நீயுமென் இறைவனே!



என் சின்னஞ்சிறு வயதிலிருந்தே
எனக்கான வலிகளை
உனக்குள்ளேயே மறைத்து கொண்டிருந்தாய்;
கல்லூரி கடந்த காலக்கட்டத்திலும்
உன் மீதான பயத்தை மட்டுமே
எனக்குள்ளாக திணித்து கொண்டிருந்தேன்;
ஊருராய் வேலைத்தேடி
நாய்போல அலைந்தபோது
எனக்காக நீதானே துயரப்பட்டாய்;
நீயடைந்த கஷ்டங்களை
துளியளவு உணரும் வேளை
வாழ்க்கையென்ற மைதானத்தில்
நானுமொரு தகப்பனாகிவிட்டேன்;
உன் ஒருதுளி விந்தால் உருவாக்கப்பட்ட
இந்த உடலுக்கு நீயுமென் இறைவனென்பதை
இப்போதுதான் உணர்ந்து கொண்டேன்
வெறும் தந்தை மட்டுமே நீயில்லை!

- இரா.ச.இமலாதித்தன்

இப்படியுமொரு தேடல்!



நேற்றை தொலைத்து
இன்றைக்குள் நாளையினை தேடும்
நவீன மனிதனின் நாகரீகமென்பது
ஆடை குறைப்பு
தாய்மொழி மறந்து பிறமொழி கலப்பு
பணமென்ற இலக்கு
இப்படி கணக்கீடோடு மட்டுமே
நகர தொடங்கி விட்டன;
மனதை உள்ளடக்கிய மனிதனை
இறைவன் தேடிக்கொண்டிருக்க;
இவனோ
பணத்தில், பணத்தால்
இறைவனை தேடிக்கொண்டிருக்கிறான்;.
இவனது தேடல் 

தினம் தினம்
நடந்து கொண்டேதான் இருக்கிறது
தொலைத்த ஒன்றை
தனக்குள் இருப்பதை தெரியாமலே!

- இரா.ச.இமலாதித்தன்

நான் கேள்வியானால்!



எனக்குள்ளேயே கேள்வி அம்புகளால்
துளைத்துக் கொண்டிருந்தேன்
தொலைந்து போன உடலை
தெரிந்து கொள்வதற்காக;
அழியும் உடலையும்
முறியும் உறவையும்
உணர்வதால் என்ன பயனென்று
கேள்வியாகவே பதில் கிடைத்தது;
எனக்கான தேடலில்
கேள்வியும் பதிலும்
என்னுள்ளேயே எப்படியுள்ளதென்பதை
மீண்டுமொரு கேள்வியாக்கினேன்;
உள்ளத்தை கடந்து வா
உள்ளதை உணமையாய் அறிந்து
பெருவேளிச்சமே கடவுளென்பதை
காலம் கடந்தபின் உணர்வாயென
என்னிலிருந்தே ரகசியம் வெளிப்பட;
உள்ளுக்குள் ஆராய்ந்தேன்
பெருவெளிச்சத்தின் அணுவொன்று

அனலாக உறங்கி கொண்டிருக்கிறது
ஆன்மாயென்ற பொதுப்பெயரால்!

- இரா.ச.இமலாதித்தன்

சிலைகளில் இறைவன்!





மாயை சூழ்ந்திருக்கும்
சிலையை கவனித்துக் கொண்டிருந்தேன்
உடலை சிலிர்க்கும்
உருவமொன்று உருவாகிக்கொண்டிருந்தது;

மௌனித்துக் கொண்டிருந்த உதடுகளும்
மெல்லியதாய் முனுமுனுக்க தொடங்கின
செவிக்கொடுத்து கேட்க தொடங்கினேன்
மனம் மட்டுமே புரிந்து கொண்டது;
சட்டென்று கரங்கள் இரண்டும்
வணங்க ஆயத்தமாயின
உணர்ந்து கொண்டேன்
உருவம் கடந்த இறைவன்
சிலையில் மட்டும் இல்லையென்பதை!

- இரா.ச.இமலாதித்தன்

மனமெனும் மாயை!



இதயத்திற்குள் அம்பு துளைத்ததாய்
தூரிகையால் வரைந்து கொண்டே
மனது வலிக்கிறதென்றான்;
எது மனமென்றால்
நெஞ்சை தடவிக்கொடுத்து
அதைத்தான் இதயமென்றான்;
மூளை செய்வதையெல்லாம்
அறியாமலே அழுது புலம்பி
இடையில் காதலென்றான்;
இறுதியில் தோல்வியென்று
மரணத்தின் பாதையை தேடத்தொடங்க;

புதியதாய் ஏதோவொன்று
வாழ்வில் இதுவரை உணராததை
உள்வாங்க ஆயத்தமானபோது
இதயம் துளைக்கப்பட்டிருந்தது
ஓவியத்திலல்ல!

- இரா.ச.இமலாதித்தன்

விழிகளின் பயணம்!



