- இரா.ச.இமலாதித்தன்

காதல் சேமிப்பு!


தோல்வியின் புன்னகை
வெற்றியின் கண்ணீர்
நண்பனின் உந்துதல்
எதிரியின் போர்க்குணம்
இதுபோல இன்னும் ஏராளமாய்
சேமித்து வைத்திருக்கிறேன்
உனக்கான என் நெஞ்சுக்குள்
பின்னொருநாளில் உன்னிடம் காண்பிக்க!


- இரா.ச.இமலாதித்தன் 

பிச்சை பாத்திரம்!



குளிரூட்டப்பட்ட வாகனத்தில்
பிராதன சாலையோரம்
பயணிக்கும் நேரமெல்லாம்
பிச்சைகேட்டு கையேந்தும்
மழலைகளின் கரங்களுக்குள்
உறங்கி கிடக்கிறது
ஆதரவற்ற அனாதையாய்
பொருளாதாரம்!

- இரா.ச.இமலாதித்தன்

தன்னந்தனியாய்!



தனிமைகள் அனைத்தும்
ஒருமித்து நிரம்பிவழியும்
எண்ணிக்கையற்ற நொடிகளுக்குள்...
சின்னஞ்சிறு அறையினுள்ளே
புதைக்கப்பட்டும்,
புதியதாய் உருவெடுக்கும்
ஒவ்வொரு எண்ணங்களுக்குள்ளும்
வட்டமிடுகிறது கோரமுகம்!

- இரா.ச.இமலாதித்தன்