ஆழ் மனதில் புதையுண்ட
எண்ணங்களெல்லாம்
வார்த்தைகளாய் உருமாறி
வரிகளாய் வெளிப்பட்டு
கம்பீரமாய் சிரித்தாலும்
தவழ்ந்து வருகின்ற கைக்குழந்தை
எழுந்து நடப்பது போல்
தடுமாறி உதிர்கின்றன
உன்னிடம் வார்த்தைகளாய்!
உன்னிடம்
சொல்லிவிட்டு திரும்பிய
சொற்கள் அனைத்தும்
வென்றுவிட்ட களைப்பில்
கலைந்து கிடக்கின்றன
அர்த்தங்களற்று!
- இரா.ச.இமலாதித்தன்

(இதுவும் என் முதல் முயற்சி தான்...)
சேத்துலதான் காலவச்சு சோத்துலயும் கைய வச்சோம்
பாழப்போன வயித்துலதான் அடிக்கிறாங்க விவரமா
நாங்க வாழுறதே பூமிக்கும் பாரமா
வம்புதும்பு போனதில்ல வாய்க்காசண்ட ஏதுமில்ல
தண்ணிகேட்டு கத்துறோமே நித்தம்தான்
வயலு தொண்டை போலே வறண்டதென்ன குத்தம் தான்....
ராப்பகலா கண்விழிச்சு வயவரப்புலே கிடந்தாலும்
விடிஞ்சிடாம போனதென்ன வாழக்கைதான் - நல்ல
முடிவுக்காகக் காத்திருக்கோம் வேர்க்கத் தான்....
(சேத்துலதான் காலவச்சு...)
உறக்கம்கெட்டு உழைச்சாலும் பழையசோறு தின்னாலும்
ஊருக்குள்ளே நாங்கயெல்லாம் ஏழைதான்
தெனமும் உருப்படியாக் கூலி வாங்குறதே கஷ்டம்தான்
அன்னந்தண்ணி உண்ணாம அசராம உழைக்குறோமே
ஆக்கிதின்ன அரிசிகொடுத்தா போதுமா
எங்க அடி வவுத்துலே கையை வச்சா நியாயமா
(சேத்துலதான் காலவச்சு...)
விதைநெல்லைக்கூட விலைக்கு வாங்கி விதைக்குறோம் -அந்த
வெள்ளைக்காரன் வித்ததெல்லாம் போலியாம்
அதை விதைச்சு புட்டா மண்ணெல்லாம் மலடியாம்
என்னன்னமோ நடக்குது ஒண்ணுமே புரியலையே
உழைக்கநாங்க காத்திருக்கோம் ஆசையா
கத்திகத்தி கேட்டாலும் கவலைஇங்கே தீரலையே
சேத்துலதான் காலவச்சு சோத்துலயும் கைய வச்சோம்
பாழப்போன வயித்துலதான் அடிக்கிறாங்க விவரமா
நாங்க வாழுறதே பூமிக்கும் பாரமா...
- இரா.ச.இமலாதித்தன்

(என் முதல் முயற்சி...கானா "மாதிரி"...)
அவள பார்த்த நாள்முதலா நானும் தான் தூங்கலையே...
தூங்கமா படுத்திருந்தா நித்தமும் தான்- என் மனசும் தாங்கலையே
என் கண்ணுக்குள்ள வந்துவந்து கனவாகி போனாளே
கணவனாக வரத்தானே வரம் வாங்கி வந்தேனே...
அவகூட பேசலாம்னு பின்தொடர்ந்து வந்தேனே
என்னை கண்டுகிட்டும் காணாம எப்பவுமே போறாளே
என்னான்னு சொல்லுவேன் அவ கண்ணாலே கொல்லுறா
அவகிட்ட என் மனச வித்துபுட்டேன் மொத்தமா
அவ இல்லாம நான் வாழ என்ன செஞ்சேன் குத்தமா...?
மனசை கடன் கொடுக்க கூட அவளுக்கு மனசும் தான் வரலையே
மல்லுகட்டி நிக்குறேனே மன்றாடி பார்க்குறேனே
என்னை காதல் செய்யவே அவளும் தேடிகூட வரலையே
அதற்கான நாளும் இங்கே கைகூடி வரலையோ...?
காதல்ன்னு சொல்லிபுட்டா கடைசி வரைக்கும் கவலைதான்
அதுவே கனவாகி போனதுன்னா நானும் கூட இல்லைதான்
பொண்ணுகிட்டே ஏமாறி பொழப்பும் தான் ஓடுதே
கண்ணேன்னு சொன்னவளும் அம்போன்னு விட்டுட்டா...
- இரா.ச.இமலாதித்தன்

பொட்டிக்குள் பூட்டிவைத்த
வேட்டி சட்டை பளபளக்க
வெட்டித்தனமாய் மாட்டிக்கொண்டு
வீட்டுக்கு உதவாதபயலென்று
ஊர்சொல்ல கேட்ட பின்னும்
தலைவன் வந்த கூட்டத்திற்கு
பெயர்பலகை வைத்திடவே
வட்டிக்கு பணம் வாங்கி
நடுத்தெருவில் தொண்டனொருவன்!
கோட்டைக்குள் குறட்டை விட
கட்சிக்குள்ளே போட்டிப் போட்டு
சீட்டு வாங்க கட்டுக் கட்டாய்
நோட்டை கொட்டிக் கொடுத்து
ஒட்டுக்கேட்க தலைவனொருவன்!
நட்டாற்றில் தள்ளிவிட்டு
நாட்டாமை செய்வதற்கு
காட்டாற்று வெள்ளமென
மூட்டை தூக்கி நாட்கள் கடத்தும்
பாட்டாளி வர்க்கம் நானென்று
நாட்டுக்குள் முழங்கிக்கொண்டே
தேர்தலுக்குள் தலைவனொருவன்!
மோட்சமடைந்த முனிவன்போல
நாட்டை காக்க அவதாரம் எடுத்ததாக
வீட்டிற்குள்ளே விளக்கமும் கொடுத்து...
பட்டினி சாவே இல்லாதொழிக்க போவதாய்
காட்டமாய் ஊடகத்தில் பேசிவிட்டு
நட்சத்திர விடுதியில் தானுண்ண
பட்டியலிட்டான் தலைவனொருவன்!
ஓட்டு போட்டு அரியணை ஏற்றிய
பாட்டாளி மக்களுக்கே
வேட்டு வைக்க துணிந்தவனை போற்றி
போட்டிப்போட்டு வாழ்த்து மடல்
பட்டித்தொட்டி எங்கும் பளபளக்க
கடவுள்போல தலைவனொருவன்!
தட்டிக் கேட்க எவனுமில்லை
எட்டு திசையும் எனக்கிங்கு நிகருமில்லை
கட்டம்கட்டி கணக்காய் காயும் நகர்த்தி
பட்டு வேட்டி சட்டையோடு புறப்பட்டான்
எட்டா புகழுடைய தலைவனொருவன்!
கட்டில் தூக்கமே கனவாய் போக
விட்டில் பூச்சியின் வாழ்க்கை போலவே
வட்டிக்கே கடனும் வாங்கி இழுபறியோடு...
தட்டுத் தடுமாறி குடும்பம் நடத்த வழியுமின்றி
பட்ட மரமாய் நடுத்தெருவில் நிற்கிறான்
ஓட்டளித்த முட்டாள் தொண்டனொருவன்!
- இரா.ச.இமலாதித்தன்
_

சூட்சமத்தால் சூழப்பட்ட
ஆழ்மனத்தின் வேர்களுக்குள்
முன்பைவிட முழுவீச்சோடு
ஊடுருவிக் கொண்டிருக்கிறது
குழப்பத்தினால் பின்னிப் பிணைந்த
நினைவுகளின் சுவடுகள்!
சிதைக்க முடியாதென
நெஞ்சுக்குள் கட்டியெழுப்பிய
அசைக்கமுடியா நம்பிக்கையும்
தூள்தூளாய் நசுக்கப்பட்டு
துயரத்திற்குள் தூக்கி எறியப்படுகின்ற
அந்தவொருசில நாழிகைக்குள்...
கணப்பொழுதில் வெடித்து சிதறி
காணாமல்போகும் நீர்க்குமிழிபோல.
நிர்கதியான மனதைவிடுத்து
நினைவுகளும் நிர்மூலமாய்
சிதற தொடங்குகிறது!
சற்றே சுயமாய்
சுதாரித்துக்கொண்டு
தன்னை சூழ்ந்துகிடக்கும்
சுகவீனமற்ற நிலையை
துடைத்தழிக்க முற்படும்
அந்தவொரு நொடிப்பொழுதில்
ஏமாற்றத்தின் விளிம்பில் அகப்பட்டு
மரண ஒத்திகைக்கு
ஆயத்தமானது மனது!
- இரா.ச.இமலாதித்தன்

பாராளுமன்ற தேர்தலென்றால்
தாராளமாய் பணம் கிடைக்கும்...
இடைத்தேர்தல் வந்தாலும்
இது போலவே கிடைத்திருக்கும்...
பணம் மட்டும் தந்தால் போதும்
எமனுக்கும் வாக்களிப்போம்
இறைவனையே தோற்கடிப்போம்...!
எங்களின் பலம்கொண்ட
பசிமறந்த உழைப்புக்கு
பலனேதும் கிடைத்ததில்லை...
பல போராட்ட குழுவிருந்தும்
பசிபோக்க யாருமில்லை...
பணம் தந்தால் ஓட்டுண்டு
தேர்தலென்று வந்துவிட்டால்
கடவுளுக்கே வேட்டுண்டு!
சோறள்ளி உண்பதற்கும்
சேறள்ளி உழைப்பதற்கும்
உண்டான கையென்றாலும்
தேர்தலுக்கு தேடி வந்து
ஒற்றை விரலில் மைபூசி
வாக்களிக்க பலநூறு பணமளிக்கும்
கூட்டமிங்கே கூடிடுச்சு!
எவன் வென்றால் நமக்கென்ன
எதிர்கொள்ள தேவையென்ன?
பணம் வந்தால் போதுமென்று
பழகிக்கொள்ள கற்றுக்கொண்டோம்
வாக்கு மட்டுமே எங்கள் முதலீடு
தேர்தல்தான் எங்களுக்கு பலியாடு!
- இரா.ச.இமலாதித்தன்
இந்த கிறுக்கல்கள் தமிழ் ஆதொர்ஸ் இணையதளத்திலும் வெளிவந்துள்ளது.
இந்த கிறுக்கல்கள் தமிழமுதம் இணையதளத்திலும் வெளிவந்துள்ளது.
இரு பாதங்கள் படிய
நான் கடந்து போகின்ற
சாலைகளின் பாதையெங்கும்
என் கண்ணெதிரே
தென்பட்ட உருவமெல்லாம்
பிரதிபலிக்கிறது உன் முகத்தை!
இதுநாள் வரை உன்னைநான்
பார்க்கவே இல்லையே...
இருந்தபோதிலும்
காண்கின்ற எல்லாமும்
கவித்துவமாய் என் கண்களுக்கு
காட்சி தருகின்றனவே
கவிதைதான் உன்முகமோ?
மூன்றைந்து நாட்களுக்குள்
முகம் மறைக்கும் நிலவைப்போல்
என்னுலகில் தோன்றவேண்டிய
எனக்கான வளர்பிறையே
எப்போது முகம் மலர்வாய்?
உன் நிழலைக் கூட காணமுடியாமல்
உன் முகத்தை அனுதினமும்
ரசித்துக்கொண்டிருக்கிறேன்...
எனக்கு பிடித்த ஒன்றைப்போல்
உனக்கானதொரு
புத்தம்புது உருவத்திற்குள்
என்னுயிரை பகிர்ந்தளித்து!
- இரா.ச.இமலாதித்தன்
இந்த கிறுக்கல்கள் தமிழ் ஆதொர்ஸ் இணையதளத்திலும் வெளிவந்துள்ளது.
இந்த கிறுக்கல்கள் தமிழமுதம் இணையதளத்திலும் வெளிவந்துள்ளது.

_____________________
001.
உன்னிடம் சொல்ல நினைத்து
தவறிப்போன வார்த்தைகளெல்லாம்
நீ குனிந்து நடக்கும் பாதையில்
கீழே சிதறி கிடக்கலாம்;
மெதுவாக கடந்து செல்!
_____________________
002.
ஆண் பெண்
நட்பின் முக்தி
காதல்!
_____________________
003.
ஒரு சிலருக்கு
கல்லறை
வேறு சிலருக்கு
கோவில் கருவறை
காதல்!
_____________________
004.
புனிதம்
என்ற சொல்
பூர்த்தியானது
காதலை
தியாகம் செய்யும்போது!
- இரா.ச.இமலாதித்தன்
ஏதோதோ உருவகப்படுத்தி
எழுதினால்தான்
காதலியைப் பற்றிய
கவிதை வருமென்று
எல்லோரும் சொல்கிறார்கள்...
உவமைக்காக ஒவ்வொன்றாய்
இவ்வுலகில் தேடியலைந்து
உனக்கான மாற்றுரு
ஒன்றுமில்லையென்ற
உண்மையை உணர்ந்தபின்
வார்த்தைகள் ஊமையாகி
சொற்களெல்லாம் உதிரத்தை உதிர்த்து
வெற்று வரிகளாய் மட்டுமே
காகிதத்தில் வந்து விழுகின்றன;
உயிர்களெல்லாம்
பிரம்மனின் படைப்பென்று
எல்லோரும் சொல்லிக்கேட்டிருந்தும்
கண்கள் கதை பேசுவதும்
இதழ்கள் எட்டிப் பார்ப்பதும்
உன்னுள் மட்டுமெப்படி
இந்தவொரு முரண்பாடென்று
உன்மீதான சில சந்தேகங்கள்
என்னுள் அடிக்கடி எத்தனிக்கிறது;
தேவதையை
கதைகளிலே கேட்டதுண்டு
என் கண்ணெதிரே நீ வந்தபின்தான்
நேரடியாய் கண்டுகொண்டேன்...
எனக்கான தேவதையே
உன் கரங்களைப் பற்றிக்கொள்ளும்
கணவனாய் நான் மாற
சம்மதம் சொல்வாயோ இல்லை
சங்கடத்தில் கொல்வாயோ?
- இரா.ச.இமலாதித்தன்