பூவிதழ்களின் காதல்!


















தன் சுமைகளை குறைத்து
இதழுறிஞ்சி உறவாடும்
காதலின் சூத்திரத்தை
யார் சொல்லித்தந்தது
தேனீக்களுக்கு?
யாராரோ சொன்ன
அன்பும் கடவுள் தான் போல!

---

பூக்களின் மொழிகளை
புரிந்து கொள்ளும்
தேனீக்களின் அறிவில்
ஹார்மோன்களற்ற
சின்னஞ்சிறு காதலே
கலந்திருக்கிறது;
இது அறிவியலில்லை!

---

பல்லுயிர்களின்
உயிர்மூச்சை வாரி வழங்கும்
பெருங்காடுகளை உருவாக்குகின்ற
பூக்களுக்கும்
பட்டாம்பூச்சிக்களுக்குமான
வரம்புகளற்ற காதலை,
ஒவ்வாத உறவென
எதிர்க்க யாருக்கிங்கே
துணிவிருக்கிறது?

---

பூவிதழ்களில் அவிழும்
பிரபஞ்சத் துளிகளை
சேகரித்து வைத்திருக்கிறன
தனக்கானதோர் உலகில்
தேனீக்களெல்லாம்!

---

நாளை அகதியாக்கப்படுவோமென
தெரியாமல்
யாருக்காகவோ சேர்த்து வைக்கும்
கஞ்சனின் பெருஞ்சொத்தை
நினைவுபடுத்துக்கின்றன
தேன்கூடுகள்!

- இரா.ச.இமலாதித்தன்

Post a Comment

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக