பூவிதழ்களின் காதல்!


















தன் சுமைகளை குறைத்து
இதழுறிஞ்சி உறவாடும்
காதலின் சூத்திரத்தை
யார் சொல்லித்தந்தது
தேனீக்களுக்கு?
யாராரோ சொன்ன
அன்பும் கடவுள் தான் போல!

---

பூக்களின் மொழிகளை
புரிந்து கொள்ளும்
தேனீக்களின் அறிவில்
ஹார்மோன்களற்ற
சின்னஞ்சிறு காதலே
கலந்திருக்கிறது;
இது அறிவியலில்லை!

---

பல்லுயிர்களின்
உயிர்மூச்சை வாரி வழங்கும்
பெருங்காடுகளை உருவாக்குகின்ற
பூக்களுக்கும்
பட்டாம்பூச்சிக்களுக்குமான
வரம்புகளற்ற காதலை,
ஒவ்வாத உறவென
எதிர்க்க யாருக்கிங்கே
துணிவிருக்கிறது?

---

பூவிதழ்களில் அவிழும்
பிரபஞ்சத் துளிகளை
சேகரித்து வைத்திருக்கிறன
தனக்கானதோர் உலகில்
தேனீக்களெல்லாம்!

---

நாளை அகதியாக்கப்படுவோமென
தெரியாமல்
யாருக்காகவோ சேர்த்து வைக்கும்
கஞ்சனின் பெருஞ்சொத்தை
நினைவுபடுத்துக்கின்றன
தேன்கூடுகள்!

- இரா.ச.இமலாதித்தன்

அவள் நினைவோடு!



பச்சையும், மஞ்சளுமாக
நாளுக்கொரு
வண்ணங்களில் பூத்திருக்கும்
மலர்களின் பெயரை
யோசித்து கொண்டிருந்தேன்;
உன் விரல்களை விட்டு
விலகிய நகங்களில்
பூசப்பட்டிருக்கும் பேரழகிற்கு
என்ன பெயர் வைப்பதென?!

-

இயல்பை தொலைத்த
இவ்வாழ்வே
என் ஊழென தெரியாது;
உன்னிரு விழிகளின்
இமைக்கா நொடிகளில்
ஒவ்வொரு முறையும்
தப்பி பிழைத்து
ஒரேயடியாய்
விழுந்து கிடக்கும்
என் தற்செயல் நிகழ்வுகளை
மீட்டுக்கொடு;
இனியாவது
நானாக இருக்க முயல்கிறேன்!

-

அடிக்கடி அழைத்து பேசாத
நெருங்கிய உறவுகளின்
விடிகாலை
அலைபேசி அழைப்புகள்
ஏற்படுத்தும் பதற்றத்திற்கு

இணையானதொரு நிலையை
உருவாக்கி கொடுக்கிறாய்;
ஒவ்வொரு முறை
நீ என்னிடம் பேசும் பொழுதும்!

-
உன்னிரு பார்வைக்கு
ஆயிரம் கவிதைகள் எழுதலாம்;.
எங்கே விடுகிறாய்?
ஒவ்வொரு முறையும்
பிறப்பெடுத்து இறக்கிறேன்;
உன்னிலிருந்து
தப்பி பிழைப்பதே
பெருந்தவமாய் இருக்கிறது;
எப்படி எழுதி முடிப்பது?

-

வண்ணத்துப்பூச்சிகளின்
மகரந்த தீண்டலில்லாத போது
மிகப்பெரும் வனத்தின்
சின்னஞ்சிறு பூக்களனைத்தும்
பிரபஞ்ச தொடர்பின்றி
வண்ணங்கள் தொலைத்து
தனித்து கிடப்பதை போன்ற
வெறுமையை உணர்கிறேன்
நீ அருகிலில்லாத நாட்களில்!

-

உன் கண் மையில் மையல் கொண்ட
என்னை தொலைத்து
எங்கெங்கோ தேட வைக்கிறாய்,
நீ இருக்கும் திசையே கிழக்கானது;
நம்மிருவருக்குமிடையில்
நீளும் இரவின் வெறுமை போதும்,
ஆதித்த கதிர்களையே
ஆதிக்கம் செலுத்தும் உன்னுலகில்
எனக்கான விடியல் எப்போது?

-
நெற்றியில் பொட்டில்லை,
சூரிய கிரகணமானது;
புருவங்கள் உயர்த்துகிறாய்,
வானவில் இரண்டானது;
கொஞ்சம் முறைக்கிறாய்
குளிர் நிலவும் சுடுகின்றது;
மெல்ல சிரிக்கிறாய்,
நட்சத்திரங்கள் உதிர்கின்றன;
நீ எனக்கான தேவதை,
விலகாமல் அருகிலேயே இரு;
நமக்கானதொரு
புது உலகையே படைக்கிறேன்!

-

உன் தரிசனமற்ற நாட்களில்
போர்க்களத்தின்
இரைச்சலை உணர்த்துகிறது
என் தனிமை;
ஒற்றை நொடியில்
உயிர் கொல்லும் ஆயுதம்
உன்னிரு பார்வைகள்;
உடன்படிக்கையெல்லாம் வேண்டாம்
உயிரையெடுத்து போ
நீயில்லாமல்
அது மட்டும் எதற்கெனக்கு?

-

மிச்சமிருக்கும்
மிகக்குறைந்த அளவிலான
அலைபேசியின் மின்னிருப்பு போல
உன்னை
நினைவுப்படுத்திக்கொண்டே
இருக்கிறது மனது;
தொடர்புகளற்ற தொலைவில்
நீ இருக்கிறாய்!

-

வாயை மூடி
புன்னகைக்க முயல்கிறாய்,
உன்னிரு கண்களோ
அப்பட்டமாய்
சத்தமிட்டு சிரிக்கிறது;
காட்சிப்பிழைக்கு
சாட்சியங்கள் ஏதுமில்லை,
நீ மட்டுமே அங்கிருந்தாய்;
உன் புன்னகைப்புயலில்
சிக்கிக்கொண்ட
என்னை மீட்டெடுத்து
நிவாரணம் கொடு,
கொஞ்சம் பிழைக்கிறேன்!

-

தன் வேர்களையே தேட மறந்த
மரங்களின் கிளைகளில் அமர்ந்து
உயிரை கொத்தி தின்னும்
பெருவெளி பறவைகளின்
கூச்சலிடும் பேரொலிகளுக்கிடையே
அடர்வனத்தின் சிறுவழி பாதை,
வண்ணங்களனைத்தையும் தொலைத்து
வியாபித்திருக்கும் வான்வெளி போல
மனதிற்குள் விரிய தொடங்குகிறது;
புகழெனும் பெரும்போதையில்
என்னைத்தவிர எதையெதையோ
தேடிக்கொண்டிருக்கிறேன்,
முடிவுறா இப்பிரபஞ்ச பயணத்தில்
நானென்பது மட்டுமே அங்கிருக்கிறது!

- இரா.ச. இமலாதித்தன்

சுவரொட்டி!





அரசாங்க மதுக்கடையோரம்
நிறுத்தப்பட்டிருந்த ஸ்ப்ளண்டர் பைக்கில்
’ஏ1பி பாசிடிவ் இரத்தம்
தேவையெனில் தொடர்பு கொள்க’ யென்ற
வாசகத்தின் கீழே கொடுப்பட்ட
பத்தெண்களில் ஏழெண்களில்லை,
கடைசியாக நூற்றி அறுபத்திரெண்டு மட்டும்
அழைக்க மீதமிருந்தது;

அதே பைக்கில் மாட்டிருந்த
வழிந்து நிரம்பிய மைதா வாளியை
கையிலெடுத்த கையோடு
சரட்டென வீறிட்டு சென்றவர்கள்
’தேவி திரையரங்கம்’ அருகிலிருந்த
திருமண மண்டப சுவர்களிலெல்லாம்
‘வாழ்த்தலாம் வாங்க;
அடுத்த மாப்பிள்ளை நாங்க’யென்ற
வாழ்த்து சுவரொட்டிகளை
’மெர்சல்’ நூறாவது நாளில்
ஒட்டிக்கொண்டிருந்தனர்;

நண்பகலில் நடைபெறும் திருமணத்தில்
ஒரே மாதிரியான வேட்டிச்சட்டைகளோடு
ஆண்ட்ராய்டு போன்களில் செல்ஃபி எடுத்து
அட்சதை போடும் நேரத்திலேயும்
‘ஃபேஸ்புக் லைவ்’வில் பரபரப்பாயிருந்தும்
இரவில் தீர்ந்தவற்றை வாங்கிவர
மதுக்கடைக்கு பறந்தனர்
மாப்பிள்ளை தோழர்கள்;

இரவில் ஒட்டியிருந்த
சுவரொட்டிகளையெல்லாம்
பசும்புல் போல பசுக்களனைத்தும்
சுவைத்துண்பதை பார்த்து
அகண்ட காவிரியை வறண்ட காவிரியாக்கிய
அண்டை திராவிட மாநிலமும்,
பசுமை நிலங்களை மீத்தேனால் பாழாக்கிய
பசுக்காவலர்களின் அகண்ட தேசமும்,
நம்மை மட்டுமல்ல,
இம்மண்ணையும் உயிர்களையும்
அடிமைகளாக பழக வைத்திருக்கும்
அரசக் கதைகளையெல்லாம்
தெளிவில்லாத நிலையிலும்
ஓரளவுக்கு புரிந்து கொண்டார்கள்;

கிழித்தெறியப்பட்ட சுவரொட்டியின்
கழுத்தில் மாலையோடு ஜோடியாக இருந்த
தன் நண்பனின் படமிருந்த இடத்தில்
பின்னாலிருந்த யாரோ ஒருவனின்
‘கண்ணீர் அஞ்சலி’ சுவரொட்டியின்
படமும் பெயரும் அமைந்திருந்ததை
கவனிக்க தொடங்கும் வேளையில்
’சீக்கிரம் வாங்கடா,
கடிநெல்வயல் வேம்புடையார் கோவிலுக்கு
போகணுமாம்’ என்ற
மணவறையிலிருந்து வந்த
அலைபேசி அழைப்பால்
அவசர அவசரமாய் பறந்து போனார்கள்;

இதற்கிடையே
பாசக்கார பங்காளிகளின் குரலொலியில்
’கூலிங்கே இல்லையாம் பங்கு?!’
’இருக்கிற டென்சனுக்கு,
ஏதோ ஒன்னு வாங்குங்க பங்கு’
என்ற சோகத்தோடு
முப்பதாம் நாள் காரியத்திற்கு வந்திருந்த
சிவக்குமாரும் எழிலரசும்
அதே சுவரொட்டியை பார்த்து
’அவ இன்னொருத்தனுக்கு
பொண்டாட்டியாவே ஆய்ட்டா;
நம்ம பங்காளியை ஏமாத்துனவ
நல்லாவா இருக்க போறா?’வென
மனம் நிறைய சுமையோடு
மயானக் கரைக்கு செல்லும் நேரத்தில்,

அடுத்த சுவரொட்டியை
அதன்மேல் வேறாரும் ஒட்டும்வரை
இந்த சுவர்களிலாவது
இணைந்திருக்கட்டுமென
பசுக்கள் கூட பசியாறாமல்
காத்திருக்கும் இடைவெளியில்
’பாரத் மாதாகி ஜெ!’ என்ற சுவரொட்டிகள்
அவர்கள் இருவரையும் பிரித்த நொடியில்
அந்த சுவரொட்டியை மட்டும்
ஈரம் காய்வதற்குள் லாவகமாய்
வெடுக்கென கிழித்து திண்றது
கொம்புடைந்த பசுவொன்று!

- இரா.ச. இமலாதித்தன்

ஆதாமும் ஏவாளும்!


















உயிர்களனைத்தும் இல்லாதொழிக்கப்பட்ட
ஓர் ஊழிக்காலத்தில்
எட்டுமாத கர்ப்பிணியின் வயிற்றிலிருந்து
தன்னந்தனியே இவ்வுலகில்
தப்பிப்பிழைத்த குழந்தையொன்று
நூற்றாண்டுகளுக்கு ஒருமுறை வந்துபோகும்
சந்திர கிரகணம் நிகழ்ந்தவொரு நாளில்
இளம்வயது கன்னியாக பூப்பெய்த பொழுதில்
காலமென்ற மாயையை வென்ற
சித்தன் போன்ற தோற்றமுடையவனை கண்டதும்
அலறலும் முனகலும் மெளனித்து
இலக்கணமில்லா மொழியொன்று உருவெடுக்கிறது;
பதிமூன்று ஆண்டுகள் சேகரித்தவற்றையெல்லாம்
வார்த்தைகளின் வழியே கொட்டித்தீர்க்க
வரிகளற்ற புது இலக்கியம்
பிரபஞ்சப் பெருவெளியில் எழுதப்படுகிறது;
பெருங்கோவில்களில் வியாபித்திருக்கும்
யாளிகளின் சிலைகளை பார்ப்பது போல
மிச்சமிருக்கும் செல்பேசி கோபுரங்களை
வியப்புடன் பிரமித்து, அவனிடம் கேட்கிறாள்
இது எந்த மிருகத்தின் கால்களென;
கிரகணத்தில் சிக்கி தவித்த
பிறைநிலவின் ஒளி முழுதும்
அவள் முதுகோரம் படரும் வேளையில்
ஆலமர விழுதோரம் அமர்ந்திருந்தவளில்
கருடன் போன்றதொரு நிழலுக்கருகில்
மண்ணுக்குள் பாதி புதையுண்ட
ஆப்பிள் போனை நோண்டியெடுத்து
ஆதியோகியானவன்
பழங்கதை சொல்லும் நாழிகையில்
ஆதாமாய் அடையாளப்படுகிறான்;
மீண்டுமோர் ஏவாள் உருவெடுத்து விட்டாள்
இனி புதிய உலகம் படைக்கப்படுகிறது!

- இரா.ச. இமலாதித்தன்

ஆளப்பிறந்தோம்!




கண்டவனெல்லாம் 
ஆண்டுவிட்டு போக
இம்மண் என்ன 
பொதுக்கழிப்பறையா?
ஆண்டாண்டு காலமாய்
ஆண்டபரம்பரை போதையேற்றி
எங்களுக்குள் பகையை மூட்டி
குருதிக்காட்டில் சதைகள் தின்று
ஏப்பம் விட்டது போதும்;
விபச்சாரக்கூடம் போல
நீயும் எத்தனை காலம் தான்
எங்கள் மீதேறி அனுபவிப்பாய்?
எம் மொழி தெரியாத ஆண்டவன் 
இனி இங்கே தேவையேயில்லை;
கூத்தாடிகளின் கூடாரமென
மாறிப்போன அரசை அகற்றி
நாங்களே ஆண்டு கொள்கிறோம்;
தமிழ்க்கடலோரம் 
நாள்தோறும் அரங்கேறும் 
மரண ஓலங்களின் அலறலை மறந்து
காலம் பார்த்து காய் நகர்த்தும்
காலாவதியான காளான்களெல்லாம் 
மிதிபடாமல் ஒதுங்கியே இருங்கள்;
நாகம் கொல்லும் கருடன் போல
நாங்களிலிருக்கிறோம்;
ஆம், இது செந்தமிழர் மண்
ஆள நாங்களிலிருக்கிறோம்!

- இரா.ச. இமலாதித்தன்

ரகசியம்!




உள்ளுணர்வுகளை 
ஆழமாக உணர்கிறேன்; 
ஆழ்மனதோடும் 
அடைக்கலமாகிறேன்;
பிரபஞ்சத்தையே 
தழுவிக்கொள்கிறேன்;
வெட்டவெளிக்குள்
இருளுமில்லை; 
வெளிச்சமுமில்லை;
காலமென்ற மாயையை
கனப்பொழுதில் கடக்கிறேன்;
கனவும் நிழலும் இணையும் 
மூன்றாம் புள்ளியில் 
ஒன்றாய் குவிகிறேன்;
எண்ணங்களின் முடிவிலி அறிய
என்னுள் நுழைகிறேன்;
திமிரியெழும் 
இரு கொம்புகள் உடைக்கிறேன்;
ரகசியங்களின் சிறகுகளை விரித்து
மேலே பறக்கிறேன்; 
இரு கண்களுக்கிடையே 
சிக்கிய குறிக்குள் விழுந்து 
உன்னை அறிகிறேன்;
கருப்பும் சிவப்பும் ஒன்றென 
உண்மை தெரிகிறேன்;
எண் போல
நீ
இதுவரையிலும்
என் போல
வரையறுக்கப்படவே இல்லை!

- இரா.ச. இமலாதித்தன்

இது நீங்கள் நினைக்கும் அதுவல்ல!



பொதுவாக இப்போதெல்லாம்
அதிகமாய் சிரிப்பதில்லை,
மெல்லச்சிமிட்டி என்னை நீ கடக்கும்
அந்த சின்னஞ்சிறு விழிகளுக்குள்
கடந்தகால துன்பவியல் சம்பங்களில்
தொலைத்த புன்னகையை மீட்கிறேன்;
பேரிருளில் வியாபித்திருக்கும்
நட்சத்திரக்கூட்டங்கள் போல
விரவிகிடக்கும் உன் கூந்தல் வானில்
கயல்கள் நீந்தி கொண்டிருக்க,
இமைகளென்ற என் வலைகளுக்குள்
கட்டியிழுக்காமலேயே
அவையெல்லாம் துள்ளி விழுகின்றன;
இங்கு வசமாய் மாட்டியது வலைதானென
புரிந்து கொண்ட பின்னாலும்
நீ அனுதாப படாமல் வெட்கப்படுகிறாய்,
அன்புக்குள் சிக்கிக்கொண்டதை பார்த்து
ஏளனமாய் உதட்டோரமும் சிரிக்கிறாய்,
உன் ஒழுங்கற்ற பற்வரிசையும் கூட
தனித்த பேரழகு தான்;
மெல்லிய நடை போடும் தரிசனத்தை
மெதுமெதுவாய்
ரசித்துக்கொண்டிருக்கிறேன்
என்னை தொலைத்து உன்னுள்;
நிச்சயமாய்
இது நீங்கள் நினைக்கும் அதுவல்ல!

- இரா.ச. இமலாதித்தன்

சினம் கொள்!



கோமாளிகளால் ஆளப்படும்
பயங்கரவாத அரசுகளால்
கொல்லப்பட்ட அனிதா
யாரோ ஒருத்தியல்ல;
நாளை உங்கள் வீட்டிலும்
யாரோ ஒருத்தி
அனிதாவாக மாறக்கூடும்;
ப்ளூவேல் மட்டுமல்ல,
நீட்டும் கூட
தற்கொலை செய்ய வைக்கும்
வெறியர்களின் விளையாட்டு தான்;
இனியும் தாமதம் ஏன்?
தமிழா,
அறம் காக்க சினம் கொள்!

- இரா.ச.இமலாதித்தன்

கல்வி!




வறட்டு கெளரவத்திற்காகவும்,
ஊர் பெருமைக்காவும்,
சுய தம்பட்டத்திற்காகவும்,
எத்தனையோ ஆயிரங்களை செலவழித்து
மெட்ரிக்குலேசன் கான்வென்ட் பள்ளிகளில்
எல்.கே.ஜி. என்ற மூன்றெழுத்தை படிக்க வைக்க
முண்டியடித்து சேர்க்க துடிக்கும்
முட்டாள்களின் பிள்ளைகளை மட்டும்
அறிவாளியாக்கி விடுவார்களா,
பொழுதுபோக்குக்காக
வெறும் சில ஆயிரம்ரூபாய் சம்பளம் வாங்கும்
அரைகுறையாக டிகிரி முடித்த மிஸ்கள்?
பாவம் அந்த பிஞ்சுகள்
காலம் முழுக்க நம்மை போல
குடும்ப பாரம் சுமக்க கூடும்;
இந்த மூன்று வருட பால்யத்தையாவது
அவர்களுக்காக அனுபவிக்க விடுங்கள்
சுமைகள் மறந்து சுகமாய் கொஞ்சம்
வாழ்ந்து பார்க்கட்டும்!

- இரா.ச.இமலாதித்தன்

விதைகளெல்லாம் விருட்சமாகும்!



முப்படைகளோடு களமாடியும்
முதுகோரம் துரோகத்தின் உச்சம்;
எதிரேழு நாடுகளின் சூழ்ச்சியால்
முடக்கப்பட்ட முள்ளிவாய்க்கால்;
இனவழிப்பின் அடையாளமாய்
இங்கே நினைவு முற்றம்;
மெளனித்திருக்கும் ஆயுதங்களால்
உளவியல் தாக்குதலில்
வற்றி போனது நந்திக்கடல்;
காரிருளில் நட்சத்திரங்களாக
கரும்புலிகளின் காட்சிகளுக்கிடையே
நிச்சயமொரு நாள்
விதைகளெல்லாம் விழித்தெழுந்து
திரிகோணமலையெங்கும்
விருட்சங்களாக வளர்ந்து நிற்கும்!

- இரா.ச. இமலாதித்தன்


(எங்கள் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்கிய ஐரோப்பிய ஒன்றியத்திற்கு நன்றி!)

நானும் நீ!




இத்தனை வருடங்களில்
எத்தனை முறை இதே தேதியை
கிழித்தேனென தெரியவில்லை;
பனிரெண்டு எண்களுக்குள்ளான
நெடுந்தூர ஓட்டக்களத்தில்
ஆரம்பித்த இடம் தெரியாமல்
ஆரம் போல சுற்றிக்கொண்டிருக்கும்
கடிகார முட்களோடு முட்டி மோதி
கோடிக்கணக்கான நாழிகைகளை
என்னுள் விழுங்கிருக்கிறேன்;
இரவும் பகலும் கடந்த
ஒவ்வொரு பொழுதுகளிலும்
ஏதோவொரு கனவுகளோடு
எதையெதையோ தொடர்பு படுத்தி
என்னையே தொலைத்திருக்கிறேன்;
வரையறையற்ற காலமெனும்
நிர்ணயிக்க முடியாத மாயைக்குள்
நிரந்தரமில்லாத இவ்வாழ்க்கைக்காக
யாராகவோ தான் உருமாறி கிடக்கிறேன்;
இவையெல்லாம் நிச்சயம் நானல்ல
முடிவிலியான காலம்
இன்று நானாக இருக்கிறது;
நேற்றோ நாளையோ
நீங்களாக கூட இருக்கலாம்!

- இரா.ச. இமலாதித்தன்

அவனும் நானும்!






















உயிரற்றதாக வரையறுக்கப்பட்ட

எல்லாவற்றிற்குள்ளும்
ஓர் உயிரை உணர்ந்த பின்னால்
ரத்தமும் சதையுமான
துர்நாற்றமடிக்கும் இவ்வுடலிலுள்ள வாலை 
எப்போது தொலைத்தேனென தெரியாமலேயே
தலை வரை நீண்ட முதுகெலும்பிற்குள்
என்னுயிரை தேடி பயணிக்கிறேன்;
இடை மறித்து
அவனென் கண்களை உற்று நோக்கி
ஏதேதோ சொல்கிறான்;
ஒலிக்கு தானே, தேவ பாஷை?
அவனோ ஒளியில் உரையாடுகிறான்;
நான் என்பதை
தேடவா? தொலைக்கவா?யென
அவனிடம் கேட்காமலே
கவனித்தலின் கடைசி புரிதலில்
சட்டென பதிலைச் சொல்லி
கடந்து போகிறான், மீண்டும் என்னுள்;
அவனும் நானும் வேறல்ல தான் போல!

- இரா.ச. இமலாதித்தன்

காதலும் கடந்து போகும்!



உன் பெரிய விழிகளுக்குள் தொலைத்தவற்றை
மீட்டெடுப்பது கொஞ்சம் சிரமமாய் இருக்கிறது;
சிதைக்கப்படாத உன் புருவங்களை போல
படர்ந்து கிடக்கிறது கடந்த கால நினைவுகளெல்லாம்;
என்னுள் ஆழமாக பதிந்து போன
உன் சிரிப்பொலியை ஞாபகப்படுத்துவதற்காகவே
தினமும் யாராவது என்னை கடந்து போகிறார்கள்;
உன் உருவத்தை போன்ற யாரை பார்த்தாலும்
சட்டெனெ படபடக்கிறது என்னுடல்;
அன்பென்ற ஒற்றைப்புள்ளியில் இணைந்திருந்த
ஆயிர கணக்கான நாட்கெளெல்லாம்
நொடிப்பொழுதில் கிழித்தெறியப்பட்டது
உன் குடும்பத்தினரின் நாட்காட்டியில்;
இது காதல் தோல்வியல்ல
என்னைவிட நீ அதிகமாய் எதிர்பார்த்த
நம்மிருவரின் திருமணத்திற்கு பின்பான
எதிர்கால வாழ்வியலின் தோல்வி;
என்றோ பிறக்க போகும் நம் குழந்தைக்கு
செந்தமிழில் பெயரை தேர்ந்தெடுக்கச் சொல்லி
ஒவ்வொரு நாளும் வற்புறுத்தி கொண்டிருந்தாய்;
எத்தனையோ சின்னச்சின்ன விசயங்களில்
திருமணத்திற்கு பிறகான நாட்களை
எப்படி வாழவேண்டுமென்று
கற்பனையால் கணக்கிட்டு வைத்திருந்தாய்;
இப்படி எத்தனையோ கனவுகளை கலைத்துவிட்டு
 நீயோ வேறு யாருடனோ  மணமுடித்து
வாழ தொடங்கி விட்டாய், குடும்பச்சூழலென்று;
நனோ மறக்கவியலா உன் நினைவுகளை சுமந்து
அன்பளிப்பாய் நீ கொடுத்த பெருஞ்சோகம் மறைத்து
முன்பை விட இன்னும் அதிகமாக சிரித்துக்கொண்டே
நடிக்க பழகி கொண்டிருக்கிறேன் - இந்த
காதலும் கடந்து போகின்ற அந்த நாட்களுக்காக!

- இரா.ச.இமலாதித்தன்

புன்னகை பூவே!



பெண்ணின் புன்னகை பற்றி வர்ணித்த
எத்தனையோ கவிஞர்களின்
வார்த்தைகளெல்லாம் உயர்வுநவிற்சி புனைவென்று
கடந்து சென்று கொண்டிருந்த ஏதோவொரு நாளில்
என் கடந்த கால எண்ணங்களையெல்லாம்
தொலைய வைப்பதற்காகவே
நீ சிரித்து தொலைத்து விட்டாய்;
உதடுகளுக்கும் பற்களுக்கும் போட்டியாக
கண்களும் சிரித்து கொண்டிருக்கும் - அந்த
நிசப்தமான பெரிய புன்னகையை கண்ட பிறகே
என் கண்களிரண்டும் மோட்சமடைந்திருக்க கூடும்;
உன் சிரிப்பினில் எத்தனை பேரின் உடல்கள்
மீண்டும் உயிர்த்தெழுந்ததென தெரியவில்லை;
குறைந்த பட்சம் என்னருகிலாவது இனி
அந்த மந்திரப்புன்னகையை சிதற விடாமலிரு
ஏற்கனவே சின்னாபின்னமாகித்தான் கிடக்கிறது
இந்த சின்னஞ்சிறு மனது!

- இரா.ச.இமலாதித்தன்

மெல்லத் தொலைகிறேன்!


















-01-

நமக்கென ஓர் உலகை
இப்பிரபஞ்சத்தில் உருவாக்கி கொள்ள
இறைவன் எனக்கொரு வரமொன்றை தந்துவிட்டால்,
அவ்வுலகையே
அன்பால் ஆட்சி செய்யும் பேரரசி நீ தான்!


-02-

தொலைவில் இதழ்கள் புன்னகைப்பதும்,
அருகில் விழிகள் புன்னகைப்பதும்,
இதுபோலவே கடக்கிறது
நம் பலமணிநேர உரையாடல்,
ஓரிரு காதல்மொழி வார்த்தைகளால்!

-03-

வறண்ட நிலத்தில் மண்வாசம் வீசும்
கடும் வெயில் கால மழை போலவே,
உன் பார்வையால்
சில்லென தென்றலை தான் வீசி போகிறாய்,
புயலடித்து கிடக்கிறது மனது!

-04-

உன் கண்ணிசைவுக்காக
காத்திருக்கும் என்னுயிரும்,
நீ உதிர்க்கும் புன்னகையால்
பிரபஞ்சத்தில் பெருவெடிப்பை உருவாக்கி
நமக்கான புதுபூமியை படைக்கிறது!

-05-

உன் காதோரம் எச்சில் சிதற
முத்தமிட்டு கதை பேசிக்கொண்டிருக்கிறேன்;
நீ சிணுங்கும் அந்த நொடிகளில்
காதோரமடல்களை கடித்து
உன்னை திண்ண முயல்கிறேன்;
நீயோ என்னை கொல்கிறாய்!

- இரா.ச.இமலாதித்தன்

மெல்லிய புன்னகையில்!





-01-

உன் மூச்சுக்காற்று கலந்த அரவணைப்பில்
எனக்கான ஓர் உலகம் சுழலத்தொடங்கி
உன்னுள் அடங்கும்;
இனி நமக்கான இந்த பிரபஞ்சமே
சிறுதுளியாய் மாறிப்போகும்!

-02-

வாழ்நாளெல்லாம்
உன் கூந்தலை என் தலையணையாக்கி
தூக்கம் தொலைத்த இரவுகளில்
உன் கூந்தலுக்குள்
என் மூச்சுக்காற்றை வைத்திருக்க ஆசை!

-03-

உதடுகள் உரசாததால்
உரையாடல் ஏதுமில்லை;
ஆனால் தோள்கள் இரண்டும் 
அருகருகே உரசாமலேயே 
பல கதைகள் பேசிக்கொண்டிருக்கின்றன,
மெளனமாய் என்னருகில் அவள்!

-04-

உன் கண்ணிசைவுகளுக்காக காத்திருக்கும்
என் உயிர் மொத்தமும்,
நீ உதிர்க்கும் மெல்லிய புன்னகையால்
ஆயிரம் ஒளியாண்டை
ஒருநொடியில் கடந்து விடுகிறது!

-05-

தனித்தனியான நான் என்பதே
நம்முள் இருப்பதாய்
எனக்கு இதுவரை நினைவிலில்லை;
என்னைவிட உன்னையே
நானாக நினைத்திருக்கிறேன்.
நீ வேறு யாரோயல்ல;
நான் தான்!

- இரா.ச.இமலாதித்தன்

என் பிரபஞ்சமாகிறாய்!
























-01-

தினமும் எத்தனை பெண்களை கடந்தாலும்
நினைவுகளில் நிற்பதில்லை;
பாவம், அவர்களுக்கும் கொஞ்சம் இடம் கொடு;
என்னுள் நீ மட்டுமே ஆக்கிரமித்து விட்டாய்!

-02-

நீ என்னோடு இல்லாத போது
சிலுவையில் அறையப்படுகிறேன்.
நீ அருகில் இருக்கையில் உயிர்த்தெழுகிறேன்.
நான் கடவுளல்ல;
ஆனால் நீயே எல்லாமுமாகிவிட்டாய்!

-03-

என் மடி மீது சாய்ந்து
மெளன புன்னைகையில்
பல கதைகள் பேசி என்னை பார்க்கிறாய்;
நான்கு யுகத்தை நொடியில் கடந்து
உன்னுள் தொலைகிறேன்
நீயே என் பிரபஞ்சமாகிறாய்!

-04-

உன்னாலேயே குழம்பி நிற்கிறேன்;
நீயே தெளிவுற செய்கிறாய்.
என்னுளேயே கடந்து தவிக்கிறேன்;
நீயே மீட்கிறாய்;
இது உளியின் வலி தாங்கும்
சிலையின் வேதனை!

-05-

என் தோள் சாய்ந்து நீ உறங்கும்போது,
உன் நெடுந்கூந்தலுக்குள் முகம் பதித்து
நான் தொலைந்து போகிறேன்.
மீட்காதே;
உன்னுள்ளேயே தொலைந்து விடுகிறேன்!

- இரா.ச.இமலாதித்தன்

அவளோடு அருகில்!




-01-

உன்னருகிலேயே வாழ்நாளெல்லாம்
இருந்து விட்டால் போதும்;
சொர்க்கம் என்ற ஒன்றே பொய்யாகி போகும்.
நீயும் நானும்
இங்கேயே புதுக்கடவுளாகி போவோம், வா!

-02-

நீ எது சொன்னாலும் அது பெருங்கவிதை;
உன் உதடுகள் வழியே
உதிரும் வார்த்தைகள், புது இலக்கியம்;
நீ என் தாய்க்கு மட்டுமமல்ல;
தமிழன்னைக்கே மருமகள்!

