
ஒருகாலத்தில் ஒற்றை வார்த்தையே
உச்சரித்து சொல்ல தடுமாறி
உளறிய என் நாக்கும்
இன்றைய நாட்களில்
தடித்தெழுந்து வெளியே
தாறுமாறாய் வெடித்து சிதறும்
வார்த்தைகளால் யாவும்
உன்மனதை
சுக்குநூறாய் உடைக்கின்ற வேளையிலும்
ஒற்றை சொல்கூட உதிர்க்காமல்
ஊமையாகவே இருந்துவிடுகிறாயே
உன் மௌனமும்
எனக்கான மரண தண்டனை தான்!
நான் கோபப்பட்டு
கடுஞ் சொற்களை தொடுத்து பேசியும்
கண்டதை யெல்லாம் எடுத்து வீசியும் கூட
என்மீது மட்டுமேன்
உனக்கான எதிர்ப்புகள்
துளிகூட இல்லையே!
உன் துக்கம் பலவற்றில்
நான் பங்குகொள்ளவில்லை
நீ கதறி அழுத பல பொழுதுகளில்
நான் கண்டுகொள்ளவேயில்லை
அப்பறம் நீ மட்டுமெப்படி
என் சிறு துளி கண்ணீருக்கும்
படபடத்து ஒப்பாரி வைக்கிறாய்?
நான் வெற்றிபெற்ற வேளைகளில்
என்னை மட்டும்
காரணமாக சொன்னாய்;
நான் தோல்வியுற்ற வேளைகளில்
வேறு யாரைவது தேடிபிடித்து
அவர்கள் மீதல்லவா
நீ பழிபோடுகிறாய்!
உன்னை சிரிக்க வைக்க
எந்தொரு சிறு முயற்சி கூட
நான் எடுக்க வில்லையே
ஆனாலும்
நான் சந்தோசபட்டால்
உனக்கெப்படி முகமலர்ந்த சிரிப்பு
முந்திக்கொண்டு வருகிறது?
ஊருக்கு வரும்போது
பார்ப்பவனெல்லாம்
'உடம்பு ஏறிவிட்ட'தென்று
வினவியதை கேட்டுவிட்டு
வீட்டுக்குள் உள்னுளைந்துடன்
'இப்படி இளைத்துவிட்டாயே?’யென்ற
உன் வாய்மொழி கேட்ட பின்னே
சற்று குழம்பிவிட்டு
நீயும் பொய் சொல்லுவாயோ
என்ற சிந்தனையில்
மூழ்கி போய்விடுகிறேன்
உன் பார்வையில் மட்டும்
என்னுடல் தேய்பிறை போல்
தோன்றுவதன் அர்த்தமென்ன?
'நீ சாப்பிட்டாயா ?’
என்று கேட்குமுன்னே
'சீக்கிரம் வந்து சாப்பிட’ சொல்லி
தொந்தரவு செய்கிறாயே
உனக்கு பசியென்ற ஒன்றை
இறைவன் கொடுக்கவேயில்லையா?
நான் உண்டுவிட்டால்
உன்பசியும் மறைந்துவிடுகிறது
உன் மனதும் நிறைந்துவிடுகிறது
இந்த உண்மை எந்தொரு அறிவியலிலும்
இதுவரையிலும் நிரூபிக்கப்பட வில்லையே!
உன் பாசம் என்னவென்பதை
அறிந்தபோதும்
மழுங்கிப்போன என் நெஞ்சம்
உன்னிடம் நேசத்தை
வெளிக்காட்ட தெரியாமல்
தொலைந்து கொண்டிருக்கிறதே!
அம்மாவென்ற
ஒற்றை வார்த்தையில்
இவ்வுலகே உள்ளடங்கி போய்விட்டதென்ற
உண்மையை உணர்ந்துவிட்ட
இந்நேரத்தில்
உன்காலடிதொட்டு
தலைவணங்குகிறேன் தாயே!
- இரா.ச.இமலாதித்தன்
இந்த கிறுக்கல்கள் யூத்புல் விகடன் இணையதளத்திலும் வெளிவந்துள்ளது.

கனரக ஆயுதங்கள் பலகொண்டு
அய்யோவென்ற அலறலும்
அழுகுரலும் கொடுத்திட்ட
எந்தமிழினம் அனைத்தையும்
கணப்பொழுதில்
உயிரோடே மண்ணோடு
மரணக்குழியில் புதைத்தவனை
தோலுரிக்க உன் தோள்கொடு என் தோழா!
வீடற்று வீதியற்று நாடற்ற நாடோடிகளாய்
நடமாடக்கூட முடியாமல் -
எந்தமிழன் நாதியற்று
முட்கம்பிகளுக்குள் மூச்சை மட்டும்
முழுவேளை உணவாக உட்கொண்டு
உயிர் மட்டும் உள்ளவனாய்
முடங்கி கிடப்பவனை முடுக்கிவிட
முயற்சியெடு என் தோழா!
உணர்வற்ற நம்மக்கள்
உணர்ச்சியற்ற உன்தோள்கள்
இவ்விரண்டும் புத்துணர்ச்சிபெற
புதுவழி கண்டிடு என் தோழா!
வன்மம் கொண்ட வன்முறை வெறியனை
இல்லாதழித்தொழித்து
என்மக்களின் துயரங்களை துடைத்தழிக்க
விருட்சமாய் ஒன்றிணைய
உன் இருகரம் கொடுத்திடு என் தோழா!
என் தமிழினம் கொன்று சுகம் காணும்
பிணந்தின்னி இனவெறி கூட்டத்தை
இனங்கண்டு பகை முறிக்க
புறப்படு என் தோழா!
புரிதல் கொண்டு புரட்சிகள் வெடிக்கும்
அதுவரை புலிகளாய் பதுங்கி
பொறுத்திரு என் தோழா...
பாயும் நாட்கள் வெகு தூரமில்லை
அப்போது களத்திற்கு
போராட வந்திடு என் தோழா!
- இரா.ச.இமலாதித்தன்
காலைபொழுதில் தோளில் துண்டோடு
வாயில் வேப்பங்குச்சியுமாய்
கொல்லைபுற வாசல்வழி
வயல்வெளி ஒத்தையடி பாதையில்
எட்டி நிற்கும் குட்டி முட்களை மிதித்துகொண்டே
ஆற்றங்கரை பாதையோர
கருவைமர கிளைகளின் கீரல்களோடு
குறுக்கே வந்தவரையும்
சிலநேரம் குப்புற தள்ளிவிட்டு குளிக்க ஓடிய
மின்னல்நேர தருணங்களும்...
சீரும் ஆற்றின் படித்துறை ஓரமாய்
பாய்ந்து குதித்து கீறும் மணலிடையே
பாதங்கள் படிய நின்று மூச்சை இடைநிறுத்தி
பலமணிநேரம் மூழ்கி கிடந்து
நெஞ்சளவு நீரினுள் நீச்சலோடு நிலைத்து
லயித்து கிடந்ததும்...
வற்றிய ஆற்றில் இடுப்பளவு நீரினுள்ளே
கருத்த கிடந்த பல ஒருரூபாய் நாணயங்களை
கண்டெடுத்து களிப்புற்றதும்...
பாசி படிந்த படிகளை எண்ணி
என் பெயரையும் எழுதி பார்த்து மகிழ்ந்ததும்...
கிளிஞ்சல் எடுத்து நீரை கீறி தட்டுக்கல் விட்டு
தம்பட்டம் அடித்து சிரித்ததும்...
துண்டினாலே வலைவீசி துள்ளிக்குதித்த
சின்னஞ்சிறு மீன்களையெல்லாம்
அள்ளியெடுத்த அந்த காலை பொழுதுகளும்...
ஒய்யாரமாய் ஊர்சுற்றி
பனை இலந்தை ஈச்ச மரம் தேடியலைந்த
அந்த மதியநேர பொழுதுகளும்...
ஆத்தங்கரையோர ஆலமர நிழலில்
பாலத்து மதில்மேல பலமணிநேரம் அமர்ந்து
ஊர்கதை பேசி திரிந்த அந்த மாலை பொழுதுகளும்...
இதுபோல் இன்னும்பல இனியபொழுதுகள்
இனிவொரு நாளும் திரும்பவும் வந்துவிடுமா?
- இரா.ச.இமலாதித்தன்
-001.-
தமிழ்மொழி
செம்மொழி என்பதை
உணர்ந்தேன்
உன்
செவ்வாய் வழி
தெறித்து விழுந்த
வார்த்தைகளால்!
-002.-
உன்
இதழ்களால் வெளிப்படும்
வார்த்தைகள் கேட்டு
உதிர்ந்து விட்ட பூக்களும்
உயிர்கொள்கின்றன
நீ அறிவியலின் புதுப்பரிமாணம்!
- இரா.ச.இமலாதித்தன்
_
-001-
விடிகாலை பொழுதுகளில்
சாலையோரம்
நீ பயணிக்கும் நேரமெல்லாம்
சூரியனும் விரைவாகவே
எழுந்து விடுகிறது
உன்னை தரிசிப்பதற்காக!
-002-
மாலை பொழுதில்
உன்புன்னைகைக் கண்டு
நிலவுகூட சற்றுதடுமாறுகிறது
எனக்கு போட்டியாக
இவள் யாரென்று!
-003-
சூரிய உதயத்தை
உன் முகத்திலேயே
கண்டுவிடுகிறேன்
இரு புருவ மத்தியில்
பொட்டாக...!
-004-
நீ சிரிக்கின்றபோதெல்லாம்
நினைத்துகொள்வேன்
என்னைப்போல இன்னும்
எத்தனை பேரை பைத்தியமாக்க
முயற்சித்தாயென்று...!
-005-
உன்னால் மட்டும்
எப்படி சாத்தியமாகிறது
ஆயுதமே இல்லாமல்
கண்களுக்குள் ஊடுருவி
கனத்த என் நெஞ்சை
கவர்ந்திழுக்க!
-006-
உன் இருவிழி
தரிசனம் கிடைக்காத நாட்களில்
பட்டினியாகவேகிடக்கிறது
என் நெஞ்சம்...!-007-
நீ கோபப்படும் நேரங்களில்
என்னை பார்த்து சிரிக்கிறது
நீ புன்னகைக்கும் நேரங்களில்
என்னை பார்த்து சண்டையிடுகிறது
உன் விழிகளுக்கும் இதழ்களுக்கும்
என்னவொரு முரண்பாடு!
- இரா.ச.இமலாதித்தன்
-001-
காலைப்பொழுது கடந்தபின்னும்
சாலையோர பூக்களெல்லாம்
மலராமலே காத்துகிடக்கிறது
உன் வருகைக்காக!
-002-
உன்னை கண்டபின்தான்
சின்னஞ்சிறு வண்ணப்பூக்களும்
புன்னகையை சிதறவிடுகிறது
என்னைப்போலவே!
-003-
உன்னை காணாத
நாட்களெல்லாம்
என் நாட்காட்டியில்
முடியுறாமலே
முழுமையற்று கிடக்கின்றன
நாட்கள் அனைத்தும்!
-004-
நீ என்னை
கடந்து செல்லும்
நேரமெல்லாம்
என் கடிகார முட்களும்
கண்ணடித்து சிரிக்கின்றன
வந்துவிட்டாள் தேவதையென்று!
-005-
நீ
யாரென்றே தெரியவில்லை
இருந்தாலும்
உன்னை நினைத்தே
காகிதங்களில்
கிறுக்கிக் கொண்டிருந்தேன்
கவிதை என்றார்கள்!
-006-
உறங்கா இரவுகளில்
உன்னிடமே
பேசிக்கொண்டு இருக்கிறேன்
படுக்கையறையில்
தன்னந்தனியாய்!
- இரா.ச.இமலாதித்தன்

-001-
அலைகள் கூட
என்னிடம் கேட்குதடி...
உன்னவள் எங்கென்று ?
எப்படி சொல்ல
நீ இன்னொருவனுக்கு
மனைவியானதை...!
-002-
என்னைபோல் அலைகளும்
உன் பெயரை உச்சரித்துக்கொண்டே
நீ நின்ற இடத்தைத்
தொட்டுவிட்டு செல்கிறதே
ஏன்?
என்னிடம் சொன்னதுபோல்
அலைகளிடமும் சொல்லிவிட்டாயா
காதலிக்கிறேனென்று!
-003-
அன்பே நீயும்
பங்குசந்தை போலத்தான்
நேற்று
சந்தோசப்பட வைத்தாய்
இன்று
சங்கடப்பட வைக்கிறாய்!
-004-
நாம் இருவரும்
கைகோர்க்காமல்
கடற்கரையில்
கடந்துசெல்லும்
தருணங்களில்
அலைகள் கூட
உள்வாங்கி கொள்கிறது!
- இரா.ச.இமலாதித்தன்