அழகிய வான் மேகம்!



வானில் ஓர் அழகிய ஓவியம்
மேகத்தூரிகையால் தீட்டப்பட்டு
ஒருசில நொடிகளுக்குள்ளேயே
அது களையவும் ஆயத்தமாகிறது;
கிழக்கின் கீழிருந்து முளைத்த
ஆதித்த ஒளிகற்றையும் மேல் செல்ல
வான்மரத்தின் உச்சியடைந்த நாழிகையில்
மேற்கு நோக்கி பயணப்பட எத்தனித்து
நாளைய வெளிச்சத்தின் அறுவடைக்காக
அது விதையாய் விழுந்துகொண்டிருந்தது;
வெண்மஞ்சள் வண்ணங்களில் இருள்சூழ
இமைகள் போர்த்திய விழிகள்போல
இரவும் மெதுவாய் உலகில் எட்டிப்பார்த்தது;
தங்களுக்குள்ளேயே யார் அழகென்று
நட்சத்திரங்கள் யுத்தமிட்டுகொண்டிருக்க
நிலவு வந்தவுடன் இமைகள் திறந்த விழிகளாய்
வான்வெளியில் வெளிச்சம் படர்ந்ததும்
ஒருவழியாய் அழகுயாரென்ற போட்டியில்
வழமைபோல நிலவே வாகை சூட
நிசப்பதமான நீண்டதொரு பொழுதில்
நட்சத்திரங்களோடு நிலவும்
அழகாய் உறங்க தொடங்கியது

அவளைப்போலவே!

- இரா.ச.இமலாதித்தன்

காதல் கொஞ்சம்!



--001--

நாற்பது மைல்தூர பேருந்து பயணத்தின்
அன்றைய தருணங்களெல்லாம்
நான்கே நொடிகளில்
கடந்திருப்பதாய் உணர்ந்திருந்தும்
இப்போதைய நான்கு மைல்தூர பயணங்கள்
ஒரு நாளையே விழுங்கிக்கொண்டிருக்கிறது
அருகில் அவளில்லை!

--002--

ஒவ்வொரு பேருந்து பயணங்களிலும்
ஏதோவொரு இருக்கைக்கருகில்
எழுதப்பட்டிருந்த காதலர் பெயர்கள்
சட்டென்று பிம்பமாய் வெளிப்பட்டு
உருமாறி இடம்பெயர்ந்திருந்தது
என்பெயரோடு உன்பெயராய்!
 

--003--

கடவுளிடம் விண்ணப்பித்திருந்தேன்
வருங்கால மனைவி யாரென்று;
பதில் வந்தது நட்சத்திரங்களாய்...
வியந்துபோனேன்;
என் கடவுச்சொல் அவளது பெயரென்பதால்!

- இரா.ச.இமலாதித்தன்

என்னைத்தேடிய நான்!



நொடிகளை கொன்ற நிமிடங்களெல்லாம்
சட்டென்று கடந்து போகும் நாழிகைக்குள்
தொலைத்த வருடங்களை தேடிக்கொண்டிருந்தது;
நாட்களோடு மாதமாய் உருமாறிப்போன
வருடங்களும் இலக்கேதுமில்லாமல்
எங்கயோ விரைந்து கொண்டிருந்தது;
நீண்ட உறக்கத்திற்கு நடுவே கனவுகளாக
உயிர் ரகசியமும் தோன்றி மறைகிறது;
பிறப்புக்கும் இறப்புக்கும் இடையிலிந்த
சின்னஞ்சிறு பயணத்தின் சுவடுகள் யாவும்
ஏதோவொரு வரலாறாக்கப்படுவதற்காகவே
உறக்கத்திலேயே கருவாக உட்புகுந்து
உடலாக உயிரோடும் உறவாடிக்கொண்டிருந்தது;
விழிப்புகளுக்கு அப்பால் நேர்ந்ததையுணர
விழிகளுக்குள்ளே காத்திருந்த ஏக்கத்தோடு
அழியும் உடலை அறிவு ஆயத்தபடுத்தியது;
முடிவிலியாய் நீண்டுக்கொண்டிருக்கும்
அழிவில்லா ஒன்றை எதுவென யூகிக்க முடியாமல்
பயணமும் தொடர்ந்துகொண்டேயிருக்கிறது
இந்த உடலுக்குள் நான் யாரென்ற தேடல்களோடு!

- இரா.ச.இமலாதித்தன்


இந்த கிறுக்கல்கள் வல்லமை மின்னிதழிலும் பிரசுரமாகியுள்ளது.

கலாய்த்தல் திணை!



--001--

நீ மட்டும்தான்
அழகென்று சொன்னதும்
சிரித்தாள்;
நானும் பதிலாய் சிரித்தேன்
சொன்னது பொய் என்பதால்!

--002--

நட்பா? காதலா?
எது பெரியது என்றாள்;
காதலியின் நட்பென்றேன்...
கட்டியணைத்தாள்;
கழண்டு கொண்டேன்
நண்பனாகவே!

--003--

தேவதை நீ யென்றதும்
பறக்க ஆயத்தமானாள்
வரம் கொடுப்பது மட்டுமே
தேவதைக்கு அழகென்றேன்;
என் பணம் தப்பித்தது!

--004--

அடிக்கடி உன் நினைவிலேயே
அலுவல்களை மறந்துவிட்டதாய்
அவளிடம் சொன்னேன்...
ம்ம்ம் என்றாள்;
உன்னையும் ஒருநாள் என்றேன்
புரியவில்லை அவளுக்கு!

--005--

நம் முதல் சந்திப்பு
நினைவிருக்கிறதா என்றாள்;
உன் தோழியோடு
உன்னை சந்தித்ததாய் சொன்னேன்..
ஆச்சரியத்தோடு
அந்த அளவுக்கு பிடிக்குமா என்றாள்;
தோழியை பிடிக்குமென்றேன்!

- இரா.ச.இமலாதித்தன்



இது யார் மனதையும் காயப்படுத்துவதற்காக அல்ல; கலாய்ப்பதற்காக மட்டுமே!

காதல் தேவதை!



-001-

பறவைக்கு மட்டும்தான்
சிறகுகள் உண்டா என்றாள்;
தேவதைக்கும் உண்டு
உன்னைபோன்ற சிலர்
விதிவிலக்கென்றேன்;
கேட்காமலேயே கிடைத்தது!

-002-

மின்மடலின் கடவுச்சொல்
என்னவென்றாள்;
தேவதை என்றேன்...
என்னென்னமோ
யோசித்துக்கொண்டிருந்தாள்
அவளது பெயரை மறந்துவிட்டு!
 

-003-

காதல் என்னவென்றாள்
என்னை நீ
புரிந்துகொள்ளென்றேன்
இன்னும் கிடைக்கவில்லை
அவளுக்கான பதில்!

-004-

நமக்குள் நட்பு
எப்படி உருவானதென்றாள்
சிரித்தேன்;
மறந்துவிட்டதாய் சொல்லி
நினைவுப் படுத்தினாள்;
மறுமுறையும் சிரித்தேன்
மீண்டுமொருநாள் நினைவுபடுத்த
புதுக்காதல் இருப்பதால்!

- இரா.ச.இமலாதித்தன்

நடுநிசி நிகழ்வுகள்!



ஏதோவொரு இலக்கை நோக்கிய
ஆழ்ந்த இரவின் கரங்கள்
வெகுதொலைவில் நீண்டு கொண்டிருக்கிறது...
கண்களுக்குள் அகப்படும் உருவங்கள்
தனக்கான அடையாளங்களை உதறிக்கொண்டு
அமீபாவாய் உருமாற ஆயத்தமானது;
செப்பனிடாத குறுஞ்சாலை நடுவே
தென்பட்ட பள்ளங்களிலெல்லாம்
தேங்கி நின்ற தண்ணீருக்குள்
நிலவும் நீந்திக் கொண்டிருந்தது;
வெயிலின் தாக்கம் அனைத்தையும்
வெகுநேரமாய் உள்வாங்கிக்கொண்டிருந்த
சாலையோர மரங்களனைத்தும்
சற்றுநேரம் உறங்கிக்கொண்டிருந்தன;
பலவருடங்களாய் பூமியில் சேமிக்கப்பட்ட
புதையலின் குவியல்கள் சுரண்டப்பட்டு
வறண்டு கிடந்த ஆற்றின் நடுவே
அடையாளங்களாய் காட்சிக்கு விடப்பட்டிருந்தன;
உறக்கம் தொலைத்த ஒவ்வொரு இரவுக்குள்ளும்
நாய்களின் கூச்சலுக்கிடையே குறட்டை சத்தங்களும்
நிசப்த நாழிகையின் உயிர்நாடியை
நிறுத்த முயல்கின்றன;
இப்படி ஏதோவொரு நிகழ்வுகள்
நடுநிசி பொழுதுகளில் பயணிக்கும்
எல்லா நாட்களிலும்
கடந்து மறைகின்றன நாளைய விடியலோடு!

- இரா.ச.இமலாதித்தன்


இந்த கிறுக்கல்கள் அதீதம் இணையத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.

மரணங்கள் முடிவதில்லை!


 

உன்னைவிட்டு பிரியப்போவதாய்
உரையாடிக்கொண்டிருக்கும் வேளையில்
சட்டென்று சிலிர்த்துக்கொண்டு
மறுமொழி ஏதும் சொல்லாமல்
மௌனத்தை மட்டுமே
முழுவதுமாய் பரவச்செய்து
புன்னகையை தவழ விட்டதும்
குழம்பி நிற்கிறது உடல்;
பிரிதலை ஏன் சொன்னோமென்று
உடனடியாய் தன்னிலை மாறுதலாக்கி
மௌனத்திலேயே லயித்திருக்க முடிவுசெய்து
தன்னைத்தானே ஆசுவாசப்படுத்தி
சூழ்ந்த அமைதியை கலைக்காமல்
ஆழ்ந்து நீடித்திருந்தது உயிர்;

கடைசிநேர பரிவர்த்தனையாய்
ஏதேதோ செய்யலாமென முயன்றும்
தோல்வியடையப்போவதை
உணர்ந்திருந்த உடலும்
இத்தனை நாட்களாய்
உடன்பிறப்பாய் உள்ளிருந்த
உறவின் தவக்காலம் முடிந்து
பயணப்பட ஆயத்தாமாயிருந்த
அழிவில்லா ஆன்மாவை 

வழியனுப்பி வைத்தது
முடிவில்லா மரணத்தால்!


- இரா.ச.இமலாதித்தன்

சாதிப்பிழை!



சாதிகள் இல்லையென்று
எழுத்துகளால் உரைத்தவனை
கவிஞன் என்றான்;
சாதிமத பேதம் இல்லையென்று
மேடையில் முழங்கியவனை
தலைவன் என்றான்;
சாதீய மாயையென்ற
சமுதாயப்பிழை உருவாக
கருவானவனை மட்டுமேன்
இறைவன் என்றான்?
இந்தகேள்விகளோடே
தினந்தோறும் நுழைகின்றான்
கோயிலுக்குள் அவன்!

- இரா.ச.இமலாதித்தன்

உடன் பிறப்பே!




செந்தமிழென்றாய்
தன்மக்கள் நீயென்றாய்
என் உடன்பிறப்பே வாவென்றாய்
எப்போதும் நீ மட்டுமே வென்றாய்;
மொழிதான் உன் மூச்சென்றாய்
மூச்சை திணறடித்து
மூழ்கி கிடப்பதுவும் பிடிக்குமென்றாய்;
பகுத்தறிவே தன்மானம் காக்கின்ற
மேலாடை என்றுரைத்தாய் - இப்போதோ
உள்ளாடையே இல்லாமல்
உல்லாசமாய் இருப்பதுகூட பிடிக்கிறதென்கிறாய்;
வாக்களித்தவர்களுக்காகவே வாழ்கிறேனென்றாய்
தமிழகமே தன் குடும்பமென்றாய்
ஓட்டுக்காகவே நீ உளறிக்கொண்டிருப்பதை
ஒவ்வொரு தேர்தலிலும் வாக்களித்த பின்புதான்
உணர்ந்து கொள்கிறோம் நாங்களும்
உன் குடும்பம் மட்டும் தான்
ஒட்டுமொத்த தமிழகமென்று!

- இரா.ச.இமலாதித்தன்