
தாழிடப்பட்ட அறையின்
தனிமையில் அமர்ந்திருக்கும்
முன்னிரவு பொழுதுகளில்
ஏதோ ஒரு உள்ளுணர்வு
என்னுள் படர்ந்து சென்று
பரிணமித்து கொள்கிறது;
சுமந்துவரும் நினைவை
சிதைவுற செய்யும் முயற்சியில்
தீவிரமாய் இறங்கியும்
தோற்றுப்போகிறது மனது;
இழப்புகள் ஏதுமின்றி
குழப்பமாய் குறுகி கிடந்தும்
பிரிவுகளால் மட்டுமே
கண்ணீர் துளிகள் சிந்தாமல்
கலங்கி நிற்கிறது கண்கள்;
பணம் தேடிய பயணத்தின்
நெடுந்தொலைவிலான பாதையில்
உறவு தொலைத்த வாழ்க்கையை
உணர்ந்து திரும்பும் இவ்வேளையில்
ஆதரவற்று தனித்து நிற்கிறது
தணியாத நிகழ்வுகள்!
- இரா.ச.இமலாதித்தன்
_