விலகும் இறுக்கம்!


இறுகி கொண்டிருக்கிறது நூல்
விலகி கொள்ளாத ஆரம்
இறுதி பிடியை எதிர்பார்த்து
சின்னஞ்சிறு வட்டமிடுகிறது;
சுற்று மட்டுமே நீள்கிறது
தளர்வில் இளகிக்கொள்ள
சுயமாகவே ஆயத்தமாகிறது;
முடிவில் அறுத்தெறிய படலாம்
இலகுவாக விலகுவது
எப்போதும் இயல்பு தானே!

- இரா.ச.இமலாதித்தன்

துரோக கூட்டம்!


சூழ்ச்சியின் வலைகள்
பின்னப்பட்டு கொண்டிருக்கின்றன
சில சிலந்திகளின் முயற்சியால்...
சிங்கம் கால் இடறி விழுவதை 
ரசிக்க காத்திருக்கிறது
பூனைகள் கூட்டம்...
நரிகளை நம்பி ஏமாறுவதை விட
நான் நானாகவே இருந்து விடலாமென
நற்சிந்தனை தானாக எழுகிறது;
பதுங்கி கிடக்கும்  பன்றிகளெல்லாம்
ஒன்றாய் இணைகிறது;
அப்போதும்
சிங்கம் தனித்தே காத்திருக்கிறது
துரோகத்தை சின்னா பின்னமாக்கி
தன் சுயத்தை வெளிக்காட்ட!

- இரா.ச.இமலாதித்தன்

அவளுக்கான ஏமாளி!


இனி புத்தம்புதிதாய்
அவள் பிறக்க போவதில்லை
எங்கிருக்கிறாளோ?
என்ன செய்து கொண்டிருக்கிறாளோ?
தனிமையில் தவித்து கொண்டிருக்கிறாளோ?
படித்து கொண்டிருக்கிறோளோ?
பணி செய்து கொண்டிருக்கிறாளோ?
இல்லை வழமைபோல;
கணவனாக வரப்போகும் அவன்
இவளது கண்ணசைவுகளுக்கே
கட்டுப்பட வேண்டுமென்று
எந்த கோவில்களிலாவது
நெய்தீபம் ஏற்றி கொண்டிருக்கிறாளோ...
எது எப்படியோ
ஓர் ஏமாளி காத்து கொண்டிருக்கிறான்
முகநூலில் கிறுக்கிய படியே!

- இரா.ச.இமலாதித்தன்

ஏனென்றால் நாங்கள் தமிழர்கள்!


சுழியம் ஒன்றென்ற பைனரிக்களால்

கணினி மொழி படித்த பின்னும்
எமக்கான களங்கலெல்லாம்
என்திசையும் முற்றுகையிட 
வெறிச்சோடிய எதிர்கால சுவர்களில்
சித்திரங்கள் தீட்டிக் கொண்டோம்
தூரிகைகள் ஏதுமின்றி!

இருநூறு வருடங்கள் அடிமைப்படுத்திய
இருபத்தாறு எழுத்தே கொண்ட
அந்நிய ஆங்கிலம்
இன்றெங்கள் தகப்பன்மொழியாய் உருவெடுக்க;
இருநூறு சொச்சம் எழுத்துகள் கொண்ட
பல்லாயிர ஆண்டுகள் பழமைமிக்க
எமது தாய்மொழியின் கருகலைத்தோம்!

ஆங்கிலம் என்பது அறிவல்ல
அது வெறும் மொழி என்பதை மறந்தே
தமிழனென்ற அடையாளத்தை
எம் சுயத்தோடு இழந்து 
சூழ்நிலை கைதியானோம்!

அழகியல் மொழியான
அம்மாவென்ற வார்த்தை கூட
வழக்கொழிந்து போக 
பிரமிடுகளுக்குள் உயிரற்று கிடக்கும்
வெற்றுடலாகி போன
மம்மியென மொழிச்சிதைவோடு  
உச்சரிக்க வைத்தோம்
நிகழ்கால தலைமுறையை!

உலக மொழிகளின் ஆணிவேர்
செந்தமிழை தொலைத்தது போலவே  
எமக்கான பூர்வீக அடையாளங்களையும்
ஒவ்வொன்றாய் இழந்த பின்னே
அமீபாவாய் அடையாளங்கள் ஏதுமின்றி
யாராகவோ வாழ்ந்திருப்போம்
ஏனென்றால் நாங்கள் தமிழர்கள்!

 - இரா.ச.இமலாதித்தன்

நீ கடவுளில்லை!


துண்டாக சிதறிக்கொண்டிருக்கிறது
எதிர்கால வாழ்வியல்;
உன்னாலேயே உருவாக்கப்பட்டது
உனக்கான எல்லைகள்;
அது விரிவடைந்து விட்டதாகவே
கற்பனைகளுக்குள் மூழ்கிவிட்டாய்!

நீ இரவலாய் வந்த வெற்றுடல்
புகழிடம் தேடிய நீயுமொரு வந்தேறி;
குழுமியிருந்த பலரால் விரட்டப்பட்டும்
உடலால் சிலரை வென்றாலும்
உன் காலடி யாருக்கு சொர்க்கம்?

பெரும்பணத்துக்கும் சிறுபுகழுக்கும்
சிலருடல் அடிமைசாசனம்!
நீ மதம் கொண்ட மானுடம்
ஆன்மீகம் உன் ஆறுதல்
பலர் மனம் கொன்ற வெண்ணுடல்;
உன்னை கட்டுப்படுத்த
கேடயமென்ற ஆயுதம் வீண்
புரிந்து கொண்டோம்;
தன்னையே அழித்துக் கொள்ளும்
நீ ஆணவத்தீ !

பிழை செய்து கொண்டே
பெரும்துரோகம் செய்கின்றாய்
உன்மீதான மாயை 
புகழ் பதவி உயிருடல் என்ற இத்யாதிகளின்றி
நீயுமொருநாள் இல்லாதிருப்பாய்;
அதன் பின்னும் 
உனக்கும் சில நினைவேந்தல் நிகழ்வு
ஊருக்கொன்று நடைபெறும்
ஆனாலும் நீ கடவுளில்லை! 


- இரா.ச.இமலாதித்தன்

வாடகை வீடு!

யாரோ ஆண்டவனாம் 
சிலகாலம் மனிதர்களோடு 
வாழ்ந்துவிட்டு போகலாமென 
பூமிக்கு வந்திருப்பதாய்
விடிகாலை கனவில் வந்து 
நாரதன் ஒருவன் சொல்லி சென்றான்;
அவனைத்தேடி நான் போக எத்தனிக்க 
வாசலுக்கு வெளியே யாரோ ஒருவன் 
வாடகைக்கு வீடுத்தேடி 
விசாரித்து கொண்டிருந்தான்;
நான் காலி செய்த வீட்டையே 
அவனுக்கு சொல்லிவிடலாமென தோன்றிற்று; 
வணக்கம் வைத்து வரவேற்று 
அவனுக்கான வீடு நோக்கி நகர்ந்து சென்றோம்!

வள்ளுவனே வாடகைக்கு குடிபுகுந்தால்
குறளில் சொல்லாத நான்காம் அதிகாரம் 
அவனையும் சோதித்து பார்க்கலாம்;     
அறம் பொருள் இன்பத்தோடு  
வீடுபேறே கிடைத்தாலும் 
சொந்த வீடில்லாமால் வாழ்வது வீண் 
என்றிருப்பானென்றேன்;
மறுதலிப்பு ஏதுமில்லாமல் 
என்னை பார்த்து புன்னகைத்தான் அவன்!
 
விலை நிலங்களெல்லாம் மனைகளாவதற்கு  
வாடகை தந்தும் வசவுகளை வாங்கும் 
இடைநிலை குடும்பத்தினருக்கு   
சொந்தமாய் ஒரு வீடு இல்லாததுதான்
காரணமாய் இருந்திருக்கலாமென்றேன்;
ஒன்றுமே சொல்லவில்லை அவன்
தலையை கூட சற்று தாமதமாகவே ஆட்டினான்!

ஆண்டவனாகவே இருந்தாலும்
வீட்டு உரிமையாளரிடம் 
அடிபணிந்துதான் போகவேண்டுமென்றேன்;  
இதுபோல பல இலவச அறிவுரைகளை 
கேட்டுக்கொண்டிருந்தவன்  
வெகுநேர மௌனத்திற்கு பிறகு
பேச தொடங்கினான்; 
நானே ஆண்டவன் தானென்றான்!
நாரதன் சொன்னது நினைவுக்கு வந்தது 
ஆச்சரியத்தோடு அவனை பார்த்து  
கட்டியணைத்து ஆறுதல் சொன்னேன்
விதி வலியதென்று!

கண்கள் விழித்து பார்த்தேன் 
இப்போதுதான் கனவு முடிந்திருக்கிறது போல;   
உண்மையிலேயே வாசலுக்கு வெளியே 
யாரோ காத்துக்கொண்டிருப்பது போலிருந்தது; 
ஒருவேளை அவர்  
வாடகை வசூலிக்க வந்த 
வீட்டு உரிமையாளராக இருக்கலாம்! 

- இரா.ச.இமலாதித்தன்

அவளோடு நான்!
















 






சிவப்பும் கருப்பும்
கோபித்துக் கொள்ளாதபடி
இரண்டுக்குமான இடைவெளியில்
வர்ணம் பூசிய வார்ப்பாய்
வடிவம் கொண்டிருந்தாள்
உடல் முழுதும்!
இத்தனை வருடங்களாக
தினமும் என்னை அவள்
பார்க்க தவறியதேயில்லை;
என்னை மட்டும் தான் அப்படி
பார்க்கிறாள் போல!
பால்ய கால நினைவுகளை
அசைபோட பரிதவிக்கும்
அவளது முகமெல்லாம்
விரவிக்கிடந்த பருக்களும்
விலகிக் கொண்டிருந்தன 
பதின்ம வயதை கடக்கும் போது!

அவளை கட்டித்தழுவும் ஆவலோடு
என்னை விடுவித்து 
வெளிவர முயற்சிக்கிறேன்;
தெறித்து கீழே விழ
ஆயத்தாமாகிக் கொண்டிருந்தன
பிடிமுனைகள்!
கட்டுண்ட பிடிப்பிலிருந்து
விடுதலையாகி தரையை தழுவி
முத்தமிட்டு கொண்டிருக்க;
அவளது பிம்பத்தை
பிரதிபலித்து கொண்டிருந்தன
கீழே விழுந்து சிதறிய
என் ஓவ்வொரு பகுதிகளும்!

இப்போது உடலை இழந்து

புத்துயிர் பெற்றுவிட்டேன்
சிதறுண்ட மிச்ச உடலை
அவளது கைகளாலேயே ஆரத்தழுவி
சேகரித்து கொண்டிருந்தாள்;
சட்டென்று குப்பை தொட்டியில்
வீசியெறியப்படுகிறேன் நான்!
இத்தனை நாட்களாய்
அடைப்பட்டு கிடந்த
வெறுமை சூழ்ந்திருக்கும் சுவற்றை
வெகுநேரமாய் பார்த்து
வருத்தப்பட்டு கொண்டிருக்கிறாள்
ஆளுயர கண்ணாடியில்
இனி முகம்பார்க்க முடியாதென்பதால்!

- இரா.ச.இமலாதித்தன்

கவிதை என்பது யாதெனில்!
















வெகு நாட்களாகவே 
கவிதையென்ற பெயரில் 
எதுவுமே எழுதவில்லையென்ற 
எண்ணத்திலேயே மூழ்கிக்கொண்டிருந்தான்; 
எதைப்பற்றி எழுதுவதென்று  
நீண்ட நேரமாக சிந்தித்தும் 
ஒன்றும் வசப்படபில்லை அவனுக்கு;
எதையாவது கிறுக்குவோம் 
யார் நம்மை கேட்பாரென்று 
ஏதோ ஒன்றை எழுத ஆரம்பிக்க  
தனித்தனி சொற்களனைத்தும்  
ஒருசில வரிகளாய் உருமாறிக்கொண்டிருந்தன;
இறுதியில் சிலவற்றை திருத்தி 
பொதுவில் காட்சிப்படுத்த 
ஆனந்தமாய் வாரஇதழுக்கு அனுப்பிவைக்க 
கிறுக்கியவையெல்லாம் பிரசுரமானது 
கவிதையென்ற அங்கீகாரத்தோடு!

- இரா.ச.இமலாதித்தன்

யாரோ அவன்!

















நாகரிக உடையணிந்து   
கடைத்தெருவின் நெரிசல்களுக்கிடையே 
உரத்தக்குரலில் சத்தமிட்டுக் கொண்டிருந்தான்
பள்ளி செல்கின்ற பதின்ம வயதுதான் அவனுக்கு
ஆனாலும் படித்திருக்க வாய்ப்பில்லை
குடும்பத்தால் தனித்து விடபட்டவனாய் இருக்கலாம்
ஒருவேளை உணவுக்காகவோ 
இல்லை வேறு எதுக்காகவோ
வாழ்க்கையில் போராடிக்கொண்டு இருக்கிறான்; 
இவையெல்லாம் ஓர் அனுமானம்தான்
அவனது அவமானங்களை 
யாரும் அனுபவப்பூர்வமாய் 
உணர்ந்திருக்க வாய்ப்பில்லை நான் உள்பட;

மாணவன், தொழிலாளி, வியாபாரியென  
பன்முக அடையாளங்களில்  
கைகளில் கைக்குட்டைகளோடு 
முதலாளியாகத் தென்பட்டுக் கொண்டிருந்தான்;
நானுமொரு கைக்குட்டையை 
அவனிடம் வாங்கிக்கொண்டிருந்தேன்;
யாரோ என்னை ஏளனமாய்ப் பார்ப்பதுபோல் பிரம்மை
நான் மட்டும்தான் அவன் சொன்னவிலைக்கே
வாங்கி இருக்கிறேன் போல;
பேரம் பேசுவது சுலபமாகவும்
சிலசமயங்களில் சுகமாகவும் கூட இருக்கிறது;
குளிரூட்டப்பட்ட கடைகளில் 
வாயையே திறக்காமல் பர்சை திறக்கும் கூட்டம்  
இவனைப்போன்ற பாமரர்களிடம் மட்டும் 
பேரம் பேசிக்கொண்டுதான் இருக்கிறது;
உள்ளுக்குள் கோபத்தோடும் 
உதடுகளில் சிரிப்போடும் 
அவனிடமிருந்து வெளியேறிக் கொண்டிருந்தேன்
நாமும் பேரம் பேசி இருக்கலாமோ யென்ற
எண்ண வோட்டங்களோடு!

 - இரா.ச.இமலாதித்தன்