-03-

ஒவ்வொரு நாளும் என் உடலுக்கும்
உயிருக்குமான உறவை,
உன்னால் தானே உயிர்பித்து கொள்கிறது மனது;
என் அனுமதி இல்லாமலேயே
எப்போது நீ என்னுயிரானாய்?!

-04-

வாழ்நாளெல்லாம்
உன் கூந்தலை என் தலையணையாக்கி
தூக்கம் தொலைத்த இரவுகளில்
உன் கூந்தலுக்குள்
என் மூச்சுக்காற்றை வைத்திருக்க ஆசை!

-05-

உதடுகள் உரசாததால்
உரையாடல் ஏதுமில்லை;
ஆனால் தோள்கள் இரண்டும் அருகருகே
உரசாமலேயே பல கதைகள் பேசிக்கொண்டிருக்கின்றன,
மெளனமாய் என்னருகில் அவள்!

- இரா.ச.இமலாதித்தன்

காதல் சூழ் உலகு!



















-01-

என் மனமெனும் இந்த பிரபஞ்சத்திற்குள்
வெடித்து சிதறும் பெரும்பிரளயத்தால்
உருவாகும் புத்தம்புது கிரகத்திலெல்லாம்
நீயே காதல்சூழ ஆட்சி செய்கிறாய்!

-02-

நீ அருகில் இருக்கும்
சின்னஞ்சிறு நொடிகளெல்லாம்
பல மணி நேரமாக நீண்டுவிடாதாயென
ஏங்கி கிடக்கும் இந்த கடிகார முட்களின்
தவத்தை கலைத்துவிடாமல்
இன்னும் கொஞ்சம் நேரம் என்னோடு இரு!

-03-

கடந்த காலமெல்லாம்
காலாவதியான நாட்காட்டியில்,
உன் நினைவுகள் மட்டுமே
கிழிக்கப்படாமலே கிடக்கிறது;
வருங்காலமெல்லாம் நீயாகி போனாய்
என் வருங்காலமே!

- 04-

நேற்றை தொலைத்த இன்று போலவே,
நான் என்பதும்
உன்னுள் தொலைந்து கொண்டிருக்கிறது;
நீ இருக்கிறாய்
உன்னுள் நானும் இருக்கிறேன்;
தொலைந்த என்னை மீட்காதே!

-05-

என் இதயத்தை
உன் இதழ்வழி வார்த்தைகளால்
கிழித்தெறிந்தாய்;
உன் புறக்கணிப்புக்கான
என் சோகங்களையெல்லாம்
என்னுள்ளேயே
சேகரித்து வைத்திருக்கிறேன்;
நாளை உனக்கான நிழலை
இதய கூரையில் தருவேன்;
என் இறுதி நாளுக்கான ஓலையை
இன்றே குறித்துக்கொள்;
நான் உன்னால் இறக்க நேரிட்டாலும்,
உன்னுள் வாழ்வதற்காகவே
பிரத்தனை செய்வேன்
என்னுடலை உடைத்து!

- இரா.ச.இமலாதித்தன்

அவளுள் தொலையும் காதல்!





-01-

என் கவலைகளுக்கெல்லாம்
நீயே ஓர் ஆறுதல்;
சோகத்திலும் கோபத்திலும்
நான் தொலையும் போதெல்லாம்
உன் வார்த்தைகளால் என்னை மீட்கிறாய்.
நீதான் என் தேவதை!

-02-

கடவுளிடம் என் வேண்டுதலெல்லாம்
உனக்காகவே இருக்கிறது.
நீ என்னை பெற்றவளும் இல்லை;
நான் உன்னை பெற்றவனும் இல்லை.
நாம் நமக்குள்ளேயே காதலை பெற்றவர்கள்!

-03-

ஐயிரு விரல்களின் தீண்டல்களோடு,
உன்னிரு விழிகளின் சீண்டல்களுமாக,
நீ என்னருகில் இருக்கும்போது
கொஞ்சகொஞ்சமாய் தொலைத்த என்னை
நீயே மீட்டுக்கொடு!

-04-

சிரிப்பதும் சிந்திப்பதுமாக
உன் நினைவுகளோடே கடக்கும்
இந்த தனிமைகளெல்லாம்,
உனக்காகவே இப்படி மாறி போனதாக
வெகு எளிதாக புரிந்து கொள்கிறது உயிரே!

-05-

என்னவளிடம்
நெடுநேரம் பேசி முடிக்கையில்
முத்தம் ஒன்றை
கண்களால் தந்துவிட்டு செல்கிறாள்;
வரம் கொடுக்கும் தேவதை யாரென தெரியாது;
என் தேவதை இவள்!

- இரா.ச.இமலாதித்தன்