விழிகளை வானம் ஏமாற்றிக்கொண்டிருக்க
நீலத்தை நோக்கி பயணிக்க தொடங்கின பார்வைகள்;
வரையறுக்கப்படாத இலக்கின் தூரம்
மெல்லமெல்ல நீண்டுக்கொண்டே
வண்ணங்கள் ஏதுமில்லா காட்சிப்பிழையாய்
சிதறிக்கிடந்த நீலமெல்லாம் நீர்த்துக் கொண்டிருந்தன;
பார்வைகள் விசாலமாய் பரந்து விரிய
பழைய படிப்பினைகளெல்லாம் படிக்கட்டுகளாய்
புதிய பரிமாணத்தோடு வெளியெங்கும் பரிணமித்திருந்தன;
கனவுகளை காட்சிகளாய் வடிகட்டி
கணக்கிட தெரிந்த விழிகளும்
வெகுநேரமாய் இலக்கை துலாவிக் கொண்டிருந்தன;
தேடலே வாழ்வியல் ரகசியமென்பதை 

இன்னமும் அது புரிந்து கொள்ளவில்லை!

- இரா.ச.இமலாதித்தன்

யாரோவொன்றின் வாழ்த்துகள்!





மனிதனாய் வாழ்வது கடினமாய் இருக்கிறது
இறைவனாகவே ஆகிவிடவாயென்று
ஆகாய ஆதித்தனிடம்
ஏதோதோ கோரிக்கைகளோடு
மனங்களெல்லாம் வழிபட்டுக்கொண்டிருந்தது.
உழைப்பை பயிற்றுவித்து
உணவளித்த இறைவனுக்கு கைமாறாய்
தையில் கொண்டாடப்படும்  வழிபாட்டு திருவிழாவில்;
நிலவில் குடிபுகுந்தாலும் நிலமும் உழவுமில்லாத
உணவு உனக்கில்லையென்று மனதோடு மறுமொழிந்து
முதலில் நீ உயிராய் இருக்க 

முயற்சிக்க வாழ்த்துகளை சொல்லிவிட்டு சென்றது
கடவுளும் மனிதனுமில்லா ஏதோவொன்று!

- இரா.ச.இமலாதித்தன்

இந்த கிறுக்கல்கள் வல்லமை மின்னிதழிலும் வெளிவந்துள்ளது.

தேர்தல் தீபாவளி!



இரு மாதங்களாகவே களைக்கட்டிய
திருவிழாக்கோலமெல்லாம்
இன்றோ வெறுமையாக கிடக்கின்றது;
நெரிசல் நிரம்பிய இரைச்சலின்றி
யாருமற்ற வீதியெங்கும்
தனிமையின் ஓலங்கள் வியாபித்திருந்தது;
சம்பளத்தேதிக்கு முன் வந்துபோகும்
எந்தவொரு சுபவிழாக்களும்
இப்போதெல்லாம் சுணக்கமாகவே கடந்துபோகின்றது;
மூன்று ரூபாய் தினசரி நாளிதழை கூட
வாங்கமுடியாததை உணராமலேயே
தேநீரகத்திலும் முடிதிருத்தகத்திலும்
உலக பொருளாதரத்தை விமர்சிப்பது போல
சுயத்தின் வலியை அறிந்துகொள்ளமலேயே
வேறெங்கேயோயுள்ள அற்ப சுகத்தை
எல்லோரது மனதும் தேடிக்கொண்டிருக்கிறது;
இலவசத்துக்கும் பணத்துக்கும் கையேந்தும்
வாக்காளனாய் தமிழன் வக்கற்று போனதால்
இந்த வருட திருவிழா காலமும்
சென்ற சில வருடங்களை போலவே
இருளிலேயே தனித்து கிடக்கிறது
வெறுமையோடு இருமாதங்களாக!

- இரா.ச.இமலாதித்தன்


இந்த கிறுக்கல் வல்லமை இணைய மின்னிதழிலும் வெளிவந்துள்ளது.

அரசியல் வியாதி!



பொது கழிவறை சுவற்றில்
கிறுக்கிய வார்த்தைகளால்
ஒவ்வொரு இரவுகளிலும்
போதையில் யாராரையோ
தூற்றிக்கொண்டிருந்தான்;
யோக்கியனென அடையாளப்படுத்த
மிகவும் மெனக்கெட்டு
தேர்ந்தெடுத்து கொண்டிருந்தான்
தன்னுடைகளோடு தலைவனையும்;
அரசியல் சாக்கடையில்
வெண்ணிற சட்டையோடு
கட்சிக்கரை வேட்டியோடும்
தூர்வார இறங்கிவந்தான்
தன்மீது கறைபடியாமல்;
திராவிடன் என்ற போர்வையில்
தலைமையின் ஊழலை
தானும் கற்றுக்கொண்டு
உடன்பிறப்பாக்கி கொண்டான்
அரசியலை முழுநேர தொழிலாக!

- இரா.ச.இமலாதித்தன்