சமூகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சமூகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சுவரொட்டி!





அரசாங்க மதுக்கடையோரம்
நிறுத்தப்பட்டிருந்த ஸ்ப்ளண்டர் பைக்கில்
’ஏ1பி பாசிடிவ் இரத்தம்
தேவையெனில் தொடர்பு கொள்க’ யென்ற
வாசகத்தின் கீழே கொடுப்பட்ட
பத்தெண்களில் ஏழெண்களில்லை,
கடைசியாக நூற்றி அறுபத்திரெண்டு மட்டும்
அழைக்க மீதமிருந்தது;

அதே பைக்கில் மாட்டிருந்த
வழிந்து நிரம்பிய மைதா வாளியை
கையிலெடுத்த கையோடு
சரட்டென வீறிட்டு சென்றவர்கள்
’தேவி திரையரங்கம்’ அருகிலிருந்த
திருமண மண்டப சுவர்களிலெல்லாம்
‘வாழ்த்தலாம் வாங்க;
அடுத்த மாப்பிள்ளை நாங்க’யென்ற
வாழ்த்து சுவரொட்டிகளை
’மெர்சல்’ நூறாவது நாளில்
ஒட்டிக்கொண்டிருந்தனர்;

நண்பகலில் நடைபெறும் திருமணத்தில்
ஒரே மாதிரியான வேட்டிச்சட்டைகளோடு
ஆண்ட்ராய்டு போன்களில் செல்ஃபி எடுத்து
அட்சதை போடும் நேரத்திலேயும்
‘ஃபேஸ்புக் லைவ்’வில் பரபரப்பாயிருந்தும்
இரவில் தீர்ந்தவற்றை வாங்கிவர
மதுக்கடைக்கு பறந்தனர்
மாப்பிள்ளை தோழர்கள்;

இரவில் ஒட்டியிருந்த
சுவரொட்டிகளையெல்லாம்
பசும்புல் போல பசுக்களனைத்தும்
சுவைத்துண்பதை பார்த்து
அகண்ட காவிரியை வறண்ட காவிரியாக்கிய
அண்டை திராவிட மாநிலமும்,
பசுமை நிலங்களை மீத்தேனால் பாழாக்கிய
பசுக்காவலர்களின் அகண்ட தேசமும்,
நம்மை மட்டுமல்ல,
இம்மண்ணையும் உயிர்களையும்
அடிமைகளாக பழக வைத்திருக்கும்
அரசக் கதைகளையெல்லாம்
தெளிவில்லாத நிலையிலும்
ஓரளவுக்கு புரிந்து கொண்டார்கள்;

கிழித்தெறியப்பட்ட சுவரொட்டியின்
கழுத்தில் மாலையோடு ஜோடியாக இருந்த
தன் நண்பனின் படமிருந்த இடத்தில்
பின்னாலிருந்த யாரோ ஒருவனின்
‘கண்ணீர் அஞ்சலி’ சுவரொட்டியின்
படமும் பெயரும் அமைந்திருந்ததை
கவனிக்க தொடங்கும் வேளையில்
’சீக்கிரம் வாங்கடா,
கடிநெல்வயல் வேம்புடையார் கோவிலுக்கு
போகணுமாம்’ என்ற
மணவறையிலிருந்து வந்த
அலைபேசி அழைப்பால்
அவசர அவசரமாய் பறந்து போனார்கள்;

இதற்கிடையே
பாசக்கார பங்காளிகளின் குரலொலியில்
’கூலிங்கே இல்லையாம் பங்கு?!’
’இருக்கிற டென்சனுக்கு,
ஏதோ ஒன்னு வாங்குங்க பங்கு’
என்ற சோகத்தோடு
முப்பதாம் நாள் காரியத்திற்கு வந்திருந்த
சிவக்குமாரும் எழிலரசும்
அதே சுவரொட்டியை பார்த்து
’அவ இன்னொருத்தனுக்கு
பொண்டாட்டியாவே ஆய்ட்டா;
நம்ம பங்காளியை ஏமாத்துனவ
நல்லாவா இருக்க போறா?’வென
மனம் நிறைய சுமையோடு
மயானக் கரைக்கு செல்லும் நேரத்தில்,

அடுத்த சுவரொட்டியை
அதன்மேல் வேறாரும் ஒட்டும்வரை
இந்த சுவர்களிலாவது
இணைந்திருக்கட்டுமென
பசுக்கள் கூட பசியாறாமல்
காத்திருக்கும் இடைவெளியில்
’பாரத் மாதாகி ஜெ!’ என்ற சுவரொட்டிகள்
அவர்கள் இருவரையும் பிரித்த நொடியில்
அந்த சுவரொட்டியை மட்டும்
ஈரம் காய்வதற்குள் லாவகமாய்
வெடுக்கென கிழித்து திண்றது
கொம்புடைந்த பசுவொன்று!

- இரா.ச. இமலாதித்தன்

ஆளப்பிறந்தோம்!




கண்டவனெல்லாம் 
ஆண்டுவிட்டு போக
இம்மண் என்ன 
பொதுக்கழிப்பறையா?
ஆண்டாண்டு காலமாய்
ஆண்டபரம்பரை போதையேற்றி
எங்களுக்குள் பகையை மூட்டி
குருதிக்காட்டில் சதைகள் தின்று
ஏப்பம் விட்டது போதும்;
விபச்சாரக்கூடம் போல
நீயும் எத்தனை காலம் தான்
எங்கள் மீதேறி அனுபவிப்பாய்?
எம் மொழி தெரியாத ஆண்டவன் 
இனி இங்கே தேவையேயில்லை;
கூத்தாடிகளின் கூடாரமென
மாறிப்போன அரசை அகற்றி
நாங்களே ஆண்டு கொள்கிறோம்;
தமிழ்க்கடலோரம் 
நாள்தோறும் அரங்கேறும் 
மரண ஓலங்களின் அலறலை மறந்து
காலம் பார்த்து காய் நகர்த்தும்
காலாவதியான காளான்களெல்லாம் 
மிதிபடாமல் ஒதுங்கியே இருங்கள்;
நாகம் கொல்லும் கருடன் போல
நாங்களிலிருக்கிறோம்;
ஆம், இது செந்தமிழர் மண்
ஆள நாங்களிலிருக்கிறோம்!

- இரா.ச. இமலாதித்தன்

சினம் கொள்!



கோமாளிகளால் ஆளப்படும்
பயங்கரவாத அரசுகளால்
கொல்லப்பட்ட அனிதா
யாரோ ஒருத்தியல்ல;
நாளை உங்கள் வீட்டிலும்
யாரோ ஒருத்தி
அனிதாவாக மாறக்கூடும்;
ப்ளூவேல் மட்டுமல்ல,
நீட்டும் கூட
தற்கொலை செய்ய வைக்கும்
வெறியர்களின் விளையாட்டு தான்;
இனியும் தாமதம் ஏன்?
தமிழா,
அறம் காக்க சினம் கொள்!

- இரா.ச.இமலாதித்தன்

கல்வி!




வறட்டு கெளரவத்திற்காகவும்,
ஊர் பெருமைக்காவும்,
சுய தம்பட்டத்திற்காகவும்,
எத்தனையோ ஆயிரங்களை செலவழித்து
மெட்ரிக்குலேசன் கான்வென்ட் பள்ளிகளில்
எல்.கே.ஜி. என்ற மூன்றெழுத்தை படிக்க வைக்க
முண்டியடித்து சேர்க்க துடிக்கும்
முட்டாள்களின் பிள்ளைகளை மட்டும்
அறிவாளியாக்கி விடுவார்களா,
பொழுதுபோக்குக்காக
வெறும் சில ஆயிரம்ரூபாய் சம்பளம் வாங்கும்
அரைகுறையாக டிகிரி முடித்த மிஸ்கள்?
பாவம் அந்த பிஞ்சுகள்
காலம் முழுக்க நம்மை போல
குடும்ப பாரம் சுமக்க கூடும்;
இந்த மூன்று வருட பால்யத்தையாவது
அவர்களுக்காக அனுபவிக்க விடுங்கள்
சுமைகள் மறந்து சுகமாய் கொஞ்சம்
வாழ்ந்து பார்க்கட்டும்!

- இரா.ச.இமலாதித்தன்

விதைகளெல்லாம் விருட்சமாகும்!



முப்படைகளோடு களமாடியும்
முதுகோரம் துரோகத்தின் உச்சம்;
எதிரேழு நாடுகளின் சூழ்ச்சியால்
முடக்கப்பட்ட முள்ளிவாய்க்கால்;
இனவழிப்பின் அடையாளமாய்
இங்கே நினைவு முற்றம்;
மெளனித்திருக்கும் ஆயுதங்களால்
உளவியல் தாக்குதலில்
வற்றி போனது நந்திக்கடல்;
காரிருளில் நட்சத்திரங்களாக
கரும்புலிகளின் காட்சிகளுக்கிடையே
நிச்சயமொரு நாள்
விதைகளெல்லாம் விழித்தெழுந்து
திரிகோணமலையெங்கும்
விருட்சங்களாக வளர்ந்து நிற்கும்!

- இரா.ச. இமலாதித்தன்


(எங்கள் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்கிய ஐரோப்பிய ஒன்றியத்திற்கு நன்றி!)

புறக்கணிக்கப்பட்டவனோடு கடவுள்!




தாய் தகப்பனை பற்றியெல்லாம்
கவலையில்லை
இனிசியல் இல்லாதவனுக்கு...
எல்லாமும் இழந்த பிறகு
விதியை பற்றியெல்லாம்
பெரியதொரு அக்கறையுமில்லை...
அவன் மீதான சமூகத்தின் புறக்கணிப்பு
கனவின் குரல்வளையை நெரிக்கலாம்...
வீதியெங்கும் குப்பைகளுக்குள் கிடக்கும்
பாட்டில்களை பொறுக்கி கொண்டு
மிச்சமிருக்கும் தண்ணீரை
யாரோ பெருமைக்கு நட்டுவிட்டு போன
சாலையோர புறக்கணிக்கப்பட்ட
மரக்கன்றுக்கு இளைப்பாற்றுகிறான்...
அந்தி சாயும் வேளையில்
முனியாண்டி விலாஸ் புரோட்டாகளில்
ஒருவேளை மட்டும்
வயிறாற பசி போக்கி கொள்கிறான்
கூடவே மஞ்சள்நிற நாயுக்கும்
ஜீவகாருண்யம் செய்துவிட்டு
வெகுநாட்களாக தாழிடப்பட்ட கடையின் வாசலில்
கொசுக்களோடு இரவை கழிக்கிறான்...
ஒவ்வொரு நாளும்
இயற்கையை காதலிக்கிறான்...
அவனை யாரும் பொருட்படுத்தவில்லை
அவனும் யாரையும் அலட்சியபடுத்தவில்லை
இது அவனுக்கான மண்
அவனாகவே வாழ்ந்துவிட்டு போகட்டுமேயென
மெளனமாய் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறார்
உலகை படைத்த கடவுள்...
அவன் இயற்கையை இன்னும் காதலிக்கிறான்!


- இரா.ச.இமலாதித்தன்

பராபரனே!



கண்ணீர்த்துளி போன்ற
இராவண தீவுக்குள்
ஓயாத அலைகளாய்
உயிராயுதம் ஏந்தும்
மாவீரர்களை உருவாக்கி
கரும்புலி துணையால்
வரும்பகை அழித்த
பரம்பொருளான பராபரனே;
ஆறுமுகன் போல
ஆறெழுத்தில் வீறுகொண்டு
தமிழினத்தின்
தலையெழுத்தை மாற்றிய
தலைவனவன் பிரபாகரனே!

- இரா.ச.இமலாதித்தன்

தமிழ் தேசிய தலைவா, 60ம் அகவை வாழ்த்துகள்!

‎தமிழ் தேசிய தலைவன்‬!



"பி"ழையில்லா
"ர"ம்பொருள் போல
கோட்"பா"டு கொண்ட
போர்க்"க"ளங்களால்
சுதந்தி"ர" தமிழ்நாட்டிற்கான
முருகனானா"ன்"
என் பிரபாகரன்!

- இரா.ச.இமலாதித்தன்

பார்ப்பான்!

























அவன் தோற்றம் இராணுவம்
அதில் மீசைதான் அடையாளம்!
அவனுள் குடிபுகுந்தது வறுமை
அவனது எழுத்துக்குள்
ஆடம்பரமாய் பிறப்பெடுத்தது வீரம்!
ஆனந்த சுதந்திரம் அடையுமுன்பே
அதை அனுபவிக்க வைத்த தீர்க்கதர்சி!
அவன் பெயருக்குள்
எம்பெருமான் முருகன் இருப்பான்!
அவன் எழுத்துக்களால்
பாரெங்கும் தீப்பிழம்பாய்
என்றைக்கும் எம்மோடு இருப்பான்!
அவன் பார்ப்பான் தான்
எதையுமே அகண்டு விரிந்து
தொலைநோக்கோடு பார்ப்பான் தான்!
அவனது இறப்பு முப்பத்தெட்டு
அவன் எழுத்துக்கிங்கே மூப்பேது?


- இரா.ச.இமலாதித்தன்
செப்டம்பர் 11 - மறக்க முடியுமா? ’தேசிய மகாகவி’ சி.சுப்ரமணிய பாரதியின் 93ம் வருட வீர வணக்க நினைவேந்தல் நாள் இன்று. வீரவணக்கம்!

ஏனென்றால் நாங்கள் தமிழர்கள்!


சுழியம் ஒன்றென்ற பைனரிக்களால்

கணினி மொழி படித்த பின்னும்
எமக்கான களங்கலெல்லாம்
என்திசையும் முற்றுகையிட 
வெறிச்சோடிய எதிர்கால சுவர்களில்
சித்திரங்கள் தீட்டிக் கொண்டோம்
தூரிகைகள் ஏதுமின்றி!

இருநூறு வருடங்கள் அடிமைப்படுத்திய
இருபத்தாறு எழுத்தே கொண்ட
அந்நிய ஆங்கிலம்
இன்றெங்கள் தகப்பன்மொழியாய் உருவெடுக்க;
இருநூறு சொச்சம் எழுத்துகள் கொண்ட
பல்லாயிர ஆண்டுகள் பழமைமிக்க
எமது தாய்மொழியின் கருகலைத்தோம்!

ஆங்கிலம் என்பது அறிவல்ல
அது வெறும் மொழி என்பதை மறந்தே
தமிழனென்ற அடையாளத்தை
எம் சுயத்தோடு இழந்து 
சூழ்நிலை கைதியானோம்!

அழகியல் மொழியான
அம்மாவென்ற வார்த்தை கூட
வழக்கொழிந்து போக 
பிரமிடுகளுக்குள் உயிரற்று கிடக்கும்
வெற்றுடலாகி போன
மம்மியென மொழிச்சிதைவோடு  
உச்சரிக்க வைத்தோம்
நிகழ்கால தலைமுறையை!

உலக மொழிகளின் ஆணிவேர்
செந்தமிழை தொலைத்தது போலவே  
எமக்கான பூர்வீக அடையாளங்களையும்
ஒவ்வொன்றாய் இழந்த பின்னே
அமீபாவாய் அடையாளங்கள் ஏதுமின்றி
யாராகவோ வாழ்ந்திருப்போம்
ஏனென்றால் நாங்கள் தமிழர்கள்!

 - இரா.ச.இமலாதித்தன்

யாரோ அவன்!

















நாகரிக உடையணிந்து   
கடைத்தெருவின் நெரிசல்களுக்கிடையே 
உரத்தக்குரலில் சத்தமிட்டுக் கொண்டிருந்தான்
பள்ளி செல்கின்ற பதின்ம வயதுதான் அவனுக்கு
ஆனாலும் படித்திருக்க வாய்ப்பில்லை
குடும்பத்தால் தனித்து விடபட்டவனாய் இருக்கலாம்
ஒருவேளை உணவுக்காகவோ 
இல்லை வேறு எதுக்காகவோ
வாழ்க்கையில் போராடிக்கொண்டு இருக்கிறான்; 
இவையெல்லாம் ஓர் அனுமானம்தான்
அவனது அவமானங்களை 
யாரும் அனுபவப்பூர்வமாய் 
உணர்ந்திருக்க வாய்ப்பில்லை நான் உள்பட;

