ஏதோதோ உருவகப்படுத்தி
எழுதினால்தான்
காதலியைப் பற்றிய
கவிதை வருமென்று
எல்லோரும் சொல்கிறார்கள்...
உவமைக்காக ஒவ்வொன்றாய்
இவ்வுலகில் தேடியலைந்து
உனக்கான மாற்றுரு
ஒன்றுமில்லையென்ற
உண்மையை உணர்ந்தபின்
வார்த்தைகள் ஊமையாகி
சொற்களெல்லாம் உதிரத்தை உதிர்த்து
வெற்று வரிகளாய் மட்டுமே
காகிதத்தில் வந்து விழுகின்றன;
உயிர்களெல்லாம்
பிரம்மனின் படைப்பென்று
எல்லோரும் சொல்லிக்கேட்டிருந்தும்
கண்கள் கதை பேசுவதும்
இதழ்கள் எட்டிப் பார்ப்பதும்
உன்னுள் மட்டுமெப்படி
இந்தவொரு முரண்பாடென்று
உன்மீதான சில சந்தேகங்கள்
என்னுள் அடிக்கடி எத்தனிக்கிறது;
தேவதையை
கதைகளிலே கேட்டதுண்டு
என் கண்ணெதிரே நீ வந்தபின்தான்
நேரடியாய் கண்டுகொண்டேன்...
எனக்கான தேவதையே
உன் கரங்களைப் பற்றிக்கொள்ளும்
கணவனாய் நான் மாற
சம்மதம் சொல்வாயோ இல்லை
சங்கடத்தில் கொல்வாயோ?
- இரா.ச.இமலாதித்தன்
ஏழெட்டு பிள்ளைகளை
ஈன்றெடுத்த தாடிக்காரனொருவன்
தன் நாலுவயது மகனுக்கு
கைத்தொழிலாய் மாறிப்போன
சுயவேலை யொன்றை
சிலகாலம் பயிற்றுவித்து...
கலைந்து கிடக்கும் முடியோடும்
கறை படிந்த உடையோடும்
முதல்நாள் தொழிலுக்கு
தன்மகனை அழைத்துவந்து
பேருந்து நிறுத்தத்தில் நிற்க வைத்து
போய்வருகிற எல்லோரையும்
சட்டையைப் பிடித்திழுத்து
கைநீட்டி கேட்கச்சொல்கிறான்
பிச்சை...!
- இரா.ச.இமலாதித்தன்
" கைத்தொழில் "யென்ற இந்த கிறுக்கல்களும் தமிழ் ஆதொர்ஸ் இணையதளத்திலும் வெளிவந்துள்ளது.தமிழ் ஆதொர்ஸ் மேல் சொடுக்கினால் அங்கே சென்றும் நீங்கள் பார்க்கலாம்.
"கைத்தொழில்" யென்ற இந்த கிறுக்கல்களும் தமிழமுதம் இணையதளத்திலும் வெளிவந்துள்ளது.தமிழமுதம் மேல் சொடுக்கினால் அங்கே சென்றும் நீங்கள் பார்க்கலாம்.

001.
முட்கம்பி வேலிகட்களுக்குள்ளும்
சுவாசிக்க விருப்பமில்லை
காற்றுக்குள் உன் பிணவாடை!
002.
ஊருக்கு வெளியே சுடுகாடு
என்ற காலம் மாறி
ஊரே சுடுகாடாய் ஆனபின்னே
ஆறடி நிலம்கூட இல்லாமல்
அடித்துவிரட்டபட்டு
நாடுவிட்டு நாடோடிகளாய்
இன்று தமிழர்கள் அகதிகளாய்
சுடுகாட்டிற்குள்!
003.
ஒட்டுமொத்தமாய் தமிழினத்தை
உயிரோடு புதைக்கப்பட்ட இடத்தில்
ஒய்யாரமாய் உருவெடுத்து நிற்கிறது
விகரமான விகார்!
004.
உன்னை மறக்கநினைக்கும்
மரத்துப்போன மனங்களை
உளுத்துப்போன வார்த்தைகளால்
என்னால் மன்றாட பிடிக்கவில்லை...
நீ கண்ட கனவு வீணாகபோகாது
நிச்சயமொரு நாள் ஈழம் மலராமல் போகாது
நிம்மதியாய் நீ உறங்கு
சுததந்திர ஈழத்தில் தமிழ் தேசியகீதத்தோடு
உன்னுறக்கம் நான் களைவேன்
அதுவரை உன் ஆன்மா ஈழத்திலே
சுழன்று கிடக்கட்டும் மாவீரா!
- இரா.ச.இமலாதித்தன்
"மாவீரா" யென்ற இந்த கிறுக்கல்களும் தமிழமுதம் இணையதளத்திலும் வெளிவந்துள்ளது.தமிழமுதம் மேல் சொடுக்கினால் அங்கே சென்றும் நீங்கள் பார்க்கலாம்.

ஒவ்வொரு நாட்களும்
உன் அழைப்பு வந்தபிறகு தான்
சுழியத்திலிருந்து தொடங்கி
சுழலத் துவங்குகிறது
இருபத்திநாலு மணி நேரத்தின்
எனக்கான கடிகார முட்கள்!
உரையாடலில் கேள்விகள் கேட்பதென்பது
எளிதான போதும்
உன்னிடம் பேசும்போது
வினாக்கள் கூட வெளிவர மறுத்து
உள்ளிருப்பு போராட்டங்கள் நடத்துகின்றன;
நீ கேட்கும் கேள்விகளுக்கு
என்னிடம் விடையில்லை என்பதை
முன்னரே நீ மட்டும் எவ்வாறு அறிந்துவிடுகிறாய்?
அதுதெரியாமலேயே
எங்கேயோ தலைமறைவாய்
ஓடிஒளிந்து கொண்ட உனக்கான பதில்களை
என்னிடம் தேடியலைந்து
விடைகிடைக்காமல் போனதும்
உரசிக் கொள்ளாமல் உறங்கிக் கிடக்கின்றன
என்னிரு உதடுகள்!
பின்பு உளறத்தொடங்கிய உதடுகள்
ஊமையானதை சற்றே உணர்ந்துகொண்டு
இரு உதடுகளும் விழித்து
இதழ்களாய் விரிக்கும்போது
வார்த்தைகள் நொண்டியடித்து
அங்கே ஊனமாய் நிற்கிறது
நம் உரையாடல்!
முடிவிலியாய் நீ
என்னோடு இருப்பாயென்ற
மாயையை உணரமறந்து
அப்புறம்,வேறென்ன, ம்ம்,சொல்லு,சரியாவென்ற
ஐந்து வார்த்தைகளால் நீ உரையாடும்
அந்தவொருசில நாழிகைக்குள்
உன்னுள் உறைந்து போய்விடுகிறேன்
அறிவிலியாய்!
உரையாடி முடித்தபின்
ஒவ்வொரு நிமிடங்களில்
புதைக்கப்பட்ட எந்தவொரு
நொடியும் முடியும் முன்னரே
உடனடியாய் நிலைகொண்டு
நிற்கின்ற உன்நினைவால்
மீண்டுமுன் அழைப்பொலியை
எதிர்பார்த்துக் காத்திருக்கும்
நொடியின் அளவை கோடியாய்ப் பிரித்த
சின்னஞ்சிறு நேரத்திற்குள்ளும்
உணர்கிறேன் என்னுளுள்ள
உன்மீதான கட்டுக்கடங்கா காதலை!
- இரா.ச.இமலாதித்தன்
இந்த கிறுக்கல்களும் தமிழமுதம் இணையதளத்திலும் வெளிவந்துள்ளது.

காதலால் நான் உன்னை
மணம் செய்ய முடியாதென்று
பெற்றோரின் குணமறிந்த
முற்போக்கு மூளைக்கு தெரிந்திருந்தும்...
உன்னை மறக்க தவிர்த்து
முண்டியடிக்கும் மனதை மறுத்து
உன்னை மட்டுமே நினைத்து
உயிர் துடிக்க முயலுகின்ற
ஒவ்வொரு நொடிகளுக்குள்ளும்
பலகோடி விதைகளாய்
ஆழ்மனதில் விழுங்கப்படுகிறது
நம்மிருவரின் அன்பு!
விலகிச்சென்ற அன்பால்
சிதைவடைந்த செந்தளிர் நாட்களும்
விளைச்சலாய் வெளிப்பட்டு
விருட்சமாய் வெளிக்கொணரும் காலங்களில்...
தனிமையால் வெறுமை சூழ்ந்து
செழிப்பிழந்து செயல்படாமல்
தடுமாறி கிடக்கும்போது
என்குழந்தையின் பெயராய் நீயும்
உன்குழந்தையின் பெயராய் நானும்
அறுவடைசெய்திருப்போம்
விழுங்கப்பட்ட அன்பை!
- இரா.ச.இமலாதித்தன்
திருமண வரவேற்பில்
மணமகனிடம் கை குலுக்கி
புகைப்படத்திற்கும் முகம்காட்டி
பரிசொன்றை தந்து
பத்திரமாய் பார்த்துக்கொள்ள
சொல்லிவிட்டு
மணமேடை கீழிறங்கி
இருவிழி கலங்கி நின்றேன்...
எட்டு வருடம் தொட்டுவிட்ட
எங்கள் காதலின் பரிசாய்
வரவேற்பு பத்திரிகையை
எனக்கு தந்துவிட்டு
மணமேடையில் என்னவள்
மணக்கோலத்தில் இருந்ததைக் கண்டு
அலங்கோலமாய் நான்
அழுதுகொண்டே வெளிசென்றேன்...
நான் பத்திரப்படுத்த சொன்னது
பரிசை அல்ல காதலியையென்று
மாப்பிளைக்கு தெரியாது...
நான் இன்றும் அவள்தந்த
வரவேற்பு பத்திரிக்கையை
பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேனென்று
என் காதலிக்கும் தெரியாது!
- இரா.ச.இமலாதித்தன்
இந்த கிறுக்கல்களும் தமிழமுதம் இணையதளத்திலும் வெளிவந்துள்ளது.
நான் துயரப்பட்டநாட்களிளெல்லாம்
தூரமாய் இருந்துவிட்டு
இன்றோ துக்கம் விசாரிக்க
துடித்துக்கொண்டு வருகிறார்கள்
தூரத்து சொந்தமென...
எப்போதோ ஒருநாள் வந்துபோகும்
உன் அலைபேசி அழைப்பை
இந்த அழையா விருந்தாளிகளுக்காக
துண்டித்து கண்ணீர் வடிக்கிறது
என் கட்டைவிரல்!
- இரா.ச.இமலாதித்தன்
திருவிழாக் கூட்டத்தில்
உனக்கு மட்டுமே பிடித்துப்போன
பொம்மையொன்றை
என்னை கைக்காட்டிக் கேட்கும்போது
வீட்டில்தான் ஆறேழு வீணாகவே கிடக்குதென்று
வேண்டாமிது என்றுரைத்து
எனக்கு மட்டுமே பிடித்துப்போன ஒன்றை
எடுத்துவந்து நீட்டும்போது
வெடுக்கென்று அதைபிடித்திழுத்து
கீழே தட்டிவிட்டு சிரிக்கிறாய்
அங்கே குழந்தையாய் நான்!
- இரா.ச.இமலாதித்தன்

கண்களுக்கு புலப்படும் எல்லைகளுக்குள்
யாதுமற்ற வெறுமைகளால்
வெறிச்சோடி விரிந்து கிடக்கும்
தரிசுநில வயல்வெளிகளின்
வரப்போர ஒற்றை கருவேலமரத்தின்
நிழல்தேடி அமர்ந்திருக்கும்
நண்பகல் வேளைகளில்
சுட்டெரிக்கும் வெயிலின்
தீ சுவாலை சுவடுகளால்
தீண்டப்படுகின்ற சுணக்கத்தை
என்னுள் உணர்கிறேன்
குளிரூட்டப்பட்ட அறையின்
தனிமையில் நான்!
- இரா.ச.இமலாதித்தன்
இந்த கிறுக்கல்கள் திண்ணையிலும் வெளிவந்துள்ளது.