கல்வி!




வறட்டு கெளரவத்திற்காகவும்,
ஊர் பெருமைக்காவும்,
சுய தம்பட்டத்திற்காகவும்,
எத்தனையோ ஆயிரங்களை செலவழித்து
மெட்ரிக்குலேசன் கான்வென்ட் பள்ளிகளில்
எல்.கே.ஜி. என்ற மூன்றெழுத்தை படிக்க வைக்க
முண்டியடித்து சேர்க்க துடிக்கும்
முட்டாள்களின் பிள்ளைகளை மட்டும்
அறிவாளியாக்கி விடுவார்களா,
பொழுதுபோக்குக்காக
வெறும் சில ஆயிரம்ரூபாய் சம்பளம் வாங்கும்
அரைகுறையாக டிகிரி முடித்த மிஸ்கள்?
பாவம் அந்த பிஞ்சுகள்
காலம் முழுக்க நம்மை போல
குடும்ப பாரம் சுமக்க கூடும்;
இந்த மூன்று வருட பால்யத்தையாவது
அவர்களுக்காக அனுபவிக்க விடுங்கள்
சுமைகள் மறந்து சுகமாய் கொஞ்சம்
வாழ்ந்து பார்க்கட்டும்!

- இரா.ச.இமலாதித்தன்

விதைகளெல்லாம் விருட்சமாகும்!



முப்படைகளோடு களமாடியும்
முதுகோரம் துரோகத்தின் உச்சம்;
எதிரேழு நாடுகளின் சூழ்ச்சியால்
முடக்கப்பட்ட முள்ளிவாய்க்கால்;
இனவழிப்பின் அடையாளமாய்
இங்கே நினைவு முற்றம்;
மெளனித்திருக்கும் ஆயுதங்களால்
உளவியல் தாக்குதலில்
வற்றி போனது நந்திக்கடல்;
காரிருளில் நட்சத்திரங்களாக
கரும்புலிகளின் காட்சிகளுக்கிடையே
நிச்சயமொரு நாள்
விதைகளெல்லாம் விழித்தெழுந்து
திரிகோணமலையெங்கும்
விருட்சங்களாக வளர்ந்து நிற்கும்!

- இரா.ச. இமலாதித்தன்


(எங்கள் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்கிய ஐரோப்பிய ஒன்றியத்திற்கு நன்றி!)

நானும் நீ!




இத்தனை வருடங்களில்
எத்தனை முறை இதே தேதியை
கிழித்தேனென தெரியவில்லை;
பனிரெண்டு எண்களுக்குள்ளான
நெடுந்தூர ஓட்டக்களத்தில்
ஆரம்பித்த இடம் தெரியாமல்
ஆரம் போல சுற்றிக்கொண்டிருக்கும்
கடிகார முட்களோடு முட்டி மோதி
கோடிக்கணக்கான நாழிகைகளை
என்னுள் விழுங்கிருக்கிறேன்;
இரவும் பகலும் கடந்த
ஒவ்வொரு பொழுதுகளிலும்
ஏதோவொரு கனவுகளோடு
எதையெதையோ தொடர்பு படுத்தி
என்னையே தொலைத்திருக்கிறேன்;
வரையறையற்ற காலமெனும்
நிர்ணயிக்க முடியாத மாயைக்குள்
நிரந்தரமில்லாத இவ்வாழ்க்கைக்காக
யாராகவோ தான் உருமாறி கிடக்கிறேன்;
இவையெல்லாம் நிச்சயம் நானல்ல
முடிவிலியான காலம்
இன்று நானாக இருக்கிறது;
நேற்றோ நாளையோ
நீங்களாக கூட இருக்கலாம்!

- இரா.ச. இமலாதித்தன்

அவனும் நானும்!






















உயிரற்றதாக வரையறுக்கப்பட்ட

எல்லாவற்றிற்குள்ளும்
ஓர் உயிரை உணர்ந்த பின்னால்
ரத்தமும் சதையுமான
துர்நாற்றமடிக்கும் இவ்வுடலிலுள்ள வாலை 
எப்போது தொலைத்தேனென தெரியாமலேயே
தலை வரை நீண்ட முதுகெலும்பிற்குள்
என்னுயிரை தேடி பயணிக்கிறேன்;
இடை மறித்து
அவனென் கண்களை உற்று நோக்கி
ஏதேதோ சொல்கிறான்;
ஒலிக்கு தானே, தேவ பாஷை?
அவனோ ஒளியில் உரையாடுகிறான்;
நான் என்பதை
தேடவா? தொலைக்கவா?யென
அவனிடம் கேட்காமலே
கவனித்தலின் கடைசி புரிதலில்
சட்டென பதிலைச் சொல்லி
கடந்து போகிறான், மீண்டும் என்னுள்;
அவனும் நானும் வேறல்ல தான் போல!