மாணவன், தொழிலாளி, வியாபாரியென  
பன்முக அடையாளங்களில்  
கைகளில் கைக்குட்டைகளோடு 
முதலாளியாகத் தென்பட்டுக் கொண்டிருந்தான்;
நானுமொரு கைக்குட்டையை 
அவனிடம் வாங்கிக்கொண்டிருந்தேன்;
யாரோ என்னை ஏளனமாய்ப் பார்ப்பதுபோல் பிரம்மை
நான் மட்டும்தான் அவன் சொன்னவிலைக்கே
வாங்கி இருக்கிறேன் போல;
பேரம் பேசுவது சுலபமாகவும்
சிலசமயங்களில் சுகமாகவும் கூட இருக்கிறது;
குளிரூட்டப்பட்ட கடைகளில் 
வாயையே திறக்காமல் பர்சை திறக்கும் கூட்டம்  
இவனைப்போன்ற பாமரர்களிடம் மட்டும் 
பேரம் பேசிக்கொண்டுதான் இருக்கிறது;
உள்ளுக்குள் கோபத்தோடும் 
உதடுகளில் சிரிப்போடும் 
அவனிடமிருந்து வெளியேறிக் கொண்டிருந்தேன்
நாமும் பேரம் பேசி இருக்கலாமோ யென்ற
எண்ண வோட்டங்களோடு!

 - இரா.ச.இமலாதித்தன்

வனத்தின் ரணம்!






கசக்கியெறியப்பட்ட காகிதமொன்று
என்னை சுற்றி வட்டமிட்டு கொண்டிருக்கிறது
தூதுசொல்ல வந்திருக்கலாம் என்றொரு யூகம்
உளவு பார்க்கிறதாக ஒரு மாயை
அப்படிருக்க வாய்ப்பில்லை;
இது கற்பனையாக இருக்கவும் வாய்ப்புண்டு
ஒருவேளை ஏதோவொன்றை
எனக்குள் சொல்ல வந்திருக்கலாம்;
அதனுள் பலகதைகள் புதைந்தும் கிடக்கலாம்
இப்படி ஏதேதோ என்னை சூழ
சரியான கோணத்தில் எதையுமே உணராமல்
இந்த நொடிக்கான பதிலை
கடந்தகாலங்களிலேயே தேடிக்கொண்டே
ஓர் அழிவின் அழுகுரலை கேட்க தயங்குகிற
மனதின் சூழ்ச்சியை அறியாமலேயே
ஆழமாய் ஓர் ஆய்வு செய்துகொண்டிருக்கிறேன்
மரங்களின் அழிவை தடுப்பது எப்படியென்று !


- இரா.ச.இமலாதித்தன்

இப்படியுமொரு தேடல்!



நேற்றை தொலைத்து
இன்றைக்குள் நாளையினை தேடும்
நவீன மனிதனின் நாகரீகமென்பது
ஆடை குறைப்பு
தாய்மொழி மறந்து பிறமொழி கலப்பு
பணமென்ற இலக்கு
இப்படி கணக்கீடோடு மட்டுமே
நகர தொடங்கி விட்டன;
மனதை உள்ளடக்கிய மனிதனை
இறைவன் தேடிக்கொண்டிருக்க;
இவனோ
பணத்தில், பணத்தால்
இறைவனை தேடிக்கொண்டிருக்கிறான்;.
இவனது தேடல் 

தினம் தினம்
நடந்து கொண்டேதான் இருக்கிறது
தொலைத்த ஒன்றை
தனக்குள் இருப்பதை தெரியாமலே!

- இரா.ச.இமலாதித்தன்

தேர்தல் தீபாவளி!



இரு மாதங்களாகவே களைக்கட்டிய
திருவிழாக்கோலமெல்லாம்
இன்றோ வெறுமையாக கிடக்கின்றது;
நெரிசல் நிரம்பிய இரைச்சலின்றி
யாருமற்ற வீதியெங்கும்
தனிமையின் ஓலங்கள் வியாபித்திருந்தது;
சம்பளத்தேதிக்கு முன் வந்துபோகும்
எந்தவொரு சுபவிழாக்களும்
இப்போதெல்லாம் சுணக்கமாகவே கடந்துபோகின்றது;
மூன்று ரூபாய் தினசரி நாளிதழை கூட
வாங்கமுடியாததை உணராமலேயே
தேநீரகத்திலும் முடிதிருத்தகத்திலும்
உலக பொருளாதரத்தை விமர்சிப்பது போல
சுயத்தின் வலியை அறிந்துகொள்ளமலேயே
வேறெங்கேயோயுள்ள அற்ப சுகத்தை
எல்லோரது மனதும் தேடிக்கொண்டிருக்கிறது;
இலவசத்துக்கும் பணத்துக்கும் கையேந்தும்
வாக்காளனாய் தமிழன் வக்கற்று போனதால்
இந்த வருட திருவிழா காலமும்
சென்ற சில வருடங்களை போலவே
இருளிலேயே தனித்து கிடக்கிறது
வெறுமையோடு இருமாதங்களாக!

- இரா.ச.இமலாதித்தன்


இந்த கிறுக்கல் வல்லமை இணைய மின்னிதழிலும் வெளிவந்துள்ளது.

சாதிப்பிழை!



சாதிகள் இல்லையென்று
எழுத்துகளால் உரைத்தவனை
கவிஞன் என்றான்;
சாதிமத பேதம் இல்லையென்று
மேடையில் முழங்கியவனை
தலைவன் என்றான்;
சாதீய மாயையென்ற
சமுதாயப்பிழை உருவாக
கருவானவனை மட்டுமேன்
இறைவன் என்றான்?
இந்தகேள்விகளோடே
தினந்தோறும் நுழைகின்றான்
கோயிலுக்குள் அவன்!

- இரா.ச.இமலாதித்தன்

உடன் பிறப்பே!




செந்தமிழென்றாய்
தன்மக்கள் நீயென்றாய்
என் உடன்பிறப்பே வாவென்றாய்
எப்போதும் நீ மட்டுமே வென்றாய்;
மொழிதான் உன் மூச்சென்றாய்
மூச்சை திணறடித்து
மூழ்கி கிடப்பதுவும் பிடிக்குமென்றாய்;
பகுத்தறிவே தன்மானம் காக்கின்ற
மேலாடை என்றுரைத்தாய் - இப்போதோ
உள்ளாடையே இல்லாமல்
உல்லாசமாய் இருப்பதுகூட பிடிக்கிறதென்கிறாய்;
வாக்களித்தவர்களுக்காகவே வாழ்கிறேனென்றாய்
தமிழகமே தன் குடும்பமென்றாய்
ஓட்டுக்காகவே நீ உளறிக்கொண்டிருப்பதை
ஒவ்வொரு தேர்தலிலும் வாக்களித்த பின்புதான்
உணர்ந்து கொள்கிறோம் நாங்களும்
உன் குடும்பம் மட்டும் தான்
ஒட்டுமொத்த தமிழகமென்று!

- இரா.ச.இமலாதித்தன்

அடையாளம்!



மதத்தின் குரு
சாத்வீக மனது
சாமனிய தவம்
ஏமாற்ற வலி
வள்ளுவ சிலை
காதலின் தோல்வி
நிகழ்கால ரௌத்ரம்
வறுமையின் உருவம்
கவிஞனின் அடையாளமென
அலங்கரிக்கப்படுகிறது
முகத்தில் தாடியாய்!

- இரா.ச.இமலாதித்தன்

பிச்சை பாத்திரம்!



குளிரூட்டப்பட்ட வாகனத்தில்
பிராதன சாலையோரம்
பயணிக்கும் நேரமெல்லாம்
பிச்சைகேட்டு கையேந்தும்
மழலைகளின் கரங்களுக்குள்
உறங்கி கிடக்கிறது
ஆதரவற்ற அனாதையாய்
பொருளாதாரம்!

- இரா.ச.இமலாதித்தன்

புலித்தமிழா!

மாவீரர் தின வாழ்த்துகள்...!






உயிராயுதமாய்
வில்லோடு அம்பாய்
வீறுக்கொண்டுச் சென்று
வீரத்தை விதைத்து
சோழர் கொடியை
திக்கட்டும் பறக்கசெய்த
வெற்றிப்படையின் வேந்தனே!
ஓயாத அலைகளாய்
நம்தமிழ் புகழ்விதை தூவி
கரும்புலியாய் களத்திற்கு சென்றாய்
காலனிடம் கலந்துவிட்டாய்
எத்தனை காலம்கடந்தும் - என்
தமிழினம் காத்த கடவுளாய்
உன்னை நான் கண்டிருப்பேன்!

கடற்புலியாய் கடலுக்குள்ளே
கப்பலையே கவிழ்த்துவந்து
கயவனையும் கலங்கடித்தாய்.
மச்சவதாரமே உனக்கென்றும் மரணமில்லை
அதை மறக்க எனக்கும் மனமில்லை!
வான் புலியாய் வான்தேடி வட்டமிட்டு
போராளி இயக்கங்களின் பேரொளியாய்
முன்னோடி தமிழனென
வானோடி வலம்வந்து 

வான்புகழை வெளிக் கொணர்ந்தாய்!

போராட்டம் என்பதே
பொதுவான விசயமென்று போனபின்னே
எல்லா தோல்விகளையும்
தவிர்த்துவிட முடிவதில்லை...
ஏற்பட்ட தோல்விகளால்
ஒருபோதும் ஓரினம்கொண்ட லட்சியம்
தவிடுபொடி ஆகிவிட போவதுமில்லை!

ஈழத்தில் புதைக்கப்பட்ட உடல்கள்
மண்ணோடு மடிந்துவிட
வெறும் எலும்பும் சதையுமான
வெற்றுடலில்லையே...
குருதியால் மண்ணில் குளித்து
நரம்புகளால் வேராகி
எலும்புகளால் கிளையாக
விருட்சமாய் நிச்சயம் வெளிவரும்
சுததந்திர ஈழத்தின்
விடுதலை காற்றை சுவாசிக்க!

நெஞ்சில் விதைக்கப்பட்ட விதைகள்
முளைக்க தொடங்கும்போது
பல விதிகள் இங்கே
மாற்றி எழுதப்படும் - அன்று
தமிழனின் தலைவிதியும் முற்றாய்
திருத்தி எழுதப்படும்!

நிழலும் வெளிச்சமாகும்போது
இருளைக்கூட தேடித்தான்
பார்க்க நேரிடும்...
எங்கள் வாழ்வும் நிஜமாய்
மாறும்வேலையில்
நிர்கதியான நிலைமாறி
நிம்மதியாய் நித்திரை கொள்வோம்!
பகைவென்று
சுதந்திரகாற்றை சுவாசிக்க
சிறைவென்று சீற்றத்தோடு
பழிதீர்த்து நமக்கான வழிகாண
சபதமேற்போம் இந்நாளில்!

உன்னை மறக்கநினைக்கும்
மரத்துப்போன மனங்களை
உளுத்துப்போன வார்த்தைகளால்
என்னால் மன்றாட பிடிக்கவில்லை...
நீ கண்ட கனவு வீணாகபோகாது
நிச்சயமொரு நாள் ஈழம் மலராமல் போகாது
நிம்மதியாய் நீ உறங்கு
சுதந்திர ஈழத்தில் தமிழ் தேசியகீதத்தோடு
உன்னுறக்கம் நான் களைவேன்
அதுவரை உன் ஆன்மா ஈழத்திலே
சுழன்று கிடக்கட்டும் மாவீரா!

- இரா.ச.இமலாதித்தன்

திமிர் நிலம்!



ஏக்கத்தோடு வானம் பார்த்து
காத்துக்கிடந்தாலும்
நெஞ்சம் நிமிர்த்தி
திமிராய் அண்ணார்ந்து
பார்த்துக்கொண்டிருக்கிறது
எங்களது நிலமும்
எங்களை போலவே!

- இரா.ச.இமலாதித்தன்