ரகசியம்!




உள்ளுணர்வுகளை 
ஆழமாக உணர்கிறேன்; 
ஆழ்மனதோடும் 
அடைக்கலமாகிறேன்;
பிரபஞ்சத்தையே 
தழுவிக்கொள்கிறேன்;
வெட்டவெளிக்குள்
இருளுமில்லை; 
வெளிச்சமுமில்லை;
காலமென்ற மாயையை
கனப்பொழுதில் கடக்கிறேன்;
கனவும் நிழலும் இணையும் 
மூன்றாம் புள்ளியில் 
ஒன்றாய் குவிகிறேன்;
எண்ணங்களின் முடிவிலி அறிய
என்னுள் நுழைகிறேன்;
திமிரியெழும் 
இரு கொம்புகள் உடைக்கிறேன்;
ரகசியங்களின் சிறகுகளை விரித்து
மேலே பறக்கிறேன்; 
இரு கண்களுக்கிடையே 
சிக்கிய குறிக்குள் விழுந்து 
உன்னை அறிகிறேன்;
கருப்பும் சிவப்பும் ஒன்றென 
உண்மை தெரிகிறேன்;
எண் போல
நீ
இதுவரையிலும்
என் போல
வரையறுக்கப்படவே இல்லை!

- இரா.ச. இமலாதித்தன்

Post a Comment

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக