உன்னோடு உரையாடும்போது!



ஒவ்வொரு நாட்களும்
உன் அழைப்பு வந்தபிறகு தான்
சுழியத்திலிருந்து தொடங்கி
சுழலத் துவங்குகிறது
இருபத்திநாலு மணி நேரத்தின் 

னக்கான கடிகார முட்கள்!

உரையாடலில் கேள்விகள் கேட்பதென்பது
எளிதான போதும்
உன்னிடம் பேசும்போது
வினாக்கள் கூட வெளிவர மறுத்து
உள்ளிருப்பு போராட்டங்கள் நடத்துகின்றன;
நீ கேட்கும் கேள்விகளுக்கு
என்னிடம் விடையில்லை என்பதை
முன்னரே நீ மட்டும் எவ்வாறு அறிந்துவிடுகிறாய்?

அதுதெரியாமலேயே
எங்கேயோ தலைமறைவாய்
ஓடிஒளிந்து கொண்ட உனக்கான பதில்களை
என்னிடம் தேடியலைந்து
விடைகிடைக்காமல் போனதும்
உரசிக் கொள்ளாமல் உறங்கிக் கிடக்கின்றன
என்னிரு உதடுகள்!

பின்பு உளறத்தொடங்கிய உதடுகள்
ஊமையானதை சற்றே உணர்ந்துகொண்டு
இரு உதடுகளும் விழித்து
இதழ்களாய் விரிக்கும்போது
வார்த்தைகள் நொண்டியடித்து
அங்கே ஊனமாய் நிற்கிறது
நம் உரையாடல்!

முடிவிலியாய் நீ
என்னோடு இருப்பாயென்ற
மாயையை உணரமறந்து
அப்புறம்,வேறென்ன, ம்ம்,சொல்லு,சரியாவென்ற
ஐந்து வார்த்தைகளால் நீ உரையாடும்
அந்தவொருசில நாழிகைக்குள்
உன்னுள் உறைந்து போய்விடுகிறேன்
அறிவிலியாய்!

உரையாடி முடித்தபின்
ஒவ்வொரு நிமிடங்களில்
புதைக்கப்பட்ட எந்தவொரு
நொடியும் முடியும் முன்னரே
உடனடியாய் நிலைகொண்டு
நிற்கின்ற உன்நினைவால்
மீண்டுமுன் அழைப்பொலியை
எதிர்பார்த்துக் காத்திருக்கும் 
நொடியின் அளவை கோடியாய்ப் பிரித்த
சின்னஞ்சிறு நேரத்திற்குள்ளும்
உணர்கிறேன் என்னுளுள்ள
உன்மீதான கட்டுக்கடங்கா காதலை!

- இரா.ச.இமலாதித்தன்


இந்த கிறுக்கல்களும் தமிழமுதம் இணையதளத்திலும் வெளிவந்துள்ளது.

விழுங்கப்பட்ட அன்பு!


காதலால் நான் உன்னை
மணம் செய்ய முடியாதென்று
பெற்றோரின் குணமறிந்த
முற்போக்கு மூளைக்கு தெரிந்திருந்தும்...
உன்னை மறக்க தவிர்த்து
முண்டியடிக்கும் மனதை மறுத்து
உன்னை மட்டுமே நினைத்து
உயிர் துடிக்க முயலுகின்ற
ஒவ்வொரு நொடிகளுக்குள்ளும்
பலகோடி விதைகளாய்
ஆழ்மனதில் விழுங்கப்படுகிறது
நம்மிருவரின் அன்பு!

விலகிச்சென்ற அன்பால்
சிதைவடைந்த செந்தளிர் நாட்களும்
விளைச்சலாய் வெளிப்பட்டு
விருட்சமாய் வெளிக்கொணரும் காலங்களில்...
தனிமையால் வெறுமை சூழ்ந்து
செழிப்பிழந்து செயல்படாமல்
தடுமாறி கிடக்கும்போது
என்குழந்தையின் பெயராய் நீயும்
உன்குழந்தையின் பெயராய் நானும்
அறுவடைசெய்திருப்போம்
விழுங்கப்பட்ட அன்பை!

- இரா.ச.இமலாதித்தன்

திருமண வரவேற்பு!



திருமண வரவேற்பில்
மணமகனிடம் கை குலுக்கி
புகைப்படத்திற்கும் முகம்காட்டி
பரிசொன்றை தந்து
பத்திரமாய் பார்த்துக்கொள்ள
சொல்லிவிட்டு
மணமேடை கீழிறங்கி
இருவிழி கலங்கி நின்றேன்...

எட்டு வருடம் தொட்டுவிட்ட
எங்கள் காதலின் பரிசாய்
வரவேற்பு பத்திரிகையை
எனக்கு தந்துவிட்டு
மணமேடையில் என்னவள் 
மணக்கோலத்தில் இருந்ததைக் கண்டு
அலங்கோலமாய் நான்
அழுதுகொண்டே வெளிசென்றேன்...

நான் பத்திரப்படுத்த சொன்னது
பரிசை அல்ல காதலியையென்று
மாப்பிளைக்கு தெரியாது...
நான் இன்றும் அவள்தந்த
வரவேற்பு பத்திரிக்கையை
பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேனென்று
என் காதலிக்கும் தெரியாது! 

- இரா.ச.இமலாதித்தன்


இந்த கிறுக்கல்களும்  தமிழமுதம் இணையதளத்திலும் வெளிவந்துள்ளது.

வீட்டில் விருந்தாளி!


நான் துயரப்பட்டநாட்களிளெல்லாம் 
தூரமாய் இருந்துவிட்டு
இன்றோ துக்கம் விசாரிக்க
துடித்துக்கொண்டு வருகிறார்கள்
தூரத்து சொந்தமென...
எப்போதோ ஒருநாள் வந்துபோகும்
உன் அலைபேசி அழைப்பை
இந்த அழையா விருந்தாளிகளுக்காக
துண்டித்து கண்ணீர் வடிக்கிறது
என் கட்டைவிரல்!

 - இரா.ச.இமலாதித்தன்

திருவிழா குழந்தை!


திருவிழாக் கூட்டத்தில்
உனக்கு மட்டுமே பிடித்துப்போன
பொம்மையொன்றை 
என்னை கைக்காட்டிக் கேட்கும்போது
வீட்டில்தான் ஆறேழு வீணாகவே கிடக்குதென்று
வேண்டாமிது என்றுரைத்து
எனக்கு மட்டுமே பிடித்துப்போன ஒன்றை
எடுத்துவந்து நீட்டும்போது
வெடுக்கென்று அதைபிடித்திழுத்து 
கீழே தட்டிவிட்டு சிரிக்கிறாய்
அங்கே குழந்தையாய் நான்!

- இரா.ச.இமலாதித்தன்

தனிமையின் தாகம்!



கண்களுக்கு புலப்படும் எல்லைகளுக்குள்
யாதுமற்ற வெறுமைகளால்
வெறிச்சோடி விரிந்து கிடக்கும்
தரிசுநில வயல்வெளிகளின்
வரப்போர ஒற்றை கருவேலமரத்தின்
நிழல்தேடி அமர்ந்திருக்கும்
நண்பகல் வேளைகளில்
சுட்டெரிக்கும் வெயிலின்
தீ சுவாலை சுவடுகளால்
தீண்டப்படுகின்ற சுணக்கத்தை
என்னுள் உணர்கிறேன்
குளிரூட்டப்பட்ட அறையின்
தனிமையில் நான்!

- இரா.ச.இமலாதித்தன்


 இந்த கிறுக்கல்கள் திண்ணையிலும் வெளிவந்துள்ளது.

கடலோடியின் மரணம்!


காலத்தின் காலடியில்  சிக்கிக்கொண்டு
கடலில் கலக்கத்தோடு கரைதேடியலைந்து
பயணிக்கின்ற தருவாயில்
கலங்கரைவிளக்கத்தின் ஒளிக்கீற்றை 
என்விழிகள்துலாவிக்கொண்டிருக்கின்ற
அந்தவொருசில நாழிகைக்குள்
பாய்மர படகின் துவாரம்வழி
ஓரவஞ்சனையில் ஒய்யாரமாய்  சிரிக்கிறது
நிர்ணயிக்கப்பட்ட என் மரணம்!

- இரா.ச.இமலாதித்தன்

கற்பு!



நகரத்துக் காட்டானின்
காமக் காட்டாற்று வெறியாட்டத்தில்
பறிபோனது
தெருவோரம் குப்பை பொறுக்கும்
சிறுமியின் கற்பு!

சூழ்ச்சி செய்யும்
சூட்சமக்காரர்களால் சூழப்பட்டுள்ள
இந்த  சமுதாயத்தில்
இவன் போன்ற சந்தர்ப்பவாதிகளின்
அற்ப சந்தோசங்களுக்காக
இங்கே சந்திசிரிக்கிறது கற்பு!

சமுதாயத்தின் மீதுள்ள
நம்பிக்கைகளும்
பலநேரங்களில் சூறையாடப்படுவதால்
சூழ்நிலைக் கைதியாய்
கற்பிழந்து நிற்கின்றது மானுடம்!

பணத்திற்காக பள்ளிப்பருவத்திலேயே
வீதிக்கு வரவழைத்த
வறுமை போன்ற சமுதாயப் பிழைகளை
இல்லாதழிக்க 

ஒருமித்த குரலாய் ஒன்றிணைவோம்
மானிடராய்!

 - இரா.ச.இமலாதித்தன்



இந்த கிறுக்கலை பற்றிய விமர்சனத்தை, விமர்சனம் வலைப்பக்கத்திலும் பார்க்கலாம்


மழைக்காலங்களில்!


-001-


மழைக்காலங்களில்
உன்னை தொடாமல்
மண்ணை தொடும் மழைத்துளிகள்
கண்ணீரோடே வழிந்தோடுகிறது
சாலையோர  பாதைகளில்!

-002-

மழைக்காலங்களில்

உன்னை தொட்டுவிட்டு
மண்ணை தொடும் 
மழைதுளிகள்தான் 
மோட்சமடைகிறதாம்
குடையை கொஞ்சம்
தூர வைத்துவிட்டு
தூரலில் உன் முகத்தை காட்டி
எனக்கு செய்த பாவம் போக்க
இதுபோல் புண்ணியங்கள் சில
செய்து விடு!

-003-

மழைக்காலங்களில்
உன்மேல் விழுந்த
ஒருசில மழைத்துளிகளும்
பிரிய மனமில்லாமல்
உன்னை இறுகப்பற்றி கொள்கின்றன
என்னைபோலவே!

-004-

மழைக்காலங்களில்
நீ குடை பிடித்து
மழையில் நடக்கும்போதெல்லாம்
உன்னுள் கூடல் கொள்ள முடியாத
மழைதுளிகளெல்லாம்
கோபித்து கொண்டு சண்டையிடுகிறது
உன் குடையோடு!


- இரா.ச.இமலாதித்தன்


 இந்த கிறுக்கல்கள்  யூத்புல் விகடன்  இணையதளத்திலும் வெளிவந்துள்ளது.

இந்த கிறுக்கல்கள்  தமிழ் ஆதொர்ஸ் இணையதளத்திலும் வெளிவந்துள்ளது.