- இரா.ச. இமலாதித்தன்

காதலும் கடந்து போகும்!



உன் பெரிய விழிகளுக்குள் தொலைத்தவற்றை
மீட்டெடுப்பது கொஞ்சம் சிரமமாய் இருக்கிறது;
சிதைக்கப்படாத உன் புருவங்களை போல
படர்ந்து கிடக்கிறது கடந்த கால நினைவுகளெல்லாம்;
என்னுள் ஆழமாக பதிந்து போன
உன் சிரிப்பொலியை ஞாபகப்படுத்துவதற்காகவே
தினமும் யாராவது என்னை கடந்து போகிறார்கள்;
உன் உருவத்தை போன்ற யாரை பார்த்தாலும்
சட்டெனெ படபடக்கிறது என்னுடல்;
அன்பென்ற ஒற்றைப்புள்ளியில் இணைந்திருந்த
ஆயிர கணக்கான நாட்கெளெல்லாம்
நொடிப்பொழுதில் கிழித்தெறியப்பட்டது
உன் குடும்பத்தினரின் நாட்காட்டியில்;
இது காதல் தோல்வியல்ல
என்னைவிட நீ அதிகமாய் எதிர்பார்த்த
நம்மிருவரின் திருமணத்திற்கு பின்பான
எதிர்கால வாழ்வியலின் தோல்வி;
என்றோ பிறக்க போகும் நம் குழந்தைக்கு
செந்தமிழில் பெயரை தேர்ந்தெடுக்கச் சொல்லி
ஒவ்வொரு நாளும் வற்புறுத்தி கொண்டிருந்தாய்;
எத்தனையோ சின்னச்சின்ன விசயங்களில்
திருமணத்திற்கு பிறகான நாட்களை
எப்படி வாழவேண்டுமென்று
கற்பனையால் கணக்கிட்டு வைத்திருந்தாய்;
இப்படி எத்தனையோ கனவுகளை கலைத்துவிட்டு
 நீயோ வேறு யாருடனோ  மணமுடித்து
வாழ தொடங்கி விட்டாய், குடும்பச்சூழலென்று;
நனோ மறக்கவியலா உன் நினைவுகளை சுமந்து
அன்பளிப்பாய் நீ கொடுத்த பெருஞ்சோகம் மறைத்து
முன்பை விட இன்னும் அதிகமாக சிரித்துக்கொண்டே
நடிக்க பழகி கொண்டிருக்கிறேன் - இந்த
காதலும் கடந்து போகின்ற அந்த நாட்களுக்காக!

- இரா.ச.இமலாதித்தன்

புன்னகை பூவே!



பெண்ணின் புன்னகை பற்றி வர்ணித்த
எத்தனையோ கவிஞர்களின்
வார்த்தைகளெல்லாம் உயர்வுநவிற்சி புனைவென்று
கடந்து சென்று கொண்டிருந்த ஏதோவொரு நாளில்
என் கடந்த கால எண்ணங்களையெல்லாம்
தொலைய வைப்பதற்காகவே
நீ சிரித்து தொலைத்து விட்டாய்;
உதடுகளுக்கும் பற்களுக்கும் போட்டியாக
கண்களும் சிரித்து கொண்டிருக்கும் - அந்த
நிசப்தமான பெரிய புன்னகையை கண்ட பிறகே
என் கண்களிரண்டும் மோட்சமடைந்திருக்க கூடும்;
உன் சிரிப்பினில் எத்தனை பேரின் உடல்கள்
மீண்டும் உயிர்த்தெழுந்ததென தெரியவில்லை;
குறைந்த பட்சம் என்னருகிலாவது இனி
அந்த மந்திரப்புன்னகையை சிதற விடாமலிரு
ஏற்கனவே சின்னாபின்னமாகித்தான் கிடக்கிறது
இந்த சின்னஞ்சிறு மனது!

- இரா.ச.இமலாதித்தன்

மெல்லத் தொலைகிறேன்!


















-01-

நமக்கென ஓர் உலகை
இப்பிரபஞ்சத்தில் உருவாக்கி கொள்ள
இறைவன் எனக்கொரு வரமொன்றை தந்துவிட்டால்,
அவ்வுலகையே
அன்பால் ஆட்சி செய்யும் பேரரசி நீ தான்!


-02-

தொலைவில் இதழ்கள் புன்னகைப்பதும்,
அருகில் விழிகள் புன்னகைப்பதும்,
இதுபோலவே கடக்கிறது
நம் பலமணிநேர உரையாடல்,
ஓரிரு காதல்மொழி வார்த்தைகளால்!

-03-

வறண்ட நிலத்தில் மண்வாசம் வீசும்
கடும் வெயில் கால மழை போலவே,
உன் பார்வையால்
சில்லென தென்றலை தான் வீசி போகிறாய்,
புயலடித்து கிடக்கிறது மனது!

-04-

உன் கண்ணிசைவுக்காக
காத்திருக்கும் என்னுயிரும்,
நீ உதிர்க்கும் புன்னகையால்
பிரபஞ்சத்தில் பெருவெடிப்பை உருவாக்கி
நமக்கான புதுபூமியை படைக்கிறது!

-05-

உன் காதோரம் எச்சில் சிதற
முத்தமிட்டு கதை பேசிக்கொண்டிருக்கிறேன்;
நீ சிணுங்கும் அந்த நொடிகளில்
காதோரமடல்களை கடித்து
உன்னை திண்ண முயல்கிறேன்;
நீயோ என்னை கொல்கிறாய்!

- இரா.ச.இமலாதித்தன்

மெல்லிய புன்னகையில்!





-01-

உன் மூச்சுக்காற்று கலந்த அரவணைப்பில்
எனக்கான ஓர் உலகம் சுழலத்தொடங்கி
உன்னுள் அடங்கும்;
இனி நமக்கான இந்த பிரபஞ்சமே
சிறுதுளியாய் மாறிப்போகும்!

-02-

வாழ்நாளெல்லாம்
உன் கூந்தலை என் தலையணையாக்கி
தூக்கம் தொலைத்த இரவுகளில்
உன் கூந்தலுக்குள்
என் மூச்சுக்காற்றை வைத்திருக்க ஆசை!

-03-

உதடுகள் உரசாததால்
உரையாடல் ஏதுமில்லை;
ஆனால் தோள்கள் இரண்டும் 
அருகருகே உரசாமலேயே 
பல கதைகள் பேசிக்கொண்டிருக்கின்றன,
மெளனமாய் என்னருகில் அவள்!

-04-

உன் கண்ணிசைவுகளுக்காக காத்திருக்கும்
என் உயிர் மொத்தமும்,
நீ உதிர்க்கும் மெல்லிய புன்னகையால்
ஆயிரம் ஒளியாண்டை
ஒருநொடியில் கடந்து விடுகிறது!

-05-

தனித்தனியான நான் என்பதே
நம்முள் இருப்பதாய்
எனக்கு இதுவரை நினைவிலில்லை;
என்னைவிட உன்னையே
நானாக நினைத்திருக்கிறேன்.
நீ வேறு யாரோயல்ல;
நான் தான்!

- இரா.ச.இமலாதித்தன்

என் பிரபஞ்சமாகிறாய்!
























-01-

தினமும் எத்தனை பெண்களை கடந்தாலும்
நினைவுகளில் நிற்பதில்லை;
பாவம், அவர்களுக்கும் கொஞ்சம் இடம் கொடு;
என்னுள் நீ மட்டுமே ஆக்கிரமித்து விட்டாய்!

-02-

நீ என்னோடு இல்லாத போது
சிலுவையில் அறையப்படுகிறேன்.
நீ அருகில் இருக்கையில் உயிர்த்தெழுகிறேன்.
நான் கடவுளல்ல;
ஆனால் நீயே எல்லாமுமாகிவிட்டாய்!

-03-

என் மடி மீது சாய்ந்து
மெளன புன்னைகையில்
பல கதைகள் பேசி என்னை பார்க்கிறாய்;
நான்கு யுகத்தை நொடியில் கடந்து
உன்னுள் தொலைகிறேன்
நீயே என் பிரபஞ்சமாகிறாய்!

-04-

உன்னாலேயே குழம்பி நிற்கிறேன்;
நீயே தெளிவுற செய்கிறாய்.
என்னுளேயே கடந்து தவிக்கிறேன்;
நீயே மீட்கிறாய்;
இது உளியின் வலி தாங்கும்
சிலையின் வேதனை!

-05-

என் தோள் சாய்ந்து நீ உறங்கும்போது,
உன் நெடுந்கூந்தலுக்குள் முகம் பதித்து
நான் தொலைந்து போகிறேன்.
மீட்காதே;
உன்னுள்ளேயே தொலைந்து விடுகிறேன்!

- இரா.ச.இமலாதித்தன்