தனிமை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தனிமை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தணியாத நிகழ்வுகள்!

தாழிடப்பட்ட அறையின்
தனிமையில் அமர்ந்திருக்கும்
முன்னிரவு பொழுதுகளில்
ஏதோ ஒரு உள்ளுணர்வு
என்னுள் படர்ந்து சென்று
பரிணமித்து கொள்கிறது;
சுமந்துவரும் நினைவை
சிதைவுற செய்யும் முயற்சியில்
தீவிரமாய் இறங்கியும்
தோற்றுப்போகிறது மனது;
இழப்புகள் ஏதுமின்றி
குழப்பமாய் குறுகி கிடந்தும்
பிரிவுகளால் மட்டுமே
கண்ணீர் துளிகள் சிந்தாமல்
கலங்கி நிற்கிறது கண்கள்;
பணம் தேடிய பயணத்தின்
நெடுந்தொலைவிலான பாதையில்
உறவு தொலைத்த வாழ்க்கையை
உணர்ந்து திரும்பும் இவ்வேளையில்
ஆதரவற்று தனித்து நிற்கிறது
தணியாத நிகழ்வுகள்!
- இரா.ச.இமலாதித்தன்
_
ஏமாற்றம்!

சூட்சமத்தால் சூழப்பட்ட
ஆழ்மனத்தின் வேர்களுக்குள்
முன்பைவிட முழுவீச்சோடு
ஊடுருவிக் கொண்டிருக்கிறது
குழப்பத்தினால் பின்னிப் பிணைந்த
நினைவுகளின் சுவடுகள்!
சிதைக்க முடியாதென
நெஞ்சுக்குள் கட்டியெழுப்பிய
அசைக்கமுடியா நம்பிக்கையும்
தூள்தூளாய் நசுக்கப்பட்டு
துயரத்திற்குள் தூக்கி எறியப்படுகின்ற
அந்தவொருசில நாழிகைக்குள்...
கணப்பொழுதில் வெடித்து சிதறி
காணாமல்போகும் நீர்க்குமிழிபோல.
நிர்கதியான மனதைவிடுத்து
நினைவுகளும் நிர்மூலமாய்
சிதற தொடங்குகிறது!
சற்றே சுயமாய்
சுதாரித்துக்கொண்டு
தன்னை சூழ்ந்துகிடக்கும்
சுகவீனமற்ற நிலையை
துடைத்தழிக்க முற்படும்
அந்தவொரு நொடிப்பொழுதில்
ஏமாற்றத்தின் விளிம்பில் அகப்பட்டு
மரண ஒத்திகைக்கு
ஆயத்தமானது மனது!
- இரா.ச.இமலாதித்தன்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
