சுயம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சுயம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

நானும் நீ!




இத்தனை வருடங்களில்
எத்தனை முறை இதே தேதியை
கிழித்தேனென தெரியவில்லை;
பனிரெண்டு எண்களுக்குள்ளான
நெடுந்தூர ஓட்டக்களத்தில்
ஆரம்பித்த இடம் தெரியாமல்
ஆரம் போல சுற்றிக்கொண்டிருக்கும்
கடிகார முட்களோடு முட்டி மோதி
கோடிக்கணக்கான நாழிகைகளை
என்னுள் விழுங்கிருக்கிறேன்;
இரவும் பகலும் கடந்த
ஒவ்வொரு பொழுதுகளிலும்
ஏதோவொரு கனவுகளோடு
எதையெதையோ தொடர்பு படுத்தி
என்னையே தொலைத்திருக்கிறேன்;
வரையறையற்ற காலமெனும்
நிர்ணயிக்க முடியாத மாயைக்குள்
நிரந்தரமில்லாத இவ்வாழ்க்கைக்காக
யாராகவோ தான் உருமாறி கிடக்கிறேன்;
இவையெல்லாம் நிச்சயம் நானல்ல
முடிவிலியான காலம்
இன்று நானாக இருக்கிறது;
நேற்றோ நாளையோ
நீங்களாக கூட இருக்கலாம்!

- இரா.ச. இமலாதித்தன்

அவனும் நானும்!






















உயிரற்றதாக வரையறுக்கப்பட்ட

எல்லாவற்றிற்குள்ளும்
ஓர் உயிரை உணர்ந்த பின்னால்
ரத்தமும் சதையுமான
துர்நாற்றமடிக்கும் இவ்வுடலிலுள்ள வாலை 
எப்போது தொலைத்தேனென தெரியாமலேயே
தலை வரை நீண்ட முதுகெலும்பிற்குள்
என்னுயிரை தேடி பயணிக்கிறேன்;
இடை மறித்து
அவனென் கண்களை உற்று நோக்கி
ஏதேதோ சொல்கிறான்;
ஒலிக்கு தானே, தேவ பாஷை?
அவனோ ஒளியில் உரையாடுகிறான்;
நான் என்பதை
தேடவா? தொலைக்கவா?யென
அவனிடம் கேட்காமலே
கவனித்தலின் கடைசி புரிதலில்
சட்டென பதிலைச் சொல்லி
கடந்து போகிறான், மீண்டும் என்னுள்;
அவனும் நானும் வேறல்ல தான் போல!

- இரா.ச. இமலாதித்தன்

நான் கடவுள்!


உடலுயிர்
இதிலெது நீயென
கேள்விகள் ஆயிரம்;
இதுதான் நானென
பதில்களில் ஆணவம்...
கடந்து வந்த பாதையெங்கும்
நிரம்பிய நினைவுகளில்
பிரமிக்க வேறேதுமில்லை;
காலமெல்லாம்
சரி தவறென்ற வாதங்களிலும்
சான்றுகளுக்கான தேடல்களிலும்
தொலைந்து போகிறது மனம்...
இலக்கில்லா வாழ்க்கையில்
வரையறுக்கப்பட்ட மரணமும்
அதன் பின்னாலான சரணமும்
உன்னையே பிரதிபலிக்க;
நீயும் நானும் வேறில்லையென
உணர வைக்கிறாய் திரு முருகா!

- இரா.ச.இமலாதித்தன்

சாட்டையில்லா பம்பரம்!


 
அவன் வீட்டில்
அவனை தவிர வேறாரையும்
எனக்கு தெரியாது;
ஆறுமாதம் முன்பு
அவனது தந்தையின் இறப்புக்காக
ஒருநாள் இரவு முழுவதும்
மார்கழி பனிக்கால
வெட்டவெளியில்
அவனோடு கூடவே இருந்து
மறுநாள் சுடுகாடு வரை
பம்பரமாய் சுற்றிக்கொண்டிருந்தேன்...
இன்று
அவனே இறந்துவிட்டான்;
ஒரு மணிநேரத்திற்கு மேலாக
அவன் உடலுக்கு அருகேவும்
அவன் வீட்டிற்க்கு அருகேவும்
நான் இல்லை...
நான் அங்கே இல்லையென்பதற்காக
அவன் என்னை
தவறாக நினைக்க முடியாது;
நாளை என்னிடம்
கோபமும் கொள்ள முடியாது...
ஏனெனில் அவன் இறந்துவிட்டான்;
இறந்தது அவன் மட்டுமல்ல
அவனுடனான ஒராண்டு நட்பும் தான்!

- இரா.ச.இமலாதித்தன்

குழப்பம்!


எதையோ இழந்ததை போல்
ஒரு மாயை;
பெரும்சுமையை சுமக்கிறது
சின்னஞ்சிறு மனது;
அழுததுபோல் சிவந்திருந்த
கண்களுக்குள் ஈரமேதுமில்லை;
உணரமுடியா கவலை
வியாபித்திருக்கும் வேளையில்
உடலெங்கும் பரவிக்கொண்டிருக்கிறது
ஏதோவொரு தீரா யோசனை;
இழப்பென்பது இயல்பென்றாலும்
இன்னமும்
குழப்பம் மட்டுமே
மிச்சமிருக்கிறது பதிலாக!

- இரா.ச.இமலாதித்தன்

கனவெல்லாம் நீ!



நீ கழுத்தை சாய்த்துதான்
நடப்பாய் என்பதை கூட
இன்னொருவன் சொல்லித்தான்
நினைவிலேற்றி கொள்ளமுடிந்தது;
உன் வளைந்த கூந்தலை கூட
யாரோ அடையாளம் சொல்லிய பின்பே
அடையாளப்படுத்தி கொள்ள முடிந்தது;.
இப்படியே இன்னும் என்னென்ன
தெரிந்து கொள்ளபோகிறேனென்று
சரியாக தெரியவில்லை;
ஆனால் எதையுமே
உன்னிடம் சொல்லமுடியவில்லை யென்ற
ஏமாற்றத்தோடே
ஒவ்வொரு இரவையும் கழிக்கிறேன்;
விடியல் தினமும் எனக்காகவே காத்திருக்கிறது
நான் தான் இன்னமும் விழிக்கவில்லை
கனவெல்லாம் நீ!

- இரா.ச.இமலாதித்தன்

துரோக கூட்டம்!


சூழ்ச்சியின் வலைகள்
பின்னப்பட்டு கொண்டிருக்கின்றன
சில சிலந்திகளின் முயற்சியால்...
சிங்கம் கால் இடறி விழுவதை 
ரசிக்க காத்திருக்கிறது
பூனைகள் கூட்டம்...
நரிகளை நம்பி ஏமாறுவதை விட
நான் நானாகவே இருந்து விடலாமென
நற்சிந்தனை தானாக எழுகிறது;
பதுங்கி கிடக்கும்  பன்றிகளெல்லாம்
ஒன்றாய் இணைகிறது;
அப்போதும்
சிங்கம் தனித்தே காத்திருக்கிறது
துரோகத்தை சின்னா பின்னமாக்கி
தன் சுயத்தை வெளிக்காட்ட!

- இரா.ச.இமலாதித்தன்

அவளுக்கான ஏமாளி!


இனி புத்தம்புதிதாய்
அவள் பிறக்க போவதில்லை
எங்கிருக்கிறாளோ?
என்ன செய்து கொண்டிருக்கிறாளோ?
தனிமையில் தவித்து கொண்டிருக்கிறாளோ?
படித்து கொண்டிருக்கிறோளோ?
பணி செய்து கொண்டிருக்கிறாளோ?
இல்லை வழமைபோல;
கணவனாக வரப்போகும் அவன்
இவளது கண்ணசைவுகளுக்கே
கட்டுப்பட வேண்டுமென்று
எந்த கோவில்களிலாவது
நெய்தீபம் ஏற்றி கொண்டிருக்கிறாளோ...
எது எப்படியோ
ஓர் ஏமாளி காத்து கொண்டிருக்கிறான்
முகநூலில் கிறுக்கிய படியே!

- இரா.ச.இமலாதித்தன்

யாரோ அவன்!

















நாகரிக உடையணிந்து   
கடைத்தெருவின் நெரிசல்களுக்கிடையே 
உரத்தக்குரலில் சத்தமிட்டுக் கொண்டிருந்தான்
பள்ளி செல்கின்ற பதின்ம வயதுதான் அவனுக்கு
ஆனாலும் படித்திருக்க வாய்ப்பில்லை
குடும்பத்தால் தனித்து விடபட்டவனாய் இருக்கலாம்
ஒருவேளை உணவுக்காகவோ 
இல்லை வேறு எதுக்காகவோ
வாழ்க்கையில் போராடிக்கொண்டு இருக்கிறான்; 
இவையெல்லாம் ஓர் அனுமானம்தான்
அவனது அவமானங்களை 
யாரும் அனுபவப்பூர்வமாய் 
உணர்ந்திருக்க வாய்ப்பில்லை நான் உள்பட;

மாணவன், தொழிலாளி, வியாபாரியென  
பன்முக அடையாளங்களில்  
கைகளில் கைக்குட்டைகளோடு 
முதலாளியாகத் தென்பட்டுக் கொண்டிருந்தான்;
நானுமொரு கைக்குட்டையை 
அவனிடம் வாங்கிக்கொண்டிருந்தேன்;
யாரோ என்னை ஏளனமாய்ப் பார்ப்பதுபோல் பிரம்மை
நான் மட்டும்தான் அவன் சொன்னவிலைக்கே
வாங்கி இருக்கிறேன் போல;
பேரம் பேசுவது சுலபமாகவும்
சிலசமயங்களில் சுகமாகவும் கூட இருக்கிறது;
குளிரூட்டப்பட்ட கடைகளில் 
வாயையே திறக்காமல் பர்சை திறக்கும் கூட்டம்  
இவனைப்போன்ற பாமரர்களிடம் மட்டும் 
பேரம் பேசிக்கொண்டுதான் இருக்கிறது;
உள்ளுக்குள் கோபத்தோடும் 
உதடுகளில் சிரிப்போடும் 
அவனிடமிருந்து வெளியேறிக் கொண்டிருந்தேன்
நாமும் பேரம் பேசி இருக்கலாமோ யென்ற
எண்ண வோட்டங்களோடு!

 - இரா.ச.இமலாதித்தன்

உளறிய வார்த்தைகள்!



பலரும் என்னருகில் இருக்கையில்
தனிமைப்படுத்த பட்டிருந்தேன்;
பெரும் சீற்றம் எனக்குள்
கோபத்தீயை கக்கிக்கொண்டிருக்கிறது;
பெரியதோர் பாரம்
தலையினுள் திணிக்கப்படுகிறது;
இது வெறும் மாயையல்ல
உண்மையாகத்தான் இருக்கவேண்டும்
சரியாக உணரமுடியவில்லை;
யாரோசிலர் உரையாட முற்படுகிறார்கள்
நான் கேட்டுக்கொண்டிருக்கிறேன்;
புரியாததை போலிருக்கிறது
புரிந்து கொள்ள முயலவில்லை;
பதில் சொல்லவும் எத்தனிக்கிறேன்
தோல்விதான் மீதாமாக இருக்கிறது;
பலமுறை தோல்வியடைந்து இருக்கிறேன்
ஆனாலும்
வெற்றியாளனாகக் காண்பிக்க
அதைவிட அதிகமாகவே சிரமப்படுகிறேன்;
ஒருவேளை
வெற்றியாளனாகிவிட்டாலும் சிரமப்படலாம்;
கொஞ்சம் குழப்பமாகவே இருக்கிறது
எதையும் எழுதும் மனநிலையில் நானில்லை;
உளறிய வார்த்தைகளை அலங்கரித்து
ஒருவேளை இவையெல்லாம்
கவிதையாக்கப் பட்டிருக்கலாம்
அதற்கு நான் பொறுப்பல்ல!

- இரா.ச.இமலாதித்தன்

வனத்தின் ரணம்!






கசக்கியெறியப்பட்ட காகிதமொன்று
என்னை சுற்றி வட்டமிட்டு கொண்டிருக்கிறது
தூதுசொல்ல வந்திருக்கலாம் என்றொரு யூகம்
உளவு பார்க்கிறதாக ஒரு மாயை
அப்படிருக்க வாய்ப்பில்லை;
இது கற்பனையாக இருக்கவும் வாய்ப்புண்டு
ஒருவேளை ஏதோவொன்றை
எனக்குள் சொல்ல வந்திருக்கலாம்;
அதனுள் பலகதைகள் புதைந்தும் கிடக்கலாம்
இப்படி ஏதேதோ என்னை சூழ
சரியான கோணத்தில் எதையுமே உணராமல்
இந்த நொடிக்கான பதிலை
கடந்தகாலங்களிலேயே தேடிக்கொண்டே
ஓர் அழிவின் அழுகுரலை கேட்க தயங்குகிற
மனதின் சூழ்ச்சியை அறியாமலேயே
ஆழமாய் ஓர் ஆய்வு செய்துகொண்டிருக்கிறேன்
மரங்களின் அழிவை தடுப்பது எப்படியென்று !


- இரா.ச.இமலாதித்தன்

நான் கேள்வியானால்!



எனக்குள்ளேயே கேள்வி அம்புகளால்
துளைத்துக் கொண்டிருந்தேன்
தொலைந்து போன உடலை
தெரிந்து கொள்வதற்காக;
அழியும் உடலையும்
முறியும் உறவையும்
உணர்வதால் என்ன பயனென்று
கேள்வியாகவே பதில் கிடைத்தது;
எனக்கான தேடலில்
கேள்வியும் பதிலும்
என்னுள்ளேயே எப்படியுள்ளதென்பதை
மீண்டுமொரு கேள்வியாக்கினேன்;
உள்ளத்தை கடந்து வா
உள்ளதை உணமையாய் அறிந்து
பெருவேளிச்சமே கடவுளென்பதை
காலம் கடந்தபின் உணர்வாயென
என்னிலிருந்தே ரகசியம் வெளிப்பட;
உள்ளுக்குள் ஆராய்ந்தேன்
பெருவெளிச்சத்தின் அணுவொன்று

அனலாக உறங்கி கொண்டிருக்கிறது
ஆன்மாயென்ற பொதுப்பெயரால்!

- இரா.ச.இமலாதித்தன்

சிலைகளில் இறைவன்!





மாயை சூழ்ந்திருக்கும்
சிலையை கவனித்துக் கொண்டிருந்தேன்
உடலை சிலிர்க்கும்
உருவமொன்று உருவாகிக்கொண்டிருந்தது;

மௌனித்துக் கொண்டிருந்த உதடுகளும்
மெல்லியதாய் முனுமுனுக்க தொடங்கின
செவிக்கொடுத்து கேட்க தொடங்கினேன்
மனம் மட்டுமே புரிந்து கொண்டது;
சட்டென்று கரங்கள் இரண்டும்
வணங்க ஆயத்தமாயின
உணர்ந்து கொண்டேன்
உருவம் கடந்த இறைவன்
சிலையில் மட்டும் இல்லையென்பதை!

- இரா.ச.இமலாதித்தன்

விழிகளின் பயணம்!



விழிகளை வானம் ஏமாற்றிக்கொண்டிருக்க
நீலத்தை நோக்கி பயணிக்க தொடங்கின பார்வைகள்;
வரையறுக்கப்படாத இலக்கின் தூரம்
மெல்லமெல்ல நீண்டுக்கொண்டே
வண்ணங்கள் ஏதுமில்லா காட்சிப்பிழையாய்
சிதறிக்கிடந்த நீலமெல்லாம் நீர்த்துக் கொண்டிருந்தன;
பார்வைகள் விசாலமாய் பரந்து விரிய
பழைய படிப்பினைகளெல்லாம் படிக்கட்டுகளாய்
புதிய பரிமாணத்தோடு வெளியெங்கும் பரிணமித்திருந்தன;
கனவுகளை காட்சிகளாய் வடிகட்டி
கணக்கிட தெரிந்த விழிகளும்
வெகுநேரமாய் இலக்கை துலாவிக் கொண்டிருந்தன;
தேடலே வாழ்வியல் ரகசியமென்பதை 

இன்னமும் அது புரிந்து கொள்ளவில்லை!

- இரா.ச.இமலாதித்தன்

என்னைத்தேடிய நான்!



நொடிகளை கொன்ற நிமிடங்களெல்லாம்
சட்டென்று கடந்து போகும் நாழிகைக்குள்
தொலைத்த வருடங்களை தேடிக்கொண்டிருந்தது;
நாட்களோடு மாதமாய் உருமாறிப்போன
வருடங்களும் இலக்கேதுமில்லாமல்
எங்கயோ விரைந்து கொண்டிருந்தது;
நீண்ட உறக்கத்திற்கு நடுவே கனவுகளாக
உயிர் ரகசியமும் தோன்றி மறைகிறது;
பிறப்புக்கும் இறப்புக்கும் இடையிலிந்த
சின்னஞ்சிறு பயணத்தின் சுவடுகள் யாவும்
ஏதோவொரு வரலாறாக்கப்படுவதற்காகவே
உறக்கத்திலேயே கருவாக உட்புகுந்து
உடலாக உயிரோடும் உறவாடிக்கொண்டிருந்தது;
விழிப்புகளுக்கு அப்பால் நேர்ந்ததையுணர
விழிகளுக்குள்ளே காத்திருந்த ஏக்கத்தோடு
அழியும் உடலை அறிவு ஆயத்தபடுத்தியது;
முடிவிலியாய் நீண்டுக்கொண்டிருக்கும்
அழிவில்லா ஒன்றை எதுவென யூகிக்க முடியாமல்
பயணமும் தொடர்ந்துகொண்டேயிருக்கிறது
இந்த உடலுக்குள் நான் யாரென்ற தேடல்களோடு!

- இரா.ச.இமலாதித்தன்


இந்த கிறுக்கல்கள் வல்லமை மின்னிதழிலும் பிரசுரமாகியுள்ளது.

மரணங்கள் முடிவதில்லை!


 

உன்னைவிட்டு பிரியப்போவதாய்
உரையாடிக்கொண்டிருக்கும் வேளையில்
சட்டென்று சிலிர்த்துக்கொண்டு
மறுமொழி ஏதும் சொல்லாமல்
மௌனத்தை மட்டுமே
முழுவதுமாய் பரவச்செய்து
புன்னகையை தவழ விட்டதும்
குழம்பி நிற்கிறது உடல்;
பிரிதலை ஏன் சொன்னோமென்று
உடனடியாய் தன்னிலை மாறுதலாக்கி
மௌனத்திலேயே லயித்திருக்க முடிவுசெய்து
தன்னைத்தானே ஆசுவாசப்படுத்தி
சூழ்ந்த அமைதியை கலைக்காமல்
ஆழ்ந்து நீடித்திருந்தது உயிர்;

கடைசிநேர பரிவர்த்தனையாய்
ஏதேதோ செய்யலாமென முயன்றும்
தோல்வியடையப்போவதை
உணர்ந்திருந்த உடலும்
இத்தனை நாட்களாய்
உடன்பிறப்பாய் உள்ளிருந்த
உறவின் தவக்காலம் முடிந்து
பயணப்பட ஆயத்தாமாயிருந்த
அழிவில்லா ஆன்மாவை 

வழியனுப்பி வைத்தது
முடிவில்லா மரணத்தால்!


- இரா.ச.இமலாதித்தன்

யார் கடவுள்?


நானும் நீயும் யாரென கேட்டேன்
மனிதன் என்றாய்...
அதுவும் அவையும் ஏதேன கேட்டேன்
மிருகம் என்றாய்...
எதுதான் உனக்கான வரையறையில்
இறைவன் என்றேன்...
உனக்கு தெரியாதாவென்று
எனக்கான பதிலை
என்னிடமே சொல்லேனென்றாய்;

மனதை அறிவால் குவித்து
மனித மிருக பாகுபாடற்ற
இயல்பே இறைவனென்றேன்;.
இங்கே இயல்பென்பதே
எதுவென்று தெரியாத போது
இறைவனை எங்கே தேடுவதென்றாய்?

அந்த தேடலே மார்க்கம் என்றேன்;
மதத்தை பிடித்தவருக்கு
தன்மனதை அடக்கத் தெரியாதபோது
மார்க்கத்திலும் மாற்றம் வருமென்றாய்;
மதம் மார்க்கம் என்பதெல்லாம்
மனம் மாற்றத்தில்தான் உள்ளதென்றேன்;
தடுமாறும் உள்ளங்களனைத்தும்
நிலைமாறும் ஒருநாள்
இறைகூட மாறுமோ யென்று
கேள்விகளுக்குள்ளேயே பதிலை தேடினேன்

இறைவனோ
மெளனமாய் என்னுள்
சிரித்துக்கொண்டிருக்கின்றான்!

- இரா.ச.இமலாதித்தன்

தன்னந்தனியாய்!



தனிமைகள் அனைத்தும்
ஒருமித்து நிரம்பிவழியும்
எண்ணிக்கையற்ற நொடிகளுக்குள்...
சின்னஞ்சிறு அறையினுள்ளே
புதைக்கப்பட்டும்,
புதியதாய் உருவெடுக்கும்
ஒவ்வொரு எண்ணங்களுக்குள்ளும்
வட்டமிடுகிறது கோரமுகம்!

- இரா.ச.இமலாதித்தன்

சுவடுகள்!















பள்ளியில் படிக்கும்போதே
பட்டதாரி ஆகியிருந்ததாய்
காலங்களின் தழும்புகளாக
நான் காயப்படுத்திய சுவடுகள்
தென்பட்டு கொண்டிருக்கிறது
ஊரோர ஆலமரத்தில்! 

 - இரா.ச.இமலாதித்தன்

ஏமாற்றம்!



சூட்சமத்தால் சூழப்பட்ட
ஆழ்மனத்தின் வேர்களுக்குள்
முன்பைவிட முழுவீச்சோடு
ஊடுருவிக் கொண்டிருக்கிறது
குழப்பத்தினால் பின்னிப் பிணைந்த
நினைவுகளின் சுவடுகள்!

சிதைக்க முடியாதென
நெஞ்சுக்குள் கட்டியெழுப்பிய
அசைக்கமுடியா நம்பிக்கையும்
தூள்தூளாய் நசுக்கப்பட்டு
துயரத்திற்குள் தூக்கி எறியப்படுகின்ற
அந்தவொருசில நாழிகைக்குள்...
கணப்பொழுதில் வெடித்து சிதறி
காணாமல்போகும் நீர்க்குமிழிபோல.
நிர்கதியான மனதைவிடுத்து
நினைவுகளும் நிர்மூலமாய்
சிதற தொடங்குகிறது!

சற்றே சுயமாய்
சுதாரித்துக்கொண்டு
தன்னை சூழ்ந்துகிடக்கும்
சுகவீனமற்ற நிலையை
துடைத்தழிக்க முற்படும்
அந்தவொரு நொடிப்பொழுதில்
ஏமாற்றத்தின் விளிம்பில் அகப்பட்டு
மரண ஒத்திகைக்கு
ஆயத்தமானது மனது!

- இரா.ச.இமலாதித்தன்