புன்னகை பூவே!



பெண்ணின் புன்னகை பற்றி வர்ணித்த
எத்தனையோ கவிஞர்களின்
வார்த்தைகளெல்லாம் உயர்வுநவிற்சி புனைவென்று
கடந்து சென்று கொண்டிருந்த ஏதோவொரு நாளில்
என் கடந்த கால எண்ணங்களையெல்லாம்
தொலைய வைப்பதற்காகவே
நீ சிரித்து தொலைத்து விட்டாய்;
உதடுகளுக்கும் பற்களுக்கும் போட்டியாக
கண்களும் சிரித்து கொண்டிருக்கும் - அந்த
நிசப்தமான பெரிய புன்னகையை கண்ட பிறகே
என் கண்களிரண்டும் மோட்சமடைந்திருக்க கூடும்;
உன் சிரிப்பினில் எத்தனை பேரின் உடல்கள்
மீண்டும் உயிர்த்தெழுந்ததென தெரியவில்லை;
குறைந்த பட்சம் என்னருகிலாவது இனி
அந்த மந்திரப்புன்னகையை சிதற விடாமலிரு
ஏற்கனவே சின்னாபின்னமாகித்தான் கிடக்கிறது
இந்த சின்னஞ்சிறு மனது!

- இரா.ச.இமலாதித்தன்

Post a Comment

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக