நினைவுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நினைவுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சுவடுகள்!















பள்ளியில் படிக்கும்போதே
பட்டதாரி ஆகியிருந்ததாய்
காலங்களின் தழும்புகளாக
நான் காயப்படுத்திய சுவடுகள்
தென்பட்டு கொண்டிருக்கிறது
ஊரோர ஆலமரத்தில்! 

 - இரா.ச.இமலாதித்தன்

இனிய இரவு!




திறந்த வானமாய்
மூடிய போர்வைக்குள்ளே
பொத்தல் விழுந்த
சின்னஞ்சிறு ஒளிகீற்றுகளாய்
நட்சத்திர கூட்டங்களும்...
பெரு வட்டமிட்ட ஒளிப்பந்தாய்
நான் போகிற போக்கெல்லாம்
என் பின்னாலே சுற்றி திரிந்த
ஒற்றை நிலவையும்...
ஓரிரு நட்சத்திரங்கள் நகர்வது
ஏனென்று புரியாமல்
அசைவுகளால் ஆராய்ச்சி செய்து
விமானமென்று கண்டறிந்ததையும்...
மல்லார்ந்து படுத்துறங்க
கண்ணசரும் நேரம்வரை
மின்மினி பூச்சிகளையும்
ரசித்து கிடந்த
முன்னிரவு நேரங்களையும்...

இன்று
குளிரூட்டப்பட்ட அறையின்
மெத்தைமடியில் படுத்திருந்தும்
உறக்கம் கெட்டுக் கிடக்கின்ற
நடுநிசி இரவுக்குள்ளே
பின்னோக்கி மீண்டெழ செய்கிறது
கட்டாந்தரையில் பாய்விரித்து
வெட்டவெளியில் படுத்துறங்கிய
இனிய இரவுகளை!

- இரா.ச.இமலாதித்தன்

இனிய பொழுதுகள்!



காலைபொழுதில் தோளில் துண்டோடு
வாயில் வேப்பங்குச்சியுமாய்
கொல்லைபுற வாசல்வழி
வயல்வெளி ஒத்தையடி பாதையில்
எட்டி நிற்கும் குட்டி முட்களை மிதித்துகொண்டே
ஆற்றங்கரை பாதையோர
கருவைமர கிளைகளின் கீரல்களோடு
குறுக்கே வந்தவரையும்
சிலநேரம் குப்புற தள்ளிவிட்டு குளிக்க ஓடிய  

மின்னல்நேர தருணங்களும்...

சீரும் ஆற்றின் படித்துறை ஓரமாய் 

பாய்ந்து குதித்து கீறும் மணலிடையே
பாதங்கள் படிய நின்று மூச்சை இடைநிறுத்தி
பலமணிநேரம் மூழ்கி கிடந்து 
நெஞ்சளவு நீரினுள் நீச்சலோடு நிலைத்து
லயித்து கிடந்ததும்...
வற்றிய ஆற்றில் இடுப்பளவு நீரினுள்ளே
கருத்த கிடந்த பல ஒருரூபாய் நாணயங்களை 
கண்டெடுத்து களிப்புற்றதும்...
பாசி படிந்த படிகளை எண்ணி
என் பெயரையும் எழுதி பார்த்து மகிழ்ந்ததும்...
கிளிஞ்சல் எடுத்து நீரை கீறி தட்டுக்கல் விட்டு 

தம்பட்டம்  அடித்து சிரித்ததும்...
துண்டினாலே வலைவீசி  துள்ளிக்குதித்த 

சின்னஞ்சிறு மீன்களையெல்லாம் 
அள்ளியெடுத்த அந்த காலை பொழுதுகளும்...

ஒய்யாரமாய் ஊர்சுற்றி
பனை இலந்தை  ஈச்ச மரம் தேடியலைந்த
அந்த மதியநேர பொழுதுகளும்... 


ஆத்தங்கரையோர ஆலமர நிழலில்
பாலத்து மதில்மேல பலமணிநேரம் அமர்ந்து
ஊர்கதை பேசி திரிந்த அந்த மாலை பொழுதுகளும்...
இதுபோல் இன்னும்பல இனியபொழுதுகள்
இனிவொரு நாளும் திரும்பவும் வந்துவிடுமா? 



 - இரா.ச.இமலாதித்தன்