அவள் நினைவோடு!



பச்சையும், மஞ்சளுமாக
நாளுக்கொரு
வண்ணங்களில் பூத்திருக்கும்
மலர்களின் பெயரை
யோசித்து கொண்டிருந்தேன்;
உன் விரல்களை விட்டு
விலகிய நகங்களில்
பூசப்பட்டிருக்கும் பேரழகிற்கு
என்ன பெயர் வைப்பதென?!

-

இயல்பை தொலைத்த
இவ்வாழ்வே
என் ஊழென தெரியாது;
உன்னிரு விழிகளின்
இமைக்கா நொடிகளில்
ஒவ்வொரு முறையும்
தப்பி பிழைத்து
ஒரேயடியாய்
விழுந்து கிடக்கும்
என் தற்செயல் நிகழ்வுகளை
மீட்டுக்கொடு;
இனியாவது
நானாக இருக்க முயல்கிறேன்!

-

அடிக்கடி அழைத்து பேசாத
நெருங்கிய உறவுகளின்
விடிகாலை
அலைபேசி அழைப்புகள்
ஏற்படுத்தும் பதற்றத்திற்கு

இணையானதொரு நிலையை
உருவாக்கி கொடுக்கிறாய்;
ஒவ்வொரு முறை
நீ என்னிடம் பேசும் பொழுதும்!

-
உன்னிரு பார்வைக்கு
ஆயிரம் கவிதைகள் எழுதலாம்;.
எங்கே விடுகிறாய்?
ஒவ்வொரு முறையும்
பிறப்பெடுத்து இறக்கிறேன்;
உன்னிலிருந்து
தப்பி பிழைப்பதே
பெருந்தவமாய் இருக்கிறது;
எப்படி எழுதி முடிப்பது?

-

வண்ணத்துப்பூச்சிகளின்
மகரந்த தீண்டலில்லாத போது
மிகப்பெரும் வனத்தின்
சின்னஞ்சிறு பூக்களனைத்தும்
பிரபஞ்ச தொடர்பின்றி
வண்ணங்கள் தொலைத்து
தனித்து கிடப்பதை போன்ற
வெறுமையை உணர்கிறேன்
நீ அருகிலில்லாத நாட்களில்!

-

உன் கண் மையில் மையல் கொண்ட
என்னை தொலைத்து
எங்கெங்கோ தேட வைக்கிறாய்,
நீ இருக்கும் திசையே கிழக்கானது;
நம்மிருவருக்குமிடையில்
நீளும் இரவின் வெறுமை போதும்,
ஆதித்த கதிர்களையே
ஆதிக்கம் செலுத்தும் உன்னுலகில்
எனக்கான விடியல் எப்போது?

-
நெற்றியில் பொட்டில்லை,
சூரிய கிரகணமானது;
புருவங்கள் உயர்த்துகிறாய்,
வானவில் இரண்டானது;
கொஞ்சம் முறைக்கிறாய்
குளிர் நிலவும் சுடுகின்றது;
மெல்ல சிரிக்கிறாய்,
நட்சத்திரங்கள் உதிர்கின்றன;
நீ எனக்கான தேவதை,
விலகாமல் அருகிலேயே இரு;
நமக்கானதொரு
புது உலகையே படைக்கிறேன்!

-

உன் தரிசனமற்ற நாட்களில்
போர்க்களத்தின்
இரைச்சலை உணர்த்துகிறது
என் தனிமை;
ஒற்றை நொடியில்
உயிர் கொல்லும் ஆயுதம்
உன்னிரு பார்வைகள்;
உடன்படிக்கையெல்லாம் வேண்டாம்
உயிரையெடுத்து போ
நீயில்லாமல்
அது மட்டும் எதற்கெனக்கு?

-

மிச்சமிருக்கும்
மிகக்குறைந்த அளவிலான
அலைபேசியின் மின்னிருப்பு போல
உன்னை
நினைவுப்படுத்திக்கொண்டே
இருக்கிறது மனது;
தொடர்புகளற்ற தொலைவில்
நீ இருக்கிறாய்!

-

வாயை மூடி
புன்னகைக்க முயல்கிறாய்,
உன்னிரு கண்களோ
அப்பட்டமாய்
சத்தமிட்டு சிரிக்கிறது;
காட்சிப்பிழைக்கு
சாட்சியங்கள் ஏதுமில்லை,
நீ மட்டுமே அங்கிருந்தாய்;
உன் புன்னகைப்புயலில்
சிக்கிக்கொண்ட
என்னை மீட்டெடுத்து
நிவாரணம் கொடு,
கொஞ்சம் பிழைக்கிறேன்!

-

தன் வேர்களையே தேட மறந்த
மரங்களின் கிளைகளில் அமர்ந்து
உயிரை கொத்தி தின்னும்
பெருவெளி பறவைகளின்
கூச்சலிடும் பேரொலிகளுக்கிடையே
அடர்வனத்தின் சிறுவழி பாதை,
வண்ணங்களனைத்தையும் தொலைத்து
வியாபித்திருக்கும் வான்வெளி போல
மனதிற்குள் விரிய தொடங்குகிறது;
புகழெனும் பெரும்போதையில்
என்னைத்தவிர எதையெதையோ
தேடிக்கொண்டிருக்கிறேன்,
முடிவுறா இப்பிரபஞ்ச பயணத்தில்
நானென்பது மட்டுமே அங்கிருக்கிறது!

- இரா.ச. இமலாதித்தன்

Post a Comment